எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஈவான் மோர்கன், சிறப்பு எழுத்தாளர்கட்டுரைகள்

தெய்வீக வரிசைப்படுத்துதல்

நான் மிகவும் குழப்பத்தில் இருந்தபடியால் இரவில் விழித்துக் கொண்டேன், அங்கும் இங்குமாக நடந்து கொண்டே ஜெபித்தேன். உண்மையில், எல்லாவற்றையும் ஜெபத்தில் தேவனிடம் கொடுத்துவிடும் அணுகுமுறை எனக்கிருந்ததில்லை, ஆனால் கேள்வி கேட்கும்படி கோபத்தில் இருந்தேன். விடுதலை ஒன்றையும் காணாதபடியால், என்னுடைய அறையின் அகன்ற ஜன்னலின் அருகில் அமர்ந்தபடி, இரவு நேர வானத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தெளிவான இரவு நேரங்களில், மிகவும் நேர்த்தியான வரிசையில் காணப்படும் மூன்று நட்சத்திரங்களைப் பார்க்கும்படி, எதிர் பாராத விதமாக திருப்பப்பட்டேன். எனக்கு வானியலைப் பற்றி, போதிய அளவு தெரியும், ஆகையால், இந்த மூன்று நட்சத்திரங்களும் நூற்றுக் கணக்கான ஒளியாண்டு தொலைவில் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டேன்.

நாம் அந்த நட்சத்திரங்களுக்கு அருகில் செல்லச் செல்ல, அவை சரியான வரிசையில் இல்லாதது போலத் தெரியும். ஆனாலும் என்னுடைய தூரக் கண்ணோட்டத்தில், அவை வானத்தில் கவனமாக அடுக்கப் பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்கின்றேன். அதே நேரத்தில், என்னுடைய வாழ்வை மிக அருகில் இருந்து, தேவன் அதனை எவ்வாறு காண்கின்றார் என்பதையும் உணரமுடிந்தது. அவருடைய மிகப் பெரிய பார்வையில் எல்லாம் மிக நேர்த்தியான வரிசையில் உள்ளன.

அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனுடைய நோக்கத்தைக் குறித்து முழு விளக்கத்தைக் கொடுத்தபின்னர், அவரைப் போற்றி பாடுகின்றார் (ரோம. 11:33-36). அவருடைய வார்த்தைகள் நம்முடைய பார்வையை சர்வ வல்ல தேவனுக்கு நேராகத் திருப்புகின்றது, அவருடைய வழிகள் நம்முடைய புரிந்து கொள்ளலுக்கும், நம்முடைய பார்வைக்கும் அப்பாற்பட்டவை (வ.33). வானத்திலும் பூமியிலும் காணப்படுகின்ற யாவற்றையும் தன் கரத்திலே வைத்துள்ள தேவன், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் நெருக்கமாகவும், அன்போடும் கவனித்து வருகின்றார் (மத். 6:25-34; கொலோ. 1:16).

நம்முடைய காரியங்கள் குழப்பத்தைத் தருவதாகக் காணப்பட்டாலும், அவர் நமக்கு வைத்திருக்கின்ற தெய்வீக திட்டங்கள், நமக்கு நன்மையையும் தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் கொண்டு வரும்படி வெளிப்படும்.

மணியோசை

ஜாண்சன் தன்னுடைய சிறுவயதிலிருந்தே தான் ஒரு கடற்படை தளபதியாக வேண்டுமென கற்பனை செய்தான். இந்த இலக்கினை அடையும்படி, வருடக்கணக்காக, கட்டுப் பாடான வாழ்க்கை முறையையும், தியாகங்களையும் மேற்கொண்டான். அவனுடைய பெலத்தைச் சோதிக்கும் அநேக சோதனைகளைச் சந்தித்தான், பயிற்சியாளர்களால் பொதுவாக “நரக வாரம்” என்று அழைக்கப் படும் பயிற்சியையும் மேற்கொண்டான்.

ஆனால் ஜாண்சனால் அந்தக் கடினமான பயிற்சியை முடிக்க இயலவில்லை. சோர்வடைந்தவனாய், தன்னுடைய காமாண்டரிடமும், பிற பயிற்சியாளர்களிடமும் தான் இந்த பயிற்சியைக் கைவிடப்போவதாக, ஒரு மணியோசையின் மூலம் தெரிவித்தான். அநேகருக்கு இது ஒரு தோல்வியாகத் தோன்றியது. ஆனால் மிகப் பெரிய ஏமாற்றதின் மத்தியிலும், ஜாண்சன் இந்த இராணுவப் பயிற்சியை, தன்னை வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதினான்.

அப்போஸ்தலனாகிய பேதுருவும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்தவன். அவன் தைரியமாக,  “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்” (லூக்.22:33) என்றான். ஆனால் பின்னர் அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்ததால் மனம் கசந்து அழுதான் (வ.60-62). ஆனாலும் அவனுடைய தோல்விகளுக்குப் பின்னால் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். பேதுரு மறுதலிப்பதற்கு முன்பாகவே இயேசு அவனிடம், “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார் (மத். 16:18; லூக். 22:31-32).

நீயும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்து, உன்னைக் குறித்து எதற்கும் உதவாதவன், தகுதியற்றவன் என்று கருதி போராட்டத்தில் இருக்கின்றாயா? தோல்வியின் மணியோசை, தேவன் உனக்கு வைத்திருக்கும் மிகப் பெரிய நோக்கத்தை கண்டுபிடிக்கத் தடையாக இருக்க, அனுமதியாதே.

உங்கள் குரலை உபயோகியுங்கள்

உலகப் பிரசித்திப்பெற்ற ஒரு பியானோ வித்துவானைச் சந்திக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். நான் வயலின், பியானோ ஆகியவைகளை இசைக்கும் ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததாலும், திருச்சபைகளில், மற்றும் பல நிகழ்வுகளில் தனிப்பாடல்களைப் பாடும் வரம் பெற்றிருந்தபடியாலும் இவ்வாய்ப்பானது, எனக்கு அதிக உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது.

நான் அந்த பியானோ வித்துவான் இருக்குமிடத்தை அடைந்தபோது, அவர் கொஞ்சம் தான் ஆங்கிலத்தில் உரையாடுவார் என்பதைக் கண்டு கொண்டேன். அவர், நான் இதுவரை தொட்டேபார்க்காத ஸெல்கோ ஒரு இசைக்கருவியை என்னிடத்தில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் என்னை வாசிக்கச் செய்து தானும் என்னோடு இணைந்து வாசிப்பதாக கூறினார். நான் சில இசைகளை வாசிக்க முயற்சி செய்தேன். என்னுடைய வயலின் பயிற்சியினை பயன்படுத்தி முயற்சித்தேன். ஆனால் இறுதியில் நான் தோற்றுப்போனேன்.

திடீரென நான் விழித்தபோது, இவைகளெல்லாம் ஒரு கனவாகத் தெரிந்தது. இந்த இசைப்பின்னணி என் கனவில் வந்தது உண்மையாகவே நடந்தது போலிருந்தாலும், என் மனமானது ஒரு வாக்கியத்தை மட்டும் திரும்பத்திரும்ப யோசித்துக்கொண்டே இருந்தது. 'உனக்கு பாடத்தெரியும் என்று நீ ஏன் அவரிடம் சொல்லவில்லை?".

ஆவிக்குரிய வரங்களையும், இயற்கையாக நம்மிடம் உள்ள தாலந்துகளையும் தேவன் நம்முடைய வாழ்வில் அதிகமாக்கி அதை மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படி செய்கிறார் (1 கொரி. 12:7). நம்மிடத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஆவிக்குரிய வரங்களை, தேவனுடைய வார்த்தையினாலும், மற்றவர்களுடைய ஞானமான ஆலோசனையின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். அவருடைய தீர்மானத்தின்படி (வச. 11) பரிசுத்த ஆவியானவர் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சிந்தித்து, பவுல் அப்போஸ்தலன் சொன்னதை ஞாபகத்தில் வைத்து செயல்படவேண்டும்.

மற்ற விசுவாசிகளுக்கு இயேசுவின் மூலம் பயன் உண்டாகவும் தேவனுடைய நாம மகிமைக்காகவும் நமது குரல் வளத்தினை பயன்படுத்தவேண்டும்.

இராக்காவல்களில்

கொலராடோவில் உள்ள மலைகள் கண்ணுக்கு விருந்தளிப்பவை. என் கல்லூரி நாட்களில், கோடை விடுமுறையின்போது அங்கிருக்கும் விருந்தினர் பண்ணை ஒன்றில் நான் வேலைசெய்வதுண்டு. அங்கு எனக்கு இராக்காவல் பணி. சுழற்சி முறையில் நாங்கள் வேலை செய்வோம். பண்ணையில் தங்கும் விருந்தினர்களைப் பாதுகாக்கும் விதத்தில், காட்டுத்தீ பரவினால் அதுகுறித்து எச்சரிப்பதுதான் எங்களுடைய வேலை. ஆரம்பத்தில் அது களைப்பூட்டுகிற, செய்நன்றியறியாத ஒரு வேலையாகத் தெரிந்தது. பிறகுதான் நான் அமர்ந்திருந்து, தேவ பிரசன்னத்தின் மகத்துவத்தை எண்ணிப்பார்த்து, ஆறுதலடைவதற்கான ஓர் அற்புதமான அனுபவமாக அது அமைந்தது.

ராஜாவாகிய தாவீது தேவபிரசன்னத்திற்காக ஏங்கினார் (சங்கீதம் 63:1), தன் படுக்கையிலும் “இராச்சாமங்களிலும்” தேவபிரசன்னத்தை வாஞ்சித்தார் (வச 6). தாவீது கலக்கத்தில் இருந்தார் என்பதை அந்தச் சங்கீதம் அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. தன் மகன் அப்சலோம் செய்த கலகம்தான் அந்தக் கலக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கவேண்டும். ஆனாலும் தேவனுடைய “செட்டைகளின் நிழலில்,” அவருடைய வல்லமையிலும் பிரசன்னத்திலும் ஆதரவும் புத்துணர்வும் கிடைக்கிற தருணமாக அந்த இரவு மாறியது. வசனம் 7.

உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனையோ நெருக்கடியோ இருக்கலாம், இராக்காவல்கள் உங்களுக்கு ஆறுதலளிக்காமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையின் “அப்சலோம்கள்” உங்களுடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் மிகுந்த பாரத்தை உண்டாக்கியிருக்கலாம். அல்லது குடும்பச்சுமை, வேலைச்சுமை, பணச்சுமை போன்றவை உங்களுடைய இளைப்பாறுதலின் நேரத்தைப் பாரமாக்கலாம். தூக்கத்தைக் கெடுக்கும் இத்தகைய தருணங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடவும், அவரைப் பற்றிப் பிடித்துக்கொள்ளவும் உதவட்டும். அவருடைய அன்பின் கரம் உங்களைத் தாங்கும்படி அனுமதியுங்கள். வசனம் 8.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.