எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஈவான் மோர்கன், சிறப்பு எழுத்தாளர்கட்டுரைகள்

தெய்வீக வரிசைப்படுத்துதல்

நான் மிகவும் குழப்பத்தில் இருந்தபடியால் இரவில் விழித்துக் கொண்டேன், அங்கும் இங்குமாக நடந்து கொண்டே ஜெபித்தேன். உண்மையில், எல்லாவற்றையும் ஜெபத்தில் தேவனிடம் கொடுத்துவிடும் அணுகுமுறை எனக்கிருந்ததில்லை, ஆனால் கேள்வி கேட்கும்படி கோபத்தில் இருந்தேன். விடுதலை ஒன்றையும் காணாதபடியால், என்னுடைய அறையின் அகன்ற ஜன்னலின் அருகில் அமர்ந்தபடி, இரவு நேர வானத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தெளிவான இரவு நேரங்களில், மிகவும் நேர்த்தியான வரிசையில் காணப்படும் மூன்று நட்சத்திரங்களைப் பார்க்கும்படி, எதிர் பாராத விதமாக திருப்பப்பட்டேன். எனக்கு வானியலைப் பற்றி, போதிய அளவு தெரியும், ஆகையால், இந்த மூன்று நட்சத்திரங்களும் நூற்றுக் கணக்கான ஒளியாண்டு தொலைவில் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டேன்.

நாம் அந்த நட்சத்திரங்களுக்கு அருகில் செல்லச் செல்ல, அவை சரியான வரிசையில் இல்லாதது போலத் தெரியும். ஆனாலும் என்னுடைய தூரக் கண்ணோட்டத்தில், அவை வானத்தில் கவனமாக அடுக்கப் பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்கின்றேன். அதே நேரத்தில், என்னுடைய வாழ்வை மிக அருகில் இருந்து, தேவன் அதனை எவ்வாறு காண்கின்றார் என்பதையும் உணரமுடிந்தது. அவருடைய மிகப் பெரிய பார்வையில் எல்லாம் மிக நேர்த்தியான வரிசையில் உள்ளன.

அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனுடைய நோக்கத்தைக் குறித்து முழு விளக்கத்தைக் கொடுத்தபின்னர், அவரைப் போற்றி பாடுகின்றார் (ரோம. 11:33-36). அவருடைய வார்த்தைகள் நம்முடைய பார்வையை சர்வ வல்ல தேவனுக்கு நேராகத் திருப்புகின்றது, அவருடைய வழிகள் நம்முடைய புரிந்து கொள்ளலுக்கும், நம்முடைய பார்வைக்கும் அப்பாற்பட்டவை (வ.33). வானத்திலும் பூமியிலும் காணப்படுகின்ற யாவற்றையும் தன் கரத்திலே வைத்துள்ள தேவன், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் நெருக்கமாகவும், அன்போடும் கவனித்து வருகின்றார் (மத். 6:25-34; கொலோ. 1:16).

நம்முடைய காரியங்கள் குழப்பத்தைத் தருவதாகக் காணப்பட்டாலும், அவர் நமக்கு வைத்திருக்கின்ற தெய்வீக திட்டங்கள், நமக்கு நன்மையையும் தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் கொண்டு வரும்படி வெளிப்படும்.

மணியோசை

ஜாண்சன் தன்னுடைய சிறுவயதிலிருந்தே தான் ஒரு கடற்படை தளபதியாக வேண்டுமென கற்பனை செய்தான். இந்த இலக்கினை அடையும்படி, வருடக்கணக்காக, கட்டுப் பாடான வாழ்க்கை முறையையும், தியாகங்களையும் மேற்கொண்டான். அவனுடைய பெலத்தைச் சோதிக்கும் அநேக சோதனைகளைச் சந்தித்தான், பயிற்சியாளர்களால் பொதுவாக “நரக வாரம்” என்று அழைக்கப் படும் பயிற்சியையும் மேற்கொண்டான்.

ஆனால் ஜாண்சனால் அந்தக் கடினமான பயிற்சியை முடிக்க இயலவில்லை. சோர்வடைந்தவனாய், தன்னுடைய காமாண்டரிடமும், பிற பயிற்சியாளர்களிடமும் தான் இந்த பயிற்சியைக் கைவிடப்போவதாக, ஒரு மணியோசையின் மூலம் தெரிவித்தான். அநேகருக்கு இது ஒரு தோல்வியாகத் தோன்றியது. ஆனால் மிகப் பெரிய ஏமாற்றதின் மத்தியிலும், ஜாண்சன் இந்த இராணுவப் பயிற்சியை, தன்னை வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதினான்.

அப்போஸ்தலனாகிய பேதுருவும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்தவன். அவன் தைரியமாக,  “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்” (லூக்.22:33) என்றான். ஆனால் பின்னர் அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்ததால் மனம் கசந்து அழுதான் (வ.60-62). ஆனாலும் அவனுடைய தோல்விகளுக்குப் பின்னால் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். பேதுரு மறுதலிப்பதற்கு முன்பாகவே இயேசு அவனிடம், “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார் (மத். 16:18; லூக். 22:31-32).

நீயும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்து, உன்னைக் குறித்து எதற்கும் உதவாதவன், தகுதியற்றவன் என்று கருதி போராட்டத்தில் இருக்கின்றாயா? தோல்வியின் மணியோசை, தேவன் உனக்கு வைத்திருக்கும் மிகப் பெரிய நோக்கத்தை கண்டுபிடிக்கத் தடையாக இருக்க, அனுமதியாதே.

உங்கள் குரலை உபயோகியுங்கள்

உலகப் பிரசித்திப்பெற்ற ஒரு பியானோ வித்துவானைச் சந்திக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். நான் வயலின், பியானோ ஆகியவைகளை இசைக்கும் ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததாலும், திருச்சபைகளில், மற்றும் பல நிகழ்வுகளில் தனிப்பாடல்களைப் பாடும் வரம் பெற்றிருந்தபடியாலும் இவ்வாய்ப்பானது, எனக்கு அதிக உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது.

நான் அந்த பியானோ வித்துவான் இருக்குமிடத்தை அடைந்தபோது, அவர் கொஞ்சம் தான் ஆங்கிலத்தில் உரையாடுவார் என்பதைக் கண்டு கொண்டேன். அவர், நான் இதுவரை தொட்டேபார்க்காத ஸெல்கோ ஒரு இசைக்கருவியை என்னிடத்தில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் என்னை வாசிக்கச் செய்து தானும் என்னோடு இணைந்து வாசிப்பதாக கூறினார். நான் சில இசைகளை வாசிக்க முயற்சி செய்தேன். என்னுடைய வயலின் பயிற்சியினை பயன்படுத்தி முயற்சித்தேன். ஆனால் இறுதியில் நான் தோற்றுப்போனேன்.

திடீரென நான் விழித்தபோது, இவைகளெல்லாம் ஒரு கனவாகத் தெரிந்தது. இந்த இசைப்பின்னணி என் கனவில் வந்தது உண்மையாகவே நடந்தது போலிருந்தாலும், என் மனமானது ஒரு வாக்கியத்தை மட்டும் திரும்பத்திரும்ப யோசித்துக்கொண்டே இருந்தது. 'உனக்கு பாடத்தெரியும் என்று நீ ஏன் அவரிடம் சொல்லவில்லை?".

ஆவிக்குரிய வரங்களையும், இயற்கையாக நம்மிடம் உள்ள தாலந்துகளையும் தேவன் நம்முடைய வாழ்வில் அதிகமாக்கி அதை மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படி செய்கிறார் (1 கொரி. 12:7). நம்மிடத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஆவிக்குரிய வரங்களை, தேவனுடைய வார்த்தையினாலும், மற்றவர்களுடைய ஞானமான ஆலோசனையின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். அவருடைய தீர்மானத்தின்படி (வச. 11) பரிசுத்த ஆவியானவர் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சிந்தித்து, பவுல் அப்போஸ்தலன் சொன்னதை ஞாபகத்தில் வைத்து செயல்படவேண்டும்.

மற்ற விசுவாசிகளுக்கு இயேசுவின் மூலம் பயன் உண்டாகவும் தேவனுடைய நாம மகிமைக்காகவும் நமது குரல் வளத்தினை பயன்படுத்தவேண்டும்.

இராக்காவல்களில்

கொலராடோவில் உள்ள மலைகள் கண்ணுக்கு விருந்தளிப்பவை. என் கல்லூரி நாட்களில், கோடை விடுமுறையின்போது அங்கிருக்கும் விருந்தினர் பண்ணை ஒன்றில் நான் வேலைசெய்வதுண்டு. அங்கு எனக்கு இராக்காவல் பணி. சுழற்சி முறையில் நாங்கள் வேலை செய்வோம். பண்ணையில் தங்கும் விருந்தினர்களைப் பாதுகாக்கும் விதத்தில், காட்டுத்தீ பரவினால் அதுகுறித்து எச்சரிப்பதுதான் எங்களுடைய வேலை. ஆரம்பத்தில் அது களைப்பூட்டுகிற, செய்நன்றியறியாத ஒரு வேலையாகத் தெரிந்தது. பிறகுதான் நான் அமர்ந்திருந்து, தேவ பிரசன்னத்தின் மகத்துவத்தை எண்ணிப்பார்த்து, ஆறுதலடைவதற்கான ஓர் அற்புதமான அனுபவமாக அது அமைந்தது.

ராஜாவாகிய தாவீது தேவபிரசன்னத்திற்காக ஏங்கினார் (சங்கீதம் 63:1), தன் படுக்கையிலும் “இராச்சாமங்களிலும்” தேவபிரசன்னத்தை வாஞ்சித்தார் (வச 6). தாவீது கலக்கத்தில் இருந்தார் என்பதை அந்தச் சங்கீதம் அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. தன் மகன் அப்சலோம் செய்த கலகம்தான் அந்தக் கலக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கவேண்டும். ஆனாலும் தேவனுடைய “செட்டைகளின் நிழலில்,” அவருடைய வல்லமையிலும் பிரசன்னத்திலும் ஆதரவும் புத்துணர்வும் கிடைக்கிற தருணமாக அந்த இரவு மாறியது. வசனம் 7.

உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனையோ நெருக்கடியோ இருக்கலாம், இராக்காவல்கள் உங்களுக்கு ஆறுதலளிக்காமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையின் “அப்சலோம்கள்” உங்களுடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் மிகுந்த பாரத்தை உண்டாக்கியிருக்கலாம். அல்லது குடும்பச்சுமை, வேலைச்சுமை, பணச்சுமை போன்றவை உங்களுடைய இளைப்பாறுதலின் நேரத்தைப் பாரமாக்கலாம். தூக்கத்தைக் கெடுக்கும் இத்தகைய தருணங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடவும், அவரைப் பற்றிப் பிடித்துக்கொள்ளவும் உதவட்டும். அவருடைய அன்பின் கரம் உங்களைத் தாங்கும்படி அனுமதியுங்கள். வசனம் 8.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.