Evan Morgan | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஈவான் மோர்கன், சிறப்பு எழுத்தாளர்கட்டுரைகள்

தெய்வீக வரிசைப்படுத்துதல்

நான் மிகவும் குழப்பத்தில் இருந்தபடியால் இரவில் விழித்துக் கொண்டேன், அங்கும் இங்குமாக நடந்து கொண்டே ஜெபித்தேன். உண்மையில், எல்லாவற்றையும் ஜெபத்தில் தேவனிடம் கொடுத்துவிடும் அணுகுமுறை எனக்கிருந்ததில்லை, ஆனால் கேள்வி கேட்கும்படி கோபத்தில் இருந்தேன். விடுதலை ஒன்றையும் காணாதபடியால், என்னுடைய அறையின் அகன்ற ஜன்னலின் அருகில் அமர்ந்தபடி, இரவு நேர வானத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். தெளிவான இரவு நேரங்களில், மிகவும் நேர்த்தியான வரிசையில் காணப்படும் மூன்று நட்சத்திரங்களைப் பார்க்கும்படி, எதிர் பாராத விதமாக திருப்பப்பட்டேன். எனக்கு வானியலைப் பற்றி, போதிய அளவு தெரியும், ஆகையால், இந்த மூன்று நட்சத்திரங்களும் நூற்றுக் கணக்கான ஒளியாண்டு தொலைவில் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டேன்.

நாம் அந்த நட்சத்திரங்களுக்கு அருகில் செல்லச் செல்ல, அவை சரியான வரிசையில் இல்லாதது போலத் தெரியும். ஆனாலும் என்னுடைய தூரக் கண்ணோட்டத்தில், அவை வானத்தில் கவனமாக அடுக்கப் பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்கின்றேன். அதே நேரத்தில், என்னுடைய வாழ்வை மிக அருகில் இருந்து, தேவன் அதனை எவ்வாறு காண்கின்றார் என்பதையும் உணரமுடிந்தது. அவருடைய மிகப் பெரிய பார்வையில் எல்லாம் மிக நேர்த்தியான வரிசையில் உள்ளன.

அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனுடைய நோக்கத்தைக் குறித்து முழு விளக்கத்தைக் கொடுத்தபின்னர், அவரைப் போற்றி பாடுகின்றார் (ரோம. 11:33-36). அவருடைய வார்த்தைகள் நம்முடைய பார்வையை சர்வ வல்ல தேவனுக்கு நேராகத் திருப்புகின்றது, அவருடைய வழிகள் நம்முடைய புரிந்து கொள்ளலுக்கும், நம்முடைய பார்வைக்கும் அப்பாற்பட்டவை (வ.33). வானத்திலும் பூமியிலும் காணப்படுகின்ற யாவற்றையும் தன் கரத்திலே வைத்துள்ள தேவன், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் நெருக்கமாகவும், அன்போடும் கவனித்து வருகின்றார் (மத். 6:25-34; கொலோ. 1:16).

நம்முடைய காரியங்கள் குழப்பத்தைத் தருவதாகக் காணப்பட்டாலும், அவர் நமக்கு வைத்திருக்கின்ற தெய்வீக திட்டங்கள், நமக்கு நன்மையையும் தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் கொண்டு வரும்படி வெளிப்படும்.

மணியோசை

ஜாண்சன் தன்னுடைய சிறுவயதிலிருந்தே தான் ஒரு கடற்படை தளபதியாக வேண்டுமென கற்பனை செய்தான். இந்த இலக்கினை அடையும்படி, வருடக்கணக்காக, கட்டுப் பாடான வாழ்க்கை முறையையும், தியாகங்களையும் மேற்கொண்டான். அவனுடைய பெலத்தைச் சோதிக்கும் அநேக சோதனைகளைச் சந்தித்தான், பயிற்சியாளர்களால் பொதுவாக “நரக வாரம்” என்று அழைக்கப் படும் பயிற்சியையும் மேற்கொண்டான்.

ஆனால் ஜாண்சனால் அந்தக் கடினமான பயிற்சியை முடிக்க இயலவில்லை. சோர்வடைந்தவனாய், தன்னுடைய காமாண்டரிடமும், பிற பயிற்சியாளர்களிடமும் தான் இந்த பயிற்சியைக் கைவிடப்போவதாக, ஒரு மணியோசையின் மூலம் தெரிவித்தான். அநேகருக்கு இது ஒரு தோல்வியாகத் தோன்றியது. ஆனால் மிகப் பெரிய ஏமாற்றதின் மத்தியிலும், ஜாண்சன் இந்த இராணுவப் பயிற்சியை, தன்னை வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதினான்.

அப்போஸ்தலனாகிய பேதுருவும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்தவன். அவன் தைரியமாக,  “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்” (லூக்.22:33) என்றான். ஆனால் பின்னர் அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்ததால் மனம் கசந்து அழுதான் (வ.60-62). ஆனாலும் அவனுடைய தோல்விகளுக்குப் பின்னால் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். பேதுரு மறுதலிப்பதற்கு முன்பாகவே இயேசு அவனிடம், “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார் (மத். 16:18; லூக். 22:31-32).

நீயும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்து, உன்னைக் குறித்து எதற்கும் உதவாதவன், தகுதியற்றவன் என்று கருதி போராட்டத்தில் இருக்கின்றாயா? தோல்வியின் மணியோசை, தேவன் உனக்கு வைத்திருக்கும் மிகப் பெரிய நோக்கத்தை கண்டுபிடிக்கத் தடையாக இருக்க, அனுமதியாதே.

உங்கள் குரலை உபயோகியுங்கள்

உலகப் பிரசித்திப்பெற்ற ஒரு பியானோ வித்துவானைச் சந்திக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். நான் வயலின், பியானோ ஆகியவைகளை இசைக்கும் ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததாலும், திருச்சபைகளில், மற்றும் பல நிகழ்வுகளில் தனிப்பாடல்களைப் பாடும் வரம் பெற்றிருந்தபடியாலும் இவ்வாய்ப்பானது, எனக்கு அதிக உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது.

நான் அந்த பியானோ வித்துவான் இருக்குமிடத்தை அடைந்தபோது, அவர் கொஞ்சம் தான் ஆங்கிலத்தில் உரையாடுவார் என்பதைக் கண்டு கொண்டேன். அவர், நான் இதுவரை தொட்டேபார்க்காத ஸெல்கோ ஒரு இசைக்கருவியை என்னிடத்தில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் என்னை வாசிக்கச் செய்து தானும் என்னோடு இணைந்து வாசிப்பதாக கூறினார். நான் சில இசைகளை வாசிக்க முயற்சி செய்தேன். என்னுடைய வயலின் பயிற்சியினை பயன்படுத்தி முயற்சித்தேன். ஆனால் இறுதியில் நான் தோற்றுப்போனேன்.

திடீரென நான் விழித்தபோது, இவைகளெல்லாம் ஒரு கனவாகத் தெரிந்தது. இந்த இசைப்பின்னணி என் கனவில் வந்தது உண்மையாகவே நடந்தது போலிருந்தாலும், என் மனமானது ஒரு வாக்கியத்தை மட்டும் திரும்பத்திரும்ப யோசித்துக்கொண்டே இருந்தது. 'உனக்கு பாடத்தெரியும் என்று நீ ஏன் அவரிடம் சொல்லவில்லை?".

ஆவிக்குரிய வரங்களையும், இயற்கையாக நம்மிடம் உள்ள தாலந்துகளையும் தேவன் நம்முடைய வாழ்வில் அதிகமாக்கி அதை மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படி செய்கிறார் (1 கொரி. 12:7). நம்மிடத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஆவிக்குரிய வரங்களை, தேவனுடைய வார்த்தையினாலும், மற்றவர்களுடைய ஞானமான ஆலோசனையின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். அவருடைய தீர்மானத்தின்படி (வச. 11) பரிசுத்த ஆவியானவர் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சிந்தித்து, பவுல் அப்போஸ்தலன் சொன்னதை ஞாபகத்தில் வைத்து செயல்படவேண்டும்.

மற்ற விசுவாசிகளுக்கு இயேசுவின் மூலம் பயன் உண்டாகவும் தேவனுடைய நாம மகிமைக்காகவும் நமது குரல் வளத்தினை பயன்படுத்தவேண்டும்.

இராக்காவல்களில்

கொலராடோவில் உள்ள மலைகள் கண்ணுக்கு விருந்தளிப்பவை. என் கல்லூரி நாட்களில், கோடை விடுமுறையின்போது அங்கிருக்கும் விருந்தினர் பண்ணை ஒன்றில் நான் வேலைசெய்வதுண்டு. அங்கு எனக்கு இராக்காவல் பணி. சுழற்சி முறையில் நாங்கள் வேலை செய்வோம். பண்ணையில் தங்கும் விருந்தினர்களைப் பாதுகாக்கும் விதத்தில், காட்டுத்தீ பரவினால் அதுகுறித்து எச்சரிப்பதுதான் எங்களுடைய வேலை. ஆரம்பத்தில் அது களைப்பூட்டுகிற, செய்நன்றியறியாத ஒரு வேலையாகத் தெரிந்தது. பிறகுதான் நான் அமர்ந்திருந்து, தேவ பிரசன்னத்தின் மகத்துவத்தை எண்ணிப்பார்த்து, ஆறுதலடைவதற்கான ஓர் அற்புதமான அனுபவமாக அது அமைந்தது.

ராஜாவாகிய தாவீது தேவபிரசன்னத்திற்காக ஏங்கினார் (சங்கீதம் 63:1), தன் படுக்கையிலும் “இராச்சாமங்களிலும்” தேவபிரசன்னத்தை வாஞ்சித்தார் (வச 6). தாவீது கலக்கத்தில் இருந்தார் என்பதை அந்தச் சங்கீதம் அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. தன் மகன் அப்சலோம் செய்த கலகம்தான் அந்தக் கலக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கவேண்டும். ஆனாலும் தேவனுடைய “செட்டைகளின் நிழலில்,” அவருடைய வல்லமையிலும் பிரசன்னத்திலும் ஆதரவும் புத்துணர்வும் கிடைக்கிற தருணமாக அந்த இரவு மாறியது. வசனம் 7.

உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனையோ நெருக்கடியோ இருக்கலாம், இராக்காவல்கள் உங்களுக்கு ஆறுதலளிக்காமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையின் “அப்சலோம்கள்” உங்களுடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் மிகுந்த பாரத்தை உண்டாக்கியிருக்கலாம். அல்லது குடும்பச்சுமை, வேலைச்சுமை, பணச்சுமை போன்றவை உங்களுடைய இளைப்பாறுதலின் நேரத்தைப் பாரமாக்கலாம். தூக்கத்தைக் கெடுக்கும் இத்தகைய தருணங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடவும், அவரைப் பற்றிப் பிடித்துக்கொள்ளவும் உதவட்டும். அவருடைய அன்பின் கரம் உங்களைத் தாங்கும்படி அனுமதியுங்கள். வசனம் 8.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).