எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் ரோப்பர்கட்டுரைகள்

சிறப்பாய் செய்தாய்!

என்னுடைய நண்பர் விஜயனின் கால்பந்து பயிற்றுவிக்கிற பள்ளி, மாநில போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. அவர்களின் போட்டி அணியினை கடந்த இரண்டு ஆண்டுகளாய் யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை. நான் விஜயனை ஆறுதல்படுத்த ஒரு செய்தியை அனுப்பினேன். பதிலுக்கு அவர் “குழந்தைகள் மிகவும் போராடினார்கள்” என்று அனுப்பினார். 

எந்த பயிற்சியாளரும் போட்டிக்கு பின்பு விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுடைய தவறான தீர்மானத்திற்காகவும், அவர்கள் நழுவவிட்ட வாய்ப்பையும் சொல்லி அவர்களைத் திட்டுவதில்லை. அவர்களின் பலமான செய்கைகளைக் குறித்து அவர்களை பாராட்டவே செய்கின்றனர்.

அதேபோன்று கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அவரிடத்திலிருந்து கடினமான வார்த்தைகளை கேட்க விரும்புவதில்லை. கிறிஸ்து வரும் நாளில் நாம் அவருக்கு முன்பாக நிற்போம். அவர் நம்மை கனவீனப்படுத்துவதில்லை. அவரைப் பின்பற்றும்போது நாம் என்ன செய்தோம் என்பதையே அவர் பார்க்கிறார் (2 கொரி. 5:10; எபேசியர் 6:8). “நீ போராடினாய்! சிறப்பாய் செய்தாய்” என்று அவர் நம்மை பாராட்டுவார் என்று நம்புகிறேன். பவுல் அப்போஸ்தலர், “நல்ல போராட்டத்தைப் போராடினேன்” என்று கிறிஸ்துவினால் வரவேற்கப்படுவதற்கு காத்திருந்தார் (2 தீமோ. 4:7-8).

வாழ்க்கை என்பது நம்முடைய அழிவை எதிர்நோக்கும் கடுமையான எதிரியுடனான இடைவிடாத போராட்டம். இயேசுவைப்போல மாறுவதற்கும் மற்றவர்களை நேசிப்பதற்கும் நாம் ஏறெடுக்கும் எல்லா முயற்சியையும் அடைவதற்கு அவன் தடைசெய்வான். சில நல்ல வெற்றிகளையும், பல மனமுறியும் தோல்விகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு நித்திய ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர் 8:1). தேவனுடைய குமாரனுடைய சார்பில் நாம் நிற்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனால் புகழப்படுதலை அனுபவிக்கக்கூடும் (1 கொரி. 4:5).

தேவ சித்தம்

சிலவேளைகளில் தேவசித்தத்திற்கு கீழ்படிவது கடினம். அவர் நம்மை சரியான காரியத்தை செய்ய தூண்டுவார். அவர் நம்மை முறுமுறுப்பில்லாமல் பாடுகளை சகிக்கவும், கடினமான மக்களை நேசிக்கவும், “நீ அதை செய்யக்கூடாது” என்று நமக்குள்ளே ஒலிக்கும் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படியவும், நாம் எடுக்க விரும்பாத அடிகளை எடுத்து வைக்கவும் அழைத்திருக்கிறார். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ஆத்துமாவைப் பார்த்து, “ஆத்துமாவே, கேள். அமைதியாயிரு: இயேசு என்ன செய்ய சொல்லுகிறாரோ, அதைச் செய்” என்று சொல்லவேண்டும்.  

“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது” (சங்கீதம் 62:1). “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு” (62:5). இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. தாவீது தன்னுடைய ஆத்துமாவைக் குறித்து சொல்லுகிறார்; பின்னர் தன் ஆத்துமாவிடம் சொல்லுகிறார். “அமர்ந்திருக்கிறது” என்பது மனஅமைதிக்கான தீர்மானம். “அமர்ந்திரு” என்பது அந்த தீர்மானத்தை நினைவுகூருவதற்கான தூண்டுதல்.

தாவீது, தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அமர்ந்திருப்பதை தெரிந்துகொண்டார். நாம் சிருஷ்டிக்கப்பட்டதற்கும் அழைக்கப்பட்டதற்குமான நோக்கமும் அதுவே. “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42) என்பதை ஒத்துக்கொண்டால் நாம் சமாதானமாய் வாழலாம். தேவனை தேவனென்று ஏற்றுக்கொள்வதும் நம்முடைய ஆழமான உணர்வுகளுக்கு அவரே ஆதாரம் என்பதை ஒத்துக்கொள்வதுமே நம்முடைய முதன்மையும் மேன்மையுமான அழைப்பு. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) என்று சங்கீதக்காரன் பாடுகிறான். 

நாம் “நம்புகிறது அவராலே வரும்” என்பதினால், நாம் உதவிக்காய் அவரையே நாடுவது நல்லது (62:5). அவரிடத்தில் உதவி கோரினால், அவர் நம்மை மீட்டுக்கொள்வார். அவரால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத எதையும் செய்யும்படிக்கு நம்மை தூண்டமாட்டார். 

கிறிஸ்துவின் நற்கந்தம்

ஒரு கிராம ஊழியரை எனக்குத் தெரியும். அவருடைய இரண்டு பேரன்களும் என்னுடைய சிறந்த நண்பர்கள். அவர் நகரத்திலுள்ள கடைக்குச் செல்லும்போது, அங்கு அவர் அறிமுகமானவர்களோடு அரட்டை அடிக்கும்போதும் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்துக்கொண்டிருப்போம். அவர்கள் எல்லாருடைய பெயர்களையும், அவர்களுடைய கதைகளையும் அவர் அறிந்திருந்தார். அவர் அங்கும் இங்கும் நின்று சுகவீனமாயிருக்கும் குழந்தையைப் பற்றியோ, பிரச்சனையான திருமணத்தைப் பற்றியோ கேட்டு ஒரு சில உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவார். அவர் வேதத்தைப் பகிர்ந்துக்கொண்டு தேவைப்பட்டால் அவர்களுக்காக ஜெபிப்பார். நான் அந்த மனுஷனை ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் ஒரு சிறப்பானவர். அவர் ஒருபோதும் யாரிடத்திலும் தன்னுடைய விசுவாசத்தைத் திணிக்கமாட்டார். அதை அப்படியே விட்டுவிடுவார்.  

பவுல் குறிப்பிடும் “நற்கந்தம்” இந்த வயதான போதகரிடம் இருந்தது (2 கொரிந்தியர் 2:15). “கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை” (வச. 14) பரப்புவதற்கு தேவன் அவரைப் பயன்படுத்தினார். அவர் இப்போது தேவனிடம் சென்று விட்டார். ஆனால் அவருடைய நறுமணம் லொமேட்டா நகரம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது.

“சாதாரண மக்கள் யாரும் இல்லை. மனிதனோடு பேசுவது வெறுமையாய் போகாது என்று சி.எஸ்.லூயிஸ் எழுதியிருக்கிறார். இதை மற்றொரு வழியில் கூறும்போது, ஒவ்வொரு மனித தொடர்புக்கும் நித்திய பின்விளைவுகள் உண்டு. நம்முடைய விசுவாசம் மற்றும் மென்மையான வாழ்க்கையின், அமைதியான சாட்சியின் மூலம் அல்லது சோர்வுற்ற ஆத்துமாவுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறுவதின் மூலமும், நம்மை சுற்றியிருக்கிற மக்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்ப்புகள் உள்ளன. கிறிஸ்துவைப் போல வாழும் வாழ்க்கை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். 

நம்பத்தகுந்த கிறிஸ்தவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அங்கிருந்து, ஒழுங்கு விதிமுறைகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் மதுபானம், புகையிலை, சிலவகையான பொழுதுபோக்கு ஆகியவைகள் தடைசெய்யப்பட்டிருந்தது. “நம்முடைய ஊழியர்களிடமிருந்து இவற்றை எதிர்பார்க்கிறோம்” என்று அதில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அவைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை என்பதினால் அதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கடினமாய் தெரியவில்லை. ஆனால் என்னுடைய விவாத பார்வையில் ஏன் அந்த தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஆனவம், உணர்வற்ற தன்மை, முரட்டுத்தனம், ஆவிக்குரிய மாறுபாடு, விமர்சனம் போன்ற காரியங்கள் தடைசெய்யப்படவில்லை என்று எண்ணத்தோன்றியது. 

இயேசுவை பின்பற்றுவதை விதிமுறைப் பட்டியலைக் கொண்டு தீர்மானிக்கமுடியாது. அது அளவிடமுடியாத வாழ்க்கையின் மிக நுட்பமான ஒரு குணாதிசயம். ஆனால் அது “அழகானது” என்று மட்டும் கூறமுடியும். 

மத்தேயு 5:3-10இல் பதிவாகியுள்ள மலைப் பிரசங்கம் அந்த அழகை விவரிக்கிறது. இயேசுவின் ஆவியை உடையவர்கள் தாழ்மையும் வலிமையும் கொண்டவர்கள். மற்றவர்களுடைய உபத்திரவத்தைப் பொருட்படுத்துவார்கள். சாந்தகுணம் மற்றும் இரக்கமுள்ளவர்கள். தங்களால் நன்மையான காரியம் செய்யவும் மற்றவர்களும் பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்கள், துன்பப்பட்டு தோற்றுப்போனவர்களின் மீது இரக்கம் காட்டுவார்கள். இயேசுவை நேசிப்பதையே பிரதானமாய் வைத்து செயல்படுவர். சமாதானமாயிருப்பார்கள், தன் சமாதானத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வர். தனக்கு தீமைசெய்கிறவர்களிடமும் தயவுகாட்டுவார்கள். அவர்கள் “பாக்கியவான்கள்,” அதாவது, மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று அர்த்தம். 

இந்த வகையான வாழ்க்கைமுறை மற்றவர்களுடைய கவனத்தை ஈர்த்து, அவர்களை இயேசுவை நாடி வரச்செய்கிறது.

உன் வாழ்க்கையின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.

எடுக்கப்பட்டது

என்னுடைய வயதான நாய் ஒன்று என் பக்கத்தில் அமர்ந்து வெட்டவெளியில் வெறித்துப் பார்க்கிறது. அதின் எண்ணங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. ஆனால் அவைகளால் மரணத்தை விளங்கிக்கொள்ள முடியாது என்பதினால் அது மரணத்தைக் குறித்து யோசிக்கவில்லை என்பது உறுதி. எதிர்கால விஷயங்களைப் பற்றி அவைகள் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் சிந்திக்கிறோம். நம் வயது அல்லது உடல்நிலை அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும், நாம் ஒரு கட்டத்தில் இறப்பதைப் பற்றி சிந்திக்கிறோம். சங்கீதம் 49:20-ன் படி, மிருகங்களைப் போலல்லாமல், நமக்கு “புரிதல்” இருக்கிறது. நாம் இறந்துவிடுவோம் என்று நமக்குத் தெரியும், அதை மாற்ற நாம் எதுவும் செய்யமுடியாது. “எவ்விதத்தினாலாவது ஒருவரை மீட்டுக்கொள்ளவும் அல்லது அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்கு கொடுக்கவுங்கூடாதே" (வச.8). தன்னை கல்லறையிலிருந்து மீட்டெடுப்பதற்கு போதுமான பணம் யாரிடமும் இல்லை.

ஆனால் மரணத்தின் முடிவில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது: “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்” என்று சங்கீதக்காரன் வலியுறுத்துகிறார். “அவர் என்னை ஏற்றுக்கொள்வார்” (வச. 15 அதாவது, “அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்வார்”) என்றும் கூறுகிறார். “நாம் போகும்போது நம்முடைய உள்ளே அழைத்துக்கொள்வதற்குதான் வீடு என்று பெயர்” என்று ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறுகிறார். 

தேவன் தம்முடைய குமாரன் மூலமாக மரணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார், அவர் “எல்லாரையும் மீட்கும்பொருளாக தன்னை ஒப்புக்கொடுத்தார்” (1 தீமோத்தேயு 2:6). இவ்வாறு நம்முடைய காலம் வரும்போது, அவர் நம்மை வாழ்த்தி வரவேற்று, நம்மை உள்ளே அழைத்துச் செல்வார் என்று இயேசு வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 14:3).

என்னுடைய காலம் வரும்போது, என் வாழ்க்கையின் விலைக்கிரயத்தை தேவனுக்குக் கொடுத்த இயேசு என்னைத் திறந்த கரங்களுடன் தம்முடைய பிதாவின் வீட்டிற்கு வரவேற்பார்.

உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும்

பல வருடங்களுக்கு முன் நானும் என் மகன் ஜோஷும் ஒரு மலைப்பாதையில் மேலே ஏறினபோது, ஒரு புழுதிபுயல் காற்றில் மேலே வருவதை கண்டோம். நாங்கள் முன்னேறி சென்றுகொண்டிருந்தபோது ஒரு மிருகம் தூசியின் மத்தியில் ஒரு பதுங்கு குழியை தோண்டிகொண்டிருந்தது. அதனுடைய தலை மற்றும் தோள்பட்டை அந்த குழியினுள் இருந்தது. தன்னுடைய முன்னங்கால்களை கொண்டு தீவிரமாக குழிதோண்டி தன்னுடைய பின்னங்கால்களை கொண்டு குழியிலிருந்து மண்ணை வெளியே தள்ளியது. தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்ததால் அது எங்களை கவனிக்கவில்லை.

நான் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த ஒரு நீண்ட குச்சியை கொண்டு அதன் பின்னிருந்து அதனை குத்தினேன். நான் அதை காயப்படுத்தவில்லை, ஆனால் அது எகிறி மேலே குதித்து எங்களுக்கு நேராக திரும்பியது. நூறு அடி ஓட்டத்தில் ஜோஷும் நானும் ஒரு புதிய உலக சாதனை படைத்தோம்.

நான் என்னுடைய துடுக்குத்தனத்திலிருந்து சிலவற்றை கற்றுக்கொண்டேன்: சிலநேரம் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது, விசேஷமாக இயேசுவுக்குள் சகவிசுவாசிகளாக உள்ளவர்களிடம் உள்ள உறவில். அப்போஸ்தலர் பவுல் தெசலோனிக்கேயரை “நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும் உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்” (1 தெசலோனிக்கேயர் 4:12) உற்சாகப்படுத்துகிறார். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கிருபையை கொண்டு வேதவாக்கியங்களை பகிர முயற்சிக்க வேண்டும். மற்றும்சில நேரங்களில் சீர்படுத்தும் கனிவான வார்த்தைகளை வழங்கக்கூட  அழைக்கப்பட்டிருப்போம். ஆனால் மற்றவருடைய வாழ்க்கையில் தலையிடாமல் அமைதியாக வாழக் கற்றுக்கொள்வது அவசியம். தேவனுடைய குடும்பத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கு அது ஒரு உதாரணமாக இருக்கும் (வ 12). “ஒருவரில் ஒருவர் அன்பு கூர்வதே” (வ 9)  நம்முடைய அழைப்பு.

ஓஸ்-ன் அவ்வளவு அற்புதமான மாந்திரிகன் அல்ல

ஒரு ஆங்கில புத்தகத்தை தழுவி எழுதப்பட்ட ஓஸ்-ன் மாந்திரிகன் என்ற  நாடகத்தில் டோரதி, சோலைக்கொள்ளை பொம்மை,  தகர மனிதன், கோழையான சிங்கமும் மேற்கின் பொல்லாத சூனியக்காரிக்கு சக்தியளித்த விளக்குமாற்றை கொண்டுவருகிறார்கள். அதற்கு பதிலாக ஓஸ்-ன் மாந்திரிகன் அவர்கள் நால்வருக்கும்  அவர்களது ஆழ் மனதின் ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்து இருந்தான்: டோரதி மீண்டும் வீடு செல்வதற்கு ஒரு சவாரி, சோலைக்கொள்ளை பொம்மைக்கு  மூளையும், தகர மனிதனுக்கு இதயமும்,  கோழையான சிங்கத்திற்கு  தைரியமும். ஆனால் அந்த மாந்திரீகனோ அவர்களை தினமும் ஏமாற்றி அடுத்த நாள் வர கூறுவான்.

அவர்கள் அந்த மாந்திரீகனுடன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது, டோரோதியின் நாய்  டோடோ அங்கிருந்த திரையை இழுத்துவிட, திரைக்கு  பின்னால் இருந்து பேசிக்கொண்டிருக்கும் மாந்திரீகன் ஒரு மாந்தரீகனே  அல்ல, நெப்ராஸ்க்கா என்ற ஊரில்  இருந்து வந்த ஒரு பயந்த அமைதியற்ற மனிதன் என்று தெரிய வருகிறது. 

இதன்  நூலாசிரியர் ல. பிராங்க் பாம்-க்கு, கடவுளை பற்றி பிரச்சினை இருந்ததால்  நம் பிரச்சனைகளை நாம் தான்  தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை  மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார்.

இதற்கு மாறாக, அப்போஸ்தலனாகிய யோவான் திரையை பின்னிழுத்து திரைக்குப் பின்னால் இருக்கும் அற்புதமானவரை வெளிப்படுத்துகிறார். வார்த்தைகள் உதவவில்லை என்றாலும் யோவான் கூறுவது தெளிவாக உள்ளது : தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், அதை சுற்றி பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருக்கிறது ( வெளிப்படுத்தின விசேஷம் 4:2,6). எப்பேர்ப்பட்ட தொல்லைகள் நம்மை பூமியில் வாதித்தாலும் (அதி 2-3), தன் நகங்களை கடித்து கொண்டு முன்னும் பின்னுமாக  தேவன் நடப்பதில்லை. அவருடைய  சமாதானத்தை நாம் அனுபவிப்பதற்கு, நம்  நன்மைக்காக  அவர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

முடிவுகளை தேவனிடம் விட்டு விடுங்கள்

சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் கால்பந்து வீரர்களுக்கு இயேசுவைபற்றி பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் பொதுவாக கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர்கள் என்று அனைவரும் அறிவார்கள்.  அதின் நிமித்தமாக கூட எனது நண்பரையும் அழைத்து சென்றேன். நான் அங்கு அழைக்கப்பட்ட நாளிலே அவர்கள் தங்கள் கோப்பையை வென்ற நாளாக இருந்தது. அதினால் நாங்கள் கூடியிருந்த அறை முழுவதும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது. இதன் நடுவில் மாணவ தலைவன் எழுந்து " கடவுளைக்குறித்து இருவர் உங்களிடம் பகிரும்படி வந்திருக்கிறார்கள்" என்று அறிமுகப்படுத்தினார்.

நடுக்கத்துடன் எழுந்துபோய் தேவ அன்பை குறித்து பகிர துடங்கினேன். மெய்மறந்த ஆர்வத்துடன் அனைவரும் கவனித்தார்கள். முடிவில் சில வெளிப்படையான நேரடி கேள்விகள் என்னிடம் கேட்டார்கள்.நாளடைவில் அங்கு வேதபாடம் நடத்தும்படி தேவன் எங்களை வழிநடத்தினார். அதினிமாதமாக பலர் அங்கு இரட்சிக்கப்பட்டார்கள்.

இதைக்குறித்து நினைக்கும்போது "சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்" (லூக். 10:18) என்கிற வசனம் நினைவுக்கு வந்தது. சமயங்களில் நான் முகம் குப்புற விழுந்து தேவனை அவ்வாறு பணிந்து கொண்டேன்.

லூக்கா 10-ஆம் அதிகாரத்தில், சீஷர்கள் தங்கள் ஊழிய பனியின் சாதனைகளை குறித்து இயேசுவிடம் வந்து அறிக்கையிட்டார்கள். அவர்கள் முழுமையாக பல ஆத்துமாக்கள் ராஜ்யத்தின் ரகசியத்தை  அறிந்தார்கள், பல அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டது, நோய்கள் குணமாக்கப்பட்டது. ஆனால் இவைகளை இயேசுவிடம் அவர்கள் சொல்லும்போது இதற்கு மாறாக பதிலளித்தார் "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்" (வச. 20).

நாமும் சமயத்தில் வெற்றியினால் சந்தோஷப்பட்டு தோல்வியினால் மனங்கசந்து போகிறோம். தேவன் நமக்கென்று நியமித்த பணியை தொடர்ந்து செய்து அதன் முடிவை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். உங்கள் பெயர் அவர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.