Con Campbell | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கான் காம்பெல்கட்டுரைகள்

தத்தெடுக்கும் அழகு

“த பிளைன்ட் சைட்” என்று 2009 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமானது, மைக்கேல் ஓஹெர் என்பவரின் நிஜக்கதை. ஒரு குடும்பம் அவனுக்கு ஆதரவு தந்து, கற்றுக்கொள்ளுதலில் அவனுக்கு இருந்த குறைபாட்டை மேற்கொள்ளச் செய்து, அமெரிக்க கால்பந்து விளையாட்டில் சிறந்தவனாய் மாற்றுகிறது. அதில் ஒரு காட்சியில், அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்த மைக்கேலைப் பார்த்து, அவனை தத்தெடுத்துக்கொள்வதைக் குறித்து அவனிடத்தில் கேட்கிறார்கள். மைக்கேல் அவர்களைப் பார்த்து, நான் ஏற்கனவே குடும்பத்தின் அங்கத்தினராகவே இருப்பதாக மிக இனிமையாகவும் மென்மையாகவும் பதிலளிக்கிறான். 

இது ஒரு அழகான தருணம். தத்தெடுப்பது ஓர் அழகான விஷயம். அன்பு விரிவடைந்து, குடும்பம் ஒரு புது நபருக்கு தன் இரண்டு கரங்களையும் விரிக்கிறது. மைக்கேலின் வாழ்க்கை மாறியதுபோல, தத்தெடுத்தல் வாழ்க்கையை மாற்றுகிறது. 

விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் “தேவனுடைய பிள்ளைகளாய்” மாற்றப்படுகின்றனர் (கலா. 3:26). நாம் தேவனால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாற்றப்படுகிறோம் (4:5). தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாய் அவருடைய குமாரனுடைய ஆவியைப் பெற்று தேவனை “அப்பா” என்று அழைக்கவும் (வச. 6), அவருடைய சுதந்திரனாயும் (வச. 7), கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரமாயும் (ரோமர் 8:17) மாற்றப்பட்டுள்ளோம். நாம் அவருடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினராய் மாற்றப்படுகிறோம்.  

மைக்கேல் ஓஹெரின் தத்தெடுப்பு அவனுடைய வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும், அவனுடைய எதிர்காலத்தையும் மாற்றியது. தேவனால் தத்தெடுக்கப்பட்ட நாம் எவ்வளவு மேன்மையானவர்கள்! அவரை தகப்பனாய் அறிந்ததினால் நம் வாழ்க்கை மாறுகிறது. அவருக்கு சொந்தமானதினால் நம் அங்கீகாரம் மாறுகிறது. மகிமையான நித்திய மாட்சிமை வாக்களிக்கப்பட்டதினால் நம் எதிர்காலமும் மாற்றப்படுகிறது. 

இயேசுவே நம் சமாதானம்

டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம். 

டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம். 

நாம் பேசுவதை அவர் கேட்கிறார்

அமெரிக்க ஜனாதிபதியான ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட்டை சந்திக்க, ஒவ்வொருநாளும் அவருடைய வெள்ளை மாளிகையின் வரவேற்பறையில் நீண்ட வரிசை நின்றிருக்கும். அவர்களிடம் கைகுலுக்கும்போது, அவர் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை என்று அவருக்கு தோன்றியது. அவர் அதை பரிசோதிக்க எண்ணினார். அடுத்தமுறை அவரை சந்திக்கநின்ற அந்த நீண்ட வரிசையில் ஒவ்வொருவரின் கைகளைக் குலுக்கும்போதும், “இன்று காலை என்னுடைய பாட்டியை கொன்றுவிட்டேன்” என்று சொன்னாராம். பரபரப்பில் கைகுலுக்கிய பலபேர், “ஓ! மகிழ்ச்சி, தொடர்ந்து செய்ய எங்களுடைய வாழ்த்துக்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று பதிலளித்தனர். வரிசையில் கடைசியில் நின்றிருந்த பொலிவியாவின் தூதரகத் தலைவரிடமும் அதையே சொல்ல, புரிந்துகொண்ட அவர் குழப்பத்துடன், அருகாமையில் வந்து “அவர்களுக்கு அது தேவைதான்” என்று மெதுவாகச் சொன்னாராம். 

நீங்கள் பேசுவதை மக்கள் நிஜமாக கேட்கிறார்களா என்று சந்தேகித்ததுண்டா? அல்லது, நீங்கள் பேசுவதை தேவன் கேட்கிறாரா என்று நீங்கள் சந்தேகித்ததுண்டா? மக்கள் முகபாவணையையும் கண்களின் அசைவையும் வைத்து அவர்கள் நம்முடைய பேச்சைக் கேட்கிறார்களா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் தேவன் நமது பேச்சைக் கேட்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? நம் உணர்வுகளை வைத்தா? அல்லது அவர் பதில்கொடுப்பதை வைத்தா?

பாபிலோன் அடிமைத்தனத்தில் எழுபது ஆண்டுகள் இருந்த பின்பு, தேவன் தன் ஜனத்தை மீட்டுக் கொண்டுவருவதாகவும், அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணியிருந்தார் (எரேமியா 29:10-11). எனவே அவர்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டவுடன், அவர் கேட்டார் (வச. 12). அவர் நம்முடைய கூக்குரலைக் கேட்பார் என்பது அவர்களுக்கு மிக நன்றாய் தெரியும். ஏனெனில் தேவன் கேட்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். நமக்கும் அப்படித்தான் (1 யோவான் 5:4). நாமும் உணர்வுகளை சார்ந்தோ, அல்லது அடையாளத்திற்கு காத்திருக்கவோ வேண்டியதில்லை. நம்முடைய ஜெபத்தைக் கேட்பதாக அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் சொன்னதை நிறைவேற்றுவார் (2 கொரிந்தியர் 1:20).

விவேகமான ஆலோசனையைக் கேட்பது

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு அரசியல்வாதியைப் பிரியப்படுத்த விரும்புவதாகக் கண்டார். எனவே அவர் சில யூனியன் ராணுவ படைவகுப்புகளை மாற்றுவதற்கான கட்டளையை வெளியிட்டார். போர் குழுவின் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன் இந்த உத்தரவைப் பெற்றபோது, அதை நிறைவேற்ற அவர் மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று அவர் கூறினார். ஸ்டாண்டன் கூறியதை லிங்கனிடம் கூறினார்கள், அவர் பதிலளித்தார்: “நான் ஒரு முட்டாள் என்று ஸ்டாண்டன் சொன்னால், நான் அப்படியாக தான் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் எப்போதும் சரியானவர்; நான் என்னை சரிசெய்துக் கொள்கிறேன்.” இரண்டு பேரும் பேசினப்போது, ஜனாதிபதி தனது முடிவு ஒரு மோசமான தவறு என்பதை விரைவாக உணர்ந்தார். தயக்கமின்றி அவர் அதைத் திரும்பப் பெற்றார். ஸ்டாண்டன் லிங்கனை ஒரு முட்டாள் என்று அழைத்தபோதிலும், ஸ்டாண்டன் அவருடன் உடன்படாதபோது ஜனாதிபதி தனது தவறான முடிவை பிடித்துக்கொண்டு இல்லாதபடி, அதற்கு பதிலாக, லிங்கன் ஆலோசனையைக் கேட்டு, அதைக் கருத்தில்கொண்டு, மனதை மாற்றிக்கொண்டதின் மூலம் புத்திசாலி என நிரூபித்தார். 

ஞானமான ஆலோசனையைக் கேட்காத ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? (1 இராஜாக்கள் 12:1-11 ஐ காண்க.) இது எரிச்சலூட்டுகிறதல்லவா? அல்லது, இன்னும் தனிப்பட்ட முறையில், நீங்கள் எப்போதாவது ஆலோசனையைக் கேட்க மறுத்திருக்கிறீர்களா? நீதிமொழிகள் 12:15 கூறுவது போல், “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்கு செவிக்கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” மக்கள் எப்போதுமே சரியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது, அது நமக்கும் அது பொருந்தும்! எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் மட்டுமே விதிவிலக்கு என்று முட்டாள்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, நாம் ஆரம்பத்தில் உடன்படவில்லை என்றாலும், தெய்வீக ஞானத்தைக் கடைபிடிப்போம்; மற்றவர்களின் ஞானமான ஆலோசனையைக் கேட்போம். சில சமயங்களில் தேவன் நம்முடைய நன்மைக்காகவே அவ்வாறு செயல்படுகிறார் (வச. 2).

முட்டாள்தனத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஒரு நபர் மளிகை கடைக்குள் நடந்து சென்று கவுண்டரில் ரூ.500-யை வைத்து கொண்டு சில்லரை  கேட்டார். கடைகாரர் பணப் பெட்டியை திறந்த போது, அந்த மனிதன் ஒரு துப்பாக்கியை எடுத்து அனைத்து பணத்தையும் கேட்டார்  அந்த கடைக்காரர் உடனடியாக முழுவதையும் வழங்கினார். அந்த நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார், ஐதூறு ரூபாய் நோட்டை கவுண்டரிலேயே  விட்டுவிட்டார் . அந்த பணப் பெட்டியிலிருந்து அவர் பெற்ற மொத்த பணம்?முன்னூறு ரூபாய்.

நாம் அனைவரும் சில நேரங்களில் முட்டாள்தனமாக செயல்படுகிறோம் ... இந்த திருடனைப் போலல்லாமல், நாம் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம். முக்கியமானது நமது முட்டாள்தனமான நடக்கையிலிருந்து நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். திருத்தம் செய்யவில்லை என்றால், நமது மோசமான தேர்வுகள் பழக்கமாக மாறக்கூடும், அது நம் தன்மையை எதிர்மறையாக வடிவமைக்கும். நாம் “முட்டாள்கள்” ஆகிவிடுவோம். . . மதிகெட்டவனாக” (பிரசங்கி 10: 3). 

சில நேரங்களில் நம் முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்வது கடினம், ஏனெனில் அதற்கு கூடுதலான செயல்பாடு தேவைப்படுகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நாம் பிரதிபலிக்க வேண்டும், அது வேதனையானது. அல்லது ஒரு முடிவு அவசரமாக எடுக்கப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அடுத்த முறை நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், நம்முடைய முட்டாள்தனமான வழிகளைப் புறக்கணிக்க அது ஒருபோதும் உதவாது.

அதிர்ஷ்டவசமாக, தேவன் நம்முடைய முட்டாள்தனத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் நம்மை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தலாம். எந்தச் சிட்சையும் “தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல்” துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”(எபிரெயர் 12:11). நம்முடைய முட்டாள்தனமான நடக்கைக்காக நம்முடைய பிதாவின் சிட்சையை ஏற்றுக்கொள்வோம், அவர் விரும்பும் மகன்கள் மற்றும் மகள்களைப் போல நம்மை மேலும் மாற்றும்படி அவரிடம் வேண்டிக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.