எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கான் காம்பெல்கட்டுரைகள்

தத்தெடுக்கும் அழகு

“த பிளைன்ட் சைட்” என்று 2009 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமானது, மைக்கேல் ஓஹெர் என்பவரின் நிஜக்கதை. ஒரு குடும்பம் அவனுக்கு ஆதரவு தந்து, கற்றுக்கொள்ளுதலில் அவனுக்கு இருந்த குறைபாட்டை மேற்கொள்ளச் செய்து, அமெரிக்க கால்பந்து விளையாட்டில் சிறந்தவனாய் மாற்றுகிறது. அதில் ஒரு காட்சியில், அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்த மைக்கேலைப் பார்த்து, அவனை தத்தெடுத்துக்கொள்வதைக் குறித்து அவனிடத்தில் கேட்கிறார்கள். மைக்கேல் அவர்களைப் பார்த்து, நான் ஏற்கனவே குடும்பத்தின் அங்கத்தினராகவே இருப்பதாக மிக இனிமையாகவும் மென்மையாகவும் பதிலளிக்கிறான். 

இது ஒரு அழகான தருணம். தத்தெடுப்பது ஓர் அழகான விஷயம். அன்பு விரிவடைந்து, குடும்பம் ஒரு புது நபருக்கு தன் இரண்டு கரங்களையும் விரிக்கிறது. மைக்கேலின் வாழ்க்கை மாறியதுபோல, தத்தெடுத்தல் வாழ்க்கையை மாற்றுகிறது. 

விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் “தேவனுடைய பிள்ளைகளாய்” மாற்றப்படுகின்றனர் (கலா. 3:26). நாம் தேவனால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாற்றப்படுகிறோம் (4:5). தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாய் அவருடைய குமாரனுடைய ஆவியைப் பெற்று தேவனை “அப்பா” என்று அழைக்கவும் (வச. 6), அவருடைய சுதந்திரனாயும் (வச. 7), கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரமாயும் (ரோமர் 8:17) மாற்றப்பட்டுள்ளோம். நாம் அவருடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினராய் மாற்றப்படுகிறோம்.  

மைக்கேல் ஓஹெரின் தத்தெடுப்பு அவனுடைய வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும், அவனுடைய எதிர்காலத்தையும் மாற்றியது. தேவனால் தத்தெடுக்கப்பட்ட நாம் எவ்வளவு மேன்மையானவர்கள்! அவரை தகப்பனாய் அறிந்ததினால் நம் வாழ்க்கை மாறுகிறது. அவருக்கு சொந்தமானதினால் நம் அங்கீகாரம் மாறுகிறது. மகிமையான நித்திய மாட்சிமை வாக்களிக்கப்பட்டதினால் நம் எதிர்காலமும் மாற்றப்படுகிறது. 

இயேசுவே நம் சமாதானம்

டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம். 

டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம். 

நாம் பேசுவதை அவர் கேட்கிறார்

அமெரிக்க ஜனாதிபதியான ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட்டை சந்திக்க, ஒவ்வொருநாளும் அவருடைய வெள்ளை மாளிகையின் வரவேற்பறையில் நீண்ட வரிசை நின்றிருக்கும். அவர்களிடம் கைகுலுக்கும்போது, அவர் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை என்று அவருக்கு தோன்றியது. அவர் அதை பரிசோதிக்க எண்ணினார். அடுத்தமுறை அவரை சந்திக்கநின்ற அந்த நீண்ட வரிசையில் ஒவ்வொருவரின் கைகளைக் குலுக்கும்போதும், “இன்று காலை என்னுடைய பாட்டியை கொன்றுவிட்டேன்” என்று சொன்னாராம். பரபரப்பில் கைகுலுக்கிய பலபேர், “ஓ! மகிழ்ச்சி, தொடர்ந்து செய்ய எங்களுடைய வாழ்த்துக்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று பதிலளித்தனர். வரிசையில் கடைசியில் நின்றிருந்த பொலிவியாவின் தூதரகத் தலைவரிடமும் அதையே சொல்ல, புரிந்துகொண்ட அவர் குழப்பத்துடன், அருகாமையில் வந்து “அவர்களுக்கு அது தேவைதான்” என்று மெதுவாகச் சொன்னாராம். 

நீங்கள் பேசுவதை மக்கள் நிஜமாக கேட்கிறார்களா என்று சந்தேகித்ததுண்டா? அல்லது, நீங்கள் பேசுவதை தேவன் கேட்கிறாரா என்று நீங்கள் சந்தேகித்ததுண்டா? மக்கள் முகபாவணையையும் கண்களின் அசைவையும் வைத்து அவர்கள் நம்முடைய பேச்சைக் கேட்கிறார்களா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் தேவன் நமது பேச்சைக் கேட்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? நம் உணர்வுகளை வைத்தா? அல்லது அவர் பதில்கொடுப்பதை வைத்தா?

பாபிலோன் அடிமைத்தனத்தில் எழுபது ஆண்டுகள் இருந்த பின்பு, தேவன் தன் ஜனத்தை மீட்டுக் கொண்டுவருவதாகவும், அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணியிருந்தார் (எரேமியா 29:10-11). எனவே அவர்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டவுடன், அவர் கேட்டார் (வச. 12). அவர் நம்முடைய கூக்குரலைக் கேட்பார் என்பது அவர்களுக்கு மிக நன்றாய் தெரியும். ஏனெனில் தேவன் கேட்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். நமக்கும் அப்படித்தான் (1 யோவான் 5:4). நாமும் உணர்வுகளை சார்ந்தோ, அல்லது அடையாளத்திற்கு காத்திருக்கவோ வேண்டியதில்லை. நம்முடைய ஜெபத்தைக் கேட்பதாக அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் சொன்னதை நிறைவேற்றுவார் (2 கொரிந்தியர் 1:20).

விவேகமான ஆலோசனையைக் கேட்பது

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு அரசியல்வாதியைப் பிரியப்படுத்த விரும்புவதாகக் கண்டார். எனவே அவர் சில யூனியன் ராணுவ படைவகுப்புகளை மாற்றுவதற்கான கட்டளையை வெளியிட்டார். போர் குழுவின் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன் இந்த உத்தரவைப் பெற்றபோது, அதை நிறைவேற்ற அவர் மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று அவர் கூறினார். ஸ்டாண்டன் கூறியதை லிங்கனிடம் கூறினார்கள், அவர் பதிலளித்தார்: “நான் ஒரு முட்டாள் என்று ஸ்டாண்டன் சொன்னால், நான் அப்படியாக தான் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் எப்போதும் சரியானவர்; நான் என்னை சரிசெய்துக் கொள்கிறேன்.” இரண்டு பேரும் பேசினப்போது, ஜனாதிபதி தனது முடிவு ஒரு மோசமான தவறு என்பதை விரைவாக உணர்ந்தார். தயக்கமின்றி அவர் அதைத் திரும்பப் பெற்றார். ஸ்டாண்டன் லிங்கனை ஒரு முட்டாள் என்று அழைத்தபோதிலும், ஸ்டாண்டன் அவருடன் உடன்படாதபோது ஜனாதிபதி தனது தவறான முடிவை பிடித்துக்கொண்டு இல்லாதபடி, அதற்கு பதிலாக, லிங்கன் ஆலோசனையைக் கேட்டு, அதைக் கருத்தில்கொண்டு, மனதை மாற்றிக்கொண்டதின் மூலம் புத்திசாலி என நிரூபித்தார். 

ஞானமான ஆலோசனையைக் கேட்காத ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? (1 இராஜாக்கள் 12:1-11 ஐ காண்க.) இது எரிச்சலூட்டுகிறதல்லவா? அல்லது, இன்னும் தனிப்பட்ட முறையில், நீங்கள் எப்போதாவது ஆலோசனையைக் கேட்க மறுத்திருக்கிறீர்களா? நீதிமொழிகள் 12:15 கூறுவது போல், “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்கு செவிக்கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” மக்கள் எப்போதுமே சரியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது, அது நமக்கும் அது பொருந்தும்! எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் மட்டுமே விதிவிலக்கு என்று முட்டாள்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, நாம் ஆரம்பத்தில் உடன்படவில்லை என்றாலும், தெய்வீக ஞானத்தைக் கடைபிடிப்போம்; மற்றவர்களின் ஞானமான ஆலோசனையைக் கேட்போம். சில சமயங்களில் தேவன் நம்முடைய நன்மைக்காகவே அவ்வாறு செயல்படுகிறார் (வச. 2).

முட்டாள்தனத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஒரு நபர் மளிகை கடைக்குள் நடந்து சென்று கவுண்டரில் ரூ.500-யை வைத்து கொண்டு சில்லரை  கேட்டார். கடைகாரர் பணப் பெட்டியை திறந்த போது, அந்த மனிதன் ஒரு துப்பாக்கியை எடுத்து அனைத்து பணத்தையும் கேட்டார்  அந்த கடைக்காரர் உடனடியாக முழுவதையும் வழங்கினார். அந்த நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார், ஐதூறு ரூபாய் நோட்டை கவுண்டரிலேயே  விட்டுவிட்டார் . அந்த பணப் பெட்டியிலிருந்து அவர் பெற்ற மொத்த பணம்?முன்னூறு ரூபாய்.

நாம் அனைவரும் சில நேரங்களில் முட்டாள்தனமாக செயல்படுகிறோம் ... இந்த திருடனைப் போலல்லாமல், நாம் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம். முக்கியமானது நமது முட்டாள்தனமான நடக்கையிலிருந்து நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். திருத்தம் செய்யவில்லை என்றால், நமது மோசமான தேர்வுகள் பழக்கமாக மாறக்கூடும், அது நம் தன்மையை எதிர்மறையாக வடிவமைக்கும். நாம் “முட்டாள்கள்” ஆகிவிடுவோம். . . மதிகெட்டவனாக” (பிரசங்கி 10: 3). 

சில நேரங்களில் நம் முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்வது கடினம், ஏனெனில் அதற்கு கூடுதலான செயல்பாடு தேவைப்படுகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நாம் பிரதிபலிக்க வேண்டும், அது வேதனையானது. அல்லது ஒரு முடிவு அவசரமாக எடுக்கப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அடுத்த முறை நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், நம்முடைய முட்டாள்தனமான வழிகளைப் புறக்கணிக்க அது ஒருபோதும் உதவாது.

அதிர்ஷ்டவசமாக, தேவன் நம்முடைய முட்டாள்தனத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் நம்மை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தலாம். எந்தச் சிட்சையும் “தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல்” துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”(எபிரெயர் 12:11). நம்முடைய முட்டாள்தனமான நடக்கைக்காக நம்முடைய பிதாவின் சிட்சையை ஏற்றுக்கொள்வோம், அவர் விரும்பும் மகன்கள் மற்றும் மகள்களைப் போல நம்மை மேலும் மாற்றும்படி அவரிடம் வேண்டிக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).