பிறருக்கான சேவையில்
எஸ்தர் "பென்" கிம்சந்த், குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர். அவர் தனது எழுத்துக்கள் மூலம் மாநிலத்தில் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நல்ல கல்வி பெண்களை அவர்களின் குடும்பங்களிலும் சமூகங்களிலும் மரியாதைக்குரிய இடங்களில் வைக்க உதவும் என்று அவர் எழுதினார். எஸ்தர் தன் திறமைகளை தனக்குத்தானே வைத்துக் கொள்ளவில்லை அல்லது தன் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மேம்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தினாள். பேதுருவின் நிருபம் ஆசியா மைனர் முழுவதும் அகதிகளாகச் சிதறியிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது (1 பேதுரு 1:1). "ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கவும்" மற்றும் "ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும்" அவர்கள் பெற்ற "எந்த ஈவையும்" பயன்படுத்தவும் அவர் அவர்களைத் தூண்டினார் (வ.10). இந்த ஈவுகளைக் குறித்து உரிமை பாராட்டாமல், அவர்களுடைய ஆவிக்குரிய வரங்களை “தேவனுடைய பற்பல கிருபை” என்று கருதும்படி பேதுரு அவர்களை வலியுறுத்தினார். தேவனுக்குச் சொந்தமானவற்றை ஜாக்கிரதையுடன் நிர்வகிக்கும் “நல்ல உக்கிராணக்காரர்போல” இருக்கும்படி அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் "தேவனுடைய வாக்கியங்களின்படி" பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பேசவும், "தேவன் தந்தருளும் பெலத்தின்படி" ஜனங்களுக்குச் சேவை செய்யவும் அறிவுறுத்தினார். அதனால் அவர்களின் செயல்களிலும், அவற்றின் மூலமாகவும் தேவன் மகிமைப்படுவார் (வ.11) . இத்தகைய முறையில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு மகிமையைச் சேர்க்கிறோம். எஸ்தர் மற்றும் ஆதிச்சபையைப் போலவே, நம்மிடமும் ஈவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஈவுகள், நமக்குச் சாதாரணமாய் தோன்றினாலும், தேவனுடைய ராஜ்யத்தை விரிவாக்க உதவலாம். இது உணவைத் தயாரிப்பதோ, கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு நம் வீடுகளைப் பகிர்வதோ கூட இருக்கலாம். நாம் பேசவும் செயல்படவும் தேவைப்படுகையில், நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும் (வ.11). இப்படியாக, நம்மிடம் உள்ள ஈவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி பிறரை முன்னேற்றுவோம்.
வனாந்தரத்தில் கேள்விகள்
ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய அணையைப் பார்ப்பதற்கு எங்கள் குடும்பம் ஆவலாக இருந்தது. அங்குச் சென்றதும், ஆற்றில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை, சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட நிலம் மட்டுமே இருந்தது. எங்கள் பயணம் வீணாகிவிட்டதே என்று எண்ணியபடியே, இரண்டு உள்ளூர் மனிதர்களுடன் உரையாடினோம். அவர்களில் ஒருவர், “ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?” என்று கேட்டார். அங்குத் தொடங்கி, இயேசுவைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாங்கள் தழுவிக்கொண்டோம்.
தேவ ஆவியால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு, "தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்" (வ.26) தான் பயணிப்பதைக் கண்டுகொண்டார். செல்லும் வழியில், அவர் ஒரு எத்தியோப்பிய மந்திரியைச் சந்தித்தார் (வ.27). இந்த நபர் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, "அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் (ள)" பிலிப்பு ஏவப்பட்டார் (வ.29). எனவே பிலிப்பு இரதத்திடம் ஓடியபோது, அவர் "ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக்" (வ.30) கேட்டார். அந்த மந்திரி பிலிப்பிடம், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்?” என்று கேட்டார் (வ.34). இந்தக் கேள்வியில் தொடங்கி, பிலிப்புக்கு இயேசுவைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது (வ.35). பலர் சத்தியத்தைத் தேடுகிறார்கள், இயேசுவைப் பற்றி யாராகிலும் சொல்லும்படி காத்திருக்கிறார்கள். தேவனின் வழிகாட்டுதலுடன், வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களில் இயேசுவைப் பற்றி அவர்களிடம் பேசலாம்: வேலையில், உடற்பயிற்சி கூடத்தில், உணவகத்தில், பள்ளியில் அல்லது பயணத்தில் என்று எங்குமே. இயேசுவைப் பற்றிய உரையாடலுக்கு வழிவகுக்கும் கேள்வியை ஒருவர் எப்போது கேட்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பவுல் சொல்வது போல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்" (கொலோசெயர் 4:6) இருக்கவேண்டும். நீங்கள் ஒப்புக்கொடுத்தால், தேவன் தம் அன்பை உங்கள் மூலம் வெளிப்படுத்த முடியும். வனாந்தரத்தில் கேள்விகள் எழும்போது மக்கள் அணுகக்கூடிய நபராக இருங்கள்.