எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ப்ரெண்ட் ஹகெட்கட்டுரைகள்

வானவில்களும் தேவனின் வாக்குகளும்

நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புதமான ஆற்றலை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, ​​மற்ற சுற்றுலாப் பயணிகள் திடீரென புகைப்படம் எடுக்கத் தொடங்கியதைக் கவனித்தேன். அதே திசையில் பார்த்தபோது, ​​ஒரு வானவில் தோன்றியதைக் கண்டேன் , அது ஆற்றின் குறுக்கே வளைந்திருந்தது. இது குதிரைக் குளம்பு வடிவ கனேடிய நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தொடங்கி, அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் முடிவடைவது போல் தோன்றியது.

உண்மையில், வானவில்லுக்கு முடிவே இல்லை. வானவில் என்பது ஒரு முழு வட்டம், நான் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் விமானத்தின் ஜன்னலில் பார்த்துக் கொண்டிருந்தேன், சூரியன் சரியான திசையில் பிரகாசித்து, மேகங்களுக்கு மேலே ஒரு முழு வட்ட வானவில்லை வெளிக்காட்டியது. விமானம் திரும்பி, வட்டம் மறையும் வரை, இந்த  காட்சியால் பரவசமாக அமர்ந்திருந்தேன்.

நான் சிந்திக்கும்படி, அந்த வானவில் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. தேவனுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை, நாம் எங்கிருந்தாலும் அவர் தம் வாக்குத்தத்தங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். முடிவில்லாத, நம் நித்திய தேவன் "[அவரது] வில்லை மேகத்தில் வைத்(தார்)தேன்" (ஆதியாகமம் 9:13). "எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு" (வ.15) அது வாக்குத்தத்தமாக இருந்தது. இன்றும் கூட, நம் சிருஷ்டிகர் அந்த வாக்குத்தத்தத்தின் நினைவூட்டலை அவருடைய படைப்பாகிய நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் (வ.13-16).

ஏசாயா 40:28, “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன்.... அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” என்கிறது. என்ன ஒரு அற்புதமான சிந்தனை! தம் வாக்குத்தத்தத்தைக் காப்பவரைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு நித்தியமே இருக்கும், மேலும் அவருடைய புத்தியின் ஆழத்தை நாம் ஒருபோதும் அடைய மாட்டோம்.

 

வேதவசனங்கள் வெளிப்படுத்துவது என்ன

ஏப்ரல் 1817 இல், இங்கிலாந்தின் க்ளௌசெஸ்டர்ஷையரில் ஒரு தன்னிலையிழந்த இளம் பெண், அயல்நாட்டு ஆடைகளை அணிந்துகொண்டு, புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப்  பிச்சைக்காரி என்று கருதி, அதிகாரிகள் அவளைச் சிறையில் அடைத்தனர். இருப்பினும், அவள் ஜாவாசு தீவைச் சேர்ந்த இளவரசி கராபூ என்று சிறை அதிகாரிகளை நம்ப வைத்தாள். உண்மையில் அவள் மேரி வில்காக்ஸ் என்ற பணிப்பெண் என்பதை விருந்தினர் மாளிகை பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தும் வரை சமூகம் அவளை ராணிபோல பத்து வாரங்கள்  நடத்தியது.

இந்த இளம் பெண் எப்படி ஒரு முழு சமூகத்தையும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஏமாற்றினார் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால், 2 யோவான் புத்தகம் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்று நம்மை எச்சரிக்கிறது, அது குறிப்பிடுவது போல் "அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” (1:7). இவர்கள், இயேசு கிறிஸ்து "மாம்சத்தில்" வந்தார் என்பதை மறுப்பவர்கள் (வ.7), அல்லது கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்கள் (வ.9)  வேதாகமம் இன்று நமக்குப் போதுமானதாக இல்லை என்று அறிவிக்கிறார்கள். இந்த இரண்டு வகையான வஞ்சகர்களும் நாம் நம் "செய்கைகளின் பலனை" (வ.8) இழந்துபோகும்படி செய்யலாம் மற்றும் அவர்களின் துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கும்படி நம்மை ஏமாற்றலாம் (வ.11).

யாரும் ஏமாற்றப்படுவதை விரும்புவதில்லை. க்ளௌசெஸ்டர்ஷையர் மக்கள், சில ஆடைகள் மற்றும் உணவுகள் தவிர அதிகம் இழக்கவில்லை. ஆனால் பாவம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகள் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன என்று வேதாகமம் சொல்கிறது. நாம் வேதாகமத்தில் ஈடுபாடு கொள்ளுகையில், ​​“அவருடைய கற்பனைகளின்படி நடப்ப(தால்)தே” (வ.6) வஞ்சகத்திற்குத் தப்பிக்கத் தேவன் நமக்கு உதவுவார்.

தேவனுடைய வாக்குகளால் ஊக்கமடைதல்

மருத்துவமனையில் நீண்ட நாள் அது. இளமையில் ஜொலித்த அந்த பத்தொன்பது வயது இளைஞனைப் பாதித்த நோய்க்கு இன்னும் பதில் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் தளர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சரியமாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டியின் முன்புறத்தில் ஏசாயா 43:2 அச்சிடப்பட்டு, படியில் வைக்கப்பட்டிருந்தது. உள்ளே, நண்பர்கள் கையால் எழுதப்பட்ட பலதரப்பட்ட ஊக்கமளிக்கும் வேதாகம வசனங்கள் இருந்தன. அடுத்த மணிநேரம் வேதவசனங்களாலும், குடும்ப நண்பர்களின் சிந்தனையாக்கச் செயலாலும் உற்சாகம் உண்டானது.

கடினமான நேரங்கள் அல்லது குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள்,  எப்போதும் ஒரு ஆத்மார்த்தமான ஊக்கத்தை உபயோகிக்கலாம். அதுதான் வேத வசனங்கள். ஒரு நீண்ட பகுதியோ அல்லது ஒரே வசனமோ; உங்களை, ஒரு நண்பரை அல்லது குடும்ப உறுப்பினரை ஊக்குவிக்கும். தனிநபருக்காகவோ அல்லது அனைவருக்குமென்றோ பெறக்கூடிய உற்சாக துளிகளால் ஏசாயா 43 நிறைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிந்தனைகளை அதிலே கவனியுங்கள்: கர்த்தர் " உன்னைச் சிருஷ்டித்தவர்", "உன்னை உருவாக்கினவர்", "உன்னை மீட்டவர்" மற்றும் "உன்னைப் பேர்சொல்லி அழைத்தவர்" (வ.1). கர்த்தர் "உன்னோடு இருப்பார்" (வ. 2), அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தர்" மற்றும் அவர் நமது "இரட்சகர்" (வ. 3).

தேவனின் வாக்குகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, ​​அவை உங்களை ஊக்குவிக்கட்டும். உங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகையில், நீங்கள் வேறொருவரை ஊக்குவிக்கலாம். அந்த வசனப் பெட்டியைச் செய்ய அதிகம் செலவாகவில்லை, ஆனால் அதன் தாக்கம் விலையேறப்பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வசன அட்டைகளில் சில இன்னும் அந்த குடும்பத்தால் போற்றப்படுகின்றன.

மறுபடியும் பிறந்தீர்களா?

"மறுபடியும் பிறப்பதா? அதற்கு என்ன பொருள்? "நான் இதற்கு முன்பு அந்த வார்த்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" அடக்க ஆராதனையின் இயக்குநர் கேட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மரித்தவரின் மகன், யோவான் 3-ம் அதிகாரத்தின் வார்த்தைகளின் மூலம் அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கினார்.

"இது, நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு முறை பிறந்தோம் என்ற நிஜத்தைப் பற்றியது. நமது நல்ல செயல்களைத் தீய செயல்களுக்கு எதிராக எடைபோட, தேவனிடம் எந்த ஒரு மந்திர தராசும் இல்லை. நாம் ஆவியினால் பிறக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார். அதனால்தான் இயேசு சிலுவையில் மரித்தார்; அவர் நம்முடைய பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தினார், மேலும் அவருடன் நித்திய ஜீவனைப் பெறுவதைச் சாத்தியமாக்கினார். இதை நமது சுயத்தால் செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.

யோவான் 3 இல், நிக்கொதேமு உண்மையில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாரா என்று சந்தேகிக்கத் தொடங்கினார். வேத வாக்கியங்களில் தேறின போதகர் அவர் (வ. 1), இயேசு வித்தியாசமானவர் என்பதையும் அவருடைய போதனைக்கு அதிகாரம் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார் (வ. 2). இதை அவர் சோதிக்க விரும்பினார், எனவே அவர் ஒரு இரவு கிறிஸ்துவை அணுகி காரியத்தைக் கண்டுகொண்டார். "நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று" (வ. 7) என்ற இயேசுவின் கூற்றை நிக்கொதேமு ஏற்றுக்கொண்டு விசுவாசித்திருக்க வேண்டும், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட பிறகு (19:39) இரட்சகரின் உடலை அடக்கம் செய்ய அவர் உதவினார்.

ஆறுதல் கூட்டத்தை நடத்தியவர்  வீட்டிற்குச் சென்று யோவானின் நற்செய்தியின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க ஒப்புக்கொண்டார். அவரிடம் பேசிய மகனைப் போல, இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, அவர் நமக்கு உதவும்போது பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.