எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ப்ரெண்ட் ஹகெட்கட்டுரைகள்

வானவில்களும் தேவனின் வாக்குகளும்

நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புதமான ஆற்றலை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, ​​மற்ற சுற்றுலாப் பயணிகள் திடீரென புகைப்படம் எடுக்கத் தொடங்கியதைக் கவனித்தேன். அதே திசையில் பார்த்தபோது, ​​ஒரு வானவில் தோன்றியதைக் கண்டேன் , அது ஆற்றின் குறுக்கே வளைந்திருந்தது. இது குதிரைக் குளம்பு வடிவ கனேடிய நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தொடங்கி, அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் முடிவடைவது போல் தோன்றியது.

உண்மையில், வானவில்லுக்கு முடிவே இல்லை. வானவில் என்பது ஒரு முழு வட்டம், நான் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் விமானத்தின் ஜன்னலில் பார்த்துக் கொண்டிருந்தேன், சூரியன் சரியான திசையில் பிரகாசித்து, மேகங்களுக்கு மேலே ஒரு முழு வட்ட வானவில்லை வெளிக்காட்டியது. விமானம் திரும்பி, வட்டம் மறையும் வரை, இந்த  காட்சியால் பரவசமாக அமர்ந்திருந்தேன்.

நான் சிந்திக்கும்படி, அந்த வானவில் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. தேவனுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை, நாம் எங்கிருந்தாலும் அவர் தம் வாக்குத்தத்தங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். முடிவில்லாத, நம் நித்திய தேவன் "[அவரது] வில்லை மேகத்தில் வைத்(தார்)தேன்" (ஆதியாகமம் 9:13). "எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு" (வ.15) அது வாக்குத்தத்தமாக இருந்தது. இன்றும் கூட, நம் சிருஷ்டிகர் அந்த வாக்குத்தத்தத்தின் நினைவூட்டலை அவருடைய படைப்பாகிய நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் (வ.13-16).

ஏசாயா 40:28, “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன்.... அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” என்கிறது. என்ன ஒரு அற்புதமான சிந்தனை! தம் வாக்குத்தத்தத்தைக் காப்பவரைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு நித்தியமே இருக்கும், மேலும் அவருடைய புத்தியின் ஆழத்தை நாம் ஒருபோதும் அடைய மாட்டோம்.

 

வேதவசனங்கள் வெளிப்படுத்துவது என்ன

ஏப்ரல் 1817 இல், இங்கிலாந்தின் க்ளௌசெஸ்டர்ஷையரில் ஒரு தன்னிலையிழந்த இளம் பெண், அயல்நாட்டு ஆடைகளை அணிந்துகொண்டு, புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப்  பிச்சைக்காரி என்று கருதி, அதிகாரிகள் அவளைச் சிறையில் அடைத்தனர். இருப்பினும், அவள் ஜாவாசு தீவைச் சேர்ந்த இளவரசி கராபூ என்று சிறை அதிகாரிகளை நம்ப வைத்தாள். உண்மையில் அவள் மேரி வில்காக்ஸ் என்ற பணிப்பெண் என்பதை விருந்தினர் மாளிகை பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தும் வரை சமூகம் அவளை ராணிபோல பத்து வாரங்கள்  நடத்தியது.

இந்த இளம் பெண் எப்படி ஒரு முழு சமூகத்தையும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஏமாற்றினார் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால், 2 யோவான் புத்தகம் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்று நம்மை எச்சரிக்கிறது, அது குறிப்பிடுவது போல் "அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” (1:7). இவர்கள், இயேசு கிறிஸ்து "மாம்சத்தில்" வந்தார் என்பதை மறுப்பவர்கள் (வ.7), அல்லது கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்கள் (வ.9)  வேதாகமம் இன்று நமக்குப் போதுமானதாக இல்லை என்று அறிவிக்கிறார்கள். இந்த இரண்டு வகையான வஞ்சகர்களும் நாம் நம் "செய்கைகளின் பலனை" (வ.8) இழந்துபோகும்படி செய்யலாம் மற்றும் அவர்களின் துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கும்படி நம்மை ஏமாற்றலாம் (வ.11).

யாரும் ஏமாற்றப்படுவதை விரும்புவதில்லை. க்ளௌசெஸ்டர்ஷையர் மக்கள், சில ஆடைகள் மற்றும் உணவுகள் தவிர அதிகம் இழக்கவில்லை. ஆனால் பாவம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகள் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன என்று வேதாகமம் சொல்கிறது. நாம் வேதாகமத்தில் ஈடுபாடு கொள்ளுகையில், ​​“அவருடைய கற்பனைகளின்படி நடப்ப(தால்)தே” (வ.6) வஞ்சகத்திற்குத் தப்பிக்கத் தேவன் நமக்கு உதவுவார்.

தேவனுடைய வாக்குகளால் ஊக்கமடைதல்

மருத்துவமனையில் நீண்ட நாள் அது. இளமையில் ஜொலித்த அந்த பத்தொன்பது வயது இளைஞனைப் பாதித்த நோய்க்கு இன்னும் பதில் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் தளர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சரியமாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டியின் முன்புறத்தில் ஏசாயா 43:2 அச்சிடப்பட்டு, படியில் வைக்கப்பட்டிருந்தது. உள்ளே, நண்பர்கள் கையால் எழுதப்பட்ட பலதரப்பட்ட ஊக்கமளிக்கும் வேதாகம வசனங்கள் இருந்தன. அடுத்த மணிநேரம் வேதவசனங்களாலும், குடும்ப நண்பர்களின் சிந்தனையாக்கச் செயலாலும் உற்சாகம் உண்டானது.

கடினமான நேரங்கள் அல்லது குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள்,  எப்போதும் ஒரு ஆத்மார்த்தமான ஊக்கத்தை உபயோகிக்கலாம். அதுதான் வேத வசனங்கள். ஒரு நீண்ட பகுதியோ அல்லது ஒரே வசனமோ; உங்களை, ஒரு நண்பரை அல்லது குடும்ப உறுப்பினரை ஊக்குவிக்கும். தனிநபருக்காகவோ அல்லது அனைவருக்குமென்றோ பெறக்கூடிய உற்சாக துளிகளால் ஏசாயா 43 நிறைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிந்தனைகளை அதிலே கவனியுங்கள்: கர்த்தர் " உன்னைச் சிருஷ்டித்தவர்", "உன்னை உருவாக்கினவர்", "உன்னை மீட்டவர்" மற்றும் "உன்னைப் பேர்சொல்லி அழைத்தவர்" (வ.1). கர்த்தர் "உன்னோடு இருப்பார்" (வ. 2), அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தர்" மற்றும் அவர் நமது "இரட்சகர்" (வ. 3).

தேவனின் வாக்குகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, ​​அவை உங்களை ஊக்குவிக்கட்டும். உங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகையில், நீங்கள் வேறொருவரை ஊக்குவிக்கலாம். அந்த வசனப் பெட்டியைச் செய்ய அதிகம் செலவாகவில்லை, ஆனால் அதன் தாக்கம் விலையேறப்பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வசன அட்டைகளில் சில இன்னும் அந்த குடும்பத்தால் போற்றப்படுகின்றன.

மறுபடியும் பிறந்தீர்களா?

"மறுபடியும் பிறப்பதா? அதற்கு என்ன பொருள்? "நான் இதற்கு முன்பு அந்த வார்த்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" அடக்க ஆராதனையின் இயக்குநர் கேட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மரித்தவரின் மகன், யோவான் 3-ம் அதிகாரத்தின் வார்த்தைகளின் மூலம் அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கினார்.

"இது, நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு முறை பிறந்தோம் என்ற நிஜத்தைப் பற்றியது. நமது நல்ல செயல்களைத் தீய செயல்களுக்கு எதிராக எடைபோட, தேவனிடம் எந்த ஒரு மந்திர தராசும் இல்லை. நாம் ஆவியினால் பிறக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார். அதனால்தான் இயேசு சிலுவையில் மரித்தார்; அவர் நம்முடைய பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தினார், மேலும் அவருடன் நித்திய ஜீவனைப் பெறுவதைச் சாத்தியமாக்கினார். இதை நமது சுயத்தால் செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.

யோவான் 3 இல், நிக்கொதேமு உண்மையில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாரா என்று சந்தேகிக்கத் தொடங்கினார். வேத வாக்கியங்களில் தேறின போதகர் அவர் (வ. 1), இயேசு வித்தியாசமானவர் என்பதையும் அவருடைய போதனைக்கு அதிகாரம் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார் (வ. 2). இதை அவர் சோதிக்க விரும்பினார், எனவே அவர் ஒரு இரவு கிறிஸ்துவை அணுகி காரியத்தைக் கண்டுகொண்டார். "நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று" (வ. 7) என்ற இயேசுவின் கூற்றை நிக்கொதேமு ஏற்றுக்கொண்டு விசுவாசித்திருக்க வேண்டும், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட பிறகு (19:39) இரட்சகரின் உடலை அடக்கம் செய்ய அவர் உதவினார்.

ஆறுதல் கூட்டத்தை நடத்தியவர்  வீட்டிற்குச் சென்று யோவானின் நற்செய்தியின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க ஒப்புக்கொண்டார். அவரிடம் பேசிய மகனைப் போல, இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, அவர் நமக்கு உதவும்போது பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபிக்க தூண்டப்படல்

ஒரு சக பணியாளரின் ஜெபவாழ்க்கை எங்களது மேலாளரால் வளர்ச்சியடைந்ததாக ஒருமுறை என்னிடம் கூறினார். சற்று கடினமான எங்கள் மேலாளர், அவளுடன் சில ஆவிக்குரிய விஷயங்களை பகிர்ந்து அவள் அதிகமாக ஜெபிக்கத் தூண்டினார் என்று எண்ணி அதனால் நானும் ஊக்கமடைந்தேன். ஆனால் என் யூகம் தவறாயிற்று. எனது சக பணியாளரான தோழி இவ்விதமாக விளக்கினார்: “ஒவ்வொரு முறையும் மேளானா் வருவதைப் பார்த்ததும், நான் ஜெபிக்க ஆரம்பித்து விடுவேன்.” அவருடன் பேசும் முன்பு ஒவ்வொரு முறையும் அவள் ஜெபித்ததால், அவளுடைய ஜெப நேரம் அதிகரித்தது. ஏனெனில், தனது மேலாளருடன் பணியாற்றுவது சவாலானது, சரியான பணி உறவிற்குத் தேவனின் உதவி அவளுக்குத் தேவை என அறிந்திருந்தாள், அதனால் அவள் தேவனை அதிகம் கூப்பிட்டாள்.

கடினமான நேரங்களிலும், உரையாடல்கள் மத்தியிலும் ஜெபிக்கும் எனது சக பணியாளரின் பழக்கத்தை நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். இது வேதாகம பழக்கம்தான், 1 தெசலோனிக்கேயரில் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு பவுல், “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்” (5:17-18) என நினைவூட்டினார். நாம் எதை எதிர்கொண்டாலும், ஜெபிப்பதே சிறந்தது. இது நம்மைத் தேவனோடு இணைக்கவும், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்காக அவரை அழைக்கவும் உதவுகிறது (கலாத்தியர் 5:16). இதனால் நாம் மனித சித்தத்திற்கு இசைவதை தவிர்ப்போம். நாம் எதிர்க்கப்படும்போதும் “ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ” (1 தெசலோனிக்கேயர் 5:13) நமக்கு உதவுகிறது.

தேவனுடைய ஒத்தாசையோடு, அவரில் மகிழ்ந்து, எல்லாவற்றுக்காகவும் ஜெபித்து, அடிக்கடி நன்றி கூறலாம். இயேசுவுக்குள் நம் சகோதர சகோதரிகளுடன் இன்னும் இசைவுடன் வாழ இவை நமக்கு உதவி செய்யும்.

தேவனின் அன்பு கரங்களில்

மற்றுமொரு வியாதிக்குப்பின், எனக்கு புரியாத என் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிகம் பயந்தேன். ஒருநாள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரையில், “பூமியின் சுழற்சி வேகம்” அதிகரித்துள்ளதால் , பூமி “தடுமாறுகிறது” மற்றும் “வேகமாக சுழல்கிறது” என்பதாக விஞ்ஞானிகள் எழுதியிருந்ததை வாசித்தேன். “உலக கடிகார நேரத்திலிருந்து ஒரு விநாடியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள். ஒரு விநாடி இழப்பு பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், பூமியின் சுழற்சி மாறக்கூடும் என்பது எனக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சிறிய உறுதியற்ற தன்மை கூட என் விசுவாசத்தைத் தடுமாறச் செய்யும். இருப்பினும், தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை அறிவது, நாம் அறியாதவை எவ்வளவு பயமுறுத்துகிறதாயினும் அல்லது நம் சூழ்நிலைகள் எவ்வளவு நிலையற்றதாயினும், தேவனை நம்ப எனக்கு உதவுகிறது.

சங்கீதம் 90-ல் மோசே சொன்னார், “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” (வ. 2). எல்லா படைப்பின் மீதும் தேவனின் எல்லையற்ற வல்லமை, கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவராக, காலம் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று மோசே அறிவித்தார் (வ.3-6).

தேவனையும் அவர் உருவாக்கிய அற்புதமான உலகத்தையும் அறிய நாம் முயலும்போது; அவர், காலத்தையும் அனைத்து படைப்பையும் தொடர்ந்து நேர்த்தியாக ஆளுவதைக் கண்டுகொள்ளலாம். நமது வாழ்விலும்கூட புரியாத மற்றும் புதிதாக அறிந்த ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், தேவனை நம்பலாம். அவருடைய அனைத்துப் படைப்புகளும் அவரின் அன்பான கரங்களில் பாதுகாப்பாக உள்ளன.

இயேசுவில் வளா்தல்

நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, “ஒரு நாள்” என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, “ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்” என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.

அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த “முள்” அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம்தான் பவுல் தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).

நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;” (வ.10). உண்மையிலேயே “வளர்வது” என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.