எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

முழுமையாய் நெருங்கிச் சேருதல்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.

நாளைய தினத்தை இன்று பார்ப்பது

மேகங்களற்ற நீல நிற வானத்தை கூர்ந்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நம்முடைய சிருஷ்டிகரின் மகிமையான படைப்புகளில் ஓர் அழகிய பகுதி இந்த வானம். இது நம்முடைய சந்தோஷத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வானத்தைக் கண்டு விமான ஓட்டிகள் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பார்கள்! அவர்கள் பறப்பதற்கு ஏற்ற சிறந்த வான்வெளியை பல அடைமொழிகளைக் கொண்டு விவரிப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது, “நாளைய தினத்தை நீ இன்றே பார்ப்பது.”

“நாளைய தினத்தை இன்றே பார்ப்பது” என்பது நமது பார்வைக்கு அப்பாற்பட்டது. சொல்லப் போனால் இன்று நம்மை நோக்கி வரும் காரியங்களைக்கூட சில சமயங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” என்று வேதாகமம் கூறுகிறது (யாக். 4:14).

ஆனால் வரையறைக்குட்பட்ட நம்முடைய பார்வை விரக்தியை உண்டாக்கத் தேவையில்லை. மாறாக நாம் மகிழ்ந்திருக்கலாம். ஏனெனில் நம்முடைய எதிர்காலத்தை முற்றும் காண்கிற தேவன் மேல் நாம் விசுவாசம் வைத்துள்ளோம். அதின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ள போகும் சவால்களையும் அதன் தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறபடியால், நாம் கலங்கத் தேவையில்லை. இதை அப்போஸ்தலனாகிய பவுல் நன்கு அறிந்துள்ளார். ஆகவேதான், “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”
(2 கொரி. 5:6) என்று நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளினால் அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

இன்றைய தினத்தையும், நாம் காணாத எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கும்பொழுது, நம் வாழ்வை எதிர்நோக்கி வரும் எக்காரியங்களைக் குறித்தும் நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் தேவனோடு நடக்கிறோம். நமக்கு முன் இருப்பவைகளை அவர் அறிந்திருக்கிறார். அவற்றைக் கையாள அவர் பெலமுள்ளவராய், ஞானம் உள்ளவராய் இருக்கிறார்.

நான் அனைத்தையும் அறிவேன்

எங்களுடைய மகன் மற்றும் மருமகளுக்கு திடீரென ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. எங்கள் பேரன் கேமரன் (Cameron) நிமோனியா மற்றும் மூச்சுக் குழாய் வியாதியினால் அவதிப் பட்டுக்கொண்டிருந்ததால், அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது. ஆகவே, அவர்களது மற்றொரு மகனாகிய ஐந்து வயது நாதனை (Nathan) பள்ளியிலிருந்து அழைத்து வரும்படி  கேட்டனர். மார்லீனுக்கும், எனக்கும் அவனை அழைத்து வருவதில் மிக்க மகிழ்ச்சி.

எங்களுடைய காரில் நாதன் ஏறியவுடன், மார்லீன் அவனைப் பார்த்து, “இன்று நாங்கள் உன்னை அழைத்துச் செல்ல வந்தது உனக்கு ஆச்சரியமளிக்கிறதா?” என்று கேட்டதற்கு, “இல்லை!” என பதில் கூறினான். ஏன் அவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனக் கேட்டதற்கு, “ஏனென்றால் எனக்கு எல்லாம் தெரியும்!” எனக் கூறினான்.

ஒரு ஐந்து வயது சிறுவன் தனக்கு எல்லாம் தெரியும் எனக் கூறலாம். ஆனால் சற்று வயதான நமக்கு அப்படிக் கூறுவது முடியாத காரியம் எனத் தெரியும். சொல்லப்போனால் அநேக சமயங்களில் பதில்களைக் காட்டிலும் கேள்விகளே நமக்குள் அதிகம் எழும்புகிறது. எல்லாவற்றையும் குறித்து நாம் அறியாததால் எதற்கு, எப்படி, எப்பொழுது என்று வாழ்க்கையைக் குறித்து எண்ணிக்கொண்டிருக்கும் நாம் அநேகந்தரம் எல்லாம் அறிந்த தேவனை மறந்து விடுகிறோம்.

எல்லாவற்றையும் அறிந்த தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவராய் நம்முடைய உள்ளந்திரியங்களையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று சங்கீதம் 139:1, 3 கூறுகிறது. “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்,” என தாவீது கூறுகிறான். தேவன் நம்மை பரிபூரணமாய் நேசிக்கிறார். இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நம்முடைய சூழ்நிலைகளில் நமக்கு ஏற்ற உதவியை செய்திடுவார் என்கிற அறிவு நமக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது.

நம்முடைய அறிவு எப்பொழுதும் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் கர்த்தரை அறிவதே பிரதானமானது. அவரின் மீது நம்முடைய விசுவாசத்தை வைக்கலாம்.

காலத்திற்கு அப்பாற்பட்ட இரட்சகர்

2015ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தன்னுடைய 116வது வயதில் மரித்த ஜரலியன் டால்லி (Jaralean Talley) அன்றைய தினத்தில் உலகத்திலேயே வயதான நபராக கருதப்பட்டார். 1995ஆம் ஆண்டு எருசலேம் நகரம் தன்னுடைய மூன்றாயிரமாவது பிறந்த நாளை கொண்டாடியது. ஒரு மனுஷனை பொறுத்தமட்டில் 116 என்பது மிக அதிகமான வயது, அதேபோல ஒரு பட்டணத்திற்கு 3000 என்பதும் மிக அதிகமான ஆண்டுகள். ஆனால் இதையும் விட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள மலைகளில் இருக்கும் தேவதாரு மரங்கள் 4,800 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அது நம்முடைய கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாமைக் காட்டிலும் 800 ஆண்டுகள் பழைமையானது.

தன்னைக் குறித்து யூத மதத்தலைவர்கள் விசாரித்த பொழுது, தான் ஆபிரகாமுக்கும் முன்னதாகவே இருப்பவராக இயேசு தெரிவித்தார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றார் (யோவா. 8:58). அவருடைய உறுதியான அறிக்கை அவரை எதிர்கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் அவரை கல்லெறிந்து கொல்ல வழி தேடினார்கள். ஏனென்றால், இயேசு தன்னுடைய வயதை குறித்து பேசவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மாறாக தன்னை நித்தியவாசியாக அறிவித்ததின் மூலம் “இருக்கிறவராக இருக்கிறேன்” (பார்க்கவும் யாத. 3:14) என்கிற தேவனுடைய ஆதிப் பெயரோடு தன்னை இணைத்ததால் அவர்கள் கோபமடைந்தார்கள். ஆனால், திரித்துவத்தின் நபராக இயேசு முறையாகவே அந்நாமத்தை உரிமைபாராட்ட முடியும்.

யோவான் 17:3ல், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு ஜெபித்தார். நாம் என்றென்றும் அவரோடு ஜீவிப்பதற்காக, காலத்திற்க்கு அப்பாற்பட்டவர் காலத்திற்குள் கடந்து வந்தார். அவர் நம்முடைய இடத்திலே மரித்து உயிர்ந்தெழுந்ததின் மூலம் நித்திய வாழ்வை நமக்களித்துள்ளார். அவர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்ததினாலே, காலத்தினால் வரையறுக்கப்படாத நித்திய வாழ்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அங்கு காலத்திற்கு அப்பாற்ப்பட்டவரோடு நித்தியத்தை கழிப்போம்.

பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம்

1974ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீன விவசாயிகள் கிணறு வெட்டிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சரியமானதொன்றை கண்டுபிடித்தார்கள். அவர்களுடைய வறண்ட நிலத்திற்கடியில், கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த ஆளுயர டெரக்கோட்டா (Terracotta) சிலைகள் புதைந்திருந்தன. மத்திய சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆபூர்வமான கண்டுபிடிப்பில் 8000 வீரர்களும், 150 குதிரைப் படையும், 520 குதிரைகளைக் கொண்ட 130 ரதங்களும் இருந்தன. இன்று சீனாவின் மிக முக்கியமான சுற்றுலா ஸ்தலமாக இந்த டெரக்கோட்டா படை மாறிவிட்டது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதைக் காண வருகின்றனர். அநேக நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த இவ்வியப்பளிக்கும் பொக்கிஷம், இன்று உலகத்தோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல், இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம், கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது என எழுதி உள்ளார். “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரி. 4:7). கிறிஸ்துவையும், அவருடைய அன்பையும் குறித்த செய்தியே நமக்குள் இருக்கும் பொக்கிஷம்.

இது மறைத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் அல்ல. தேவனுடைய அன்பினாலும், கிருபையினாலும் உலகத்திலுள்ள எல்லா தேசத்தின் மக்களும் அவருடைய குடும்பத்திற்குள் வந்து சேர இதை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆவியானவரின் துணையோடு இன்று இப்பொக்கிஷத்தை நாம் எவரிடமாவது பகிர்ந்து கொள்வோமாக.

நம் தேவைகளின் ஆதாரம்

2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முழு உலகத்தின் கவனமும், சிலி (Chile) தேசத்தின் கோபியாபோ (Copiapo) என்னும் இடத்திலுள்ள சுரங்க குழியின் மீதே இருந்தது. ஏனெனில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 2300 அடி ஆழத்தில், 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தார்கள். பூமிக்கடியில் இருளிலே அகப்பட்டுக்கொண்டிருந்த அவர்களுக்கு எப்பொழுது உதவி வரும் என்று தெரியாது. பதினேழு நாட்கள் காத்திருப்பிற்குப் பின் துளை போடும் சத்தத்தை கேட்டார்கள். மீட்புக் குழுவினர் சுரங்கக் குழியின் சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சிறு துளைகள் போட்டு, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்ப வழி உண்டாக்கினார். அச்சுரங்க தொழிலாளிகள் பூமியின் மேற்பரப்பிலிருந்து மீட்புக் குழுவினர் அனுப்பும் பொருட்களை கொண்டு பிழைத்திருக்க அம்மூன்று வழிகளையே சார்ந்திருந்தனர். 69ஆம் நாள் அக்குழியிலிருந்த கடைசி சுரங்கத் தொழிலாளியும் மீட்கப்பட்டான்.

இவ்வுலகில் நம்மையும் தாண்டி உள்ள வளத்தையும் ஆதாரத்தையும் ஒதுக்கிவிட்டு, நம்மால் வாழ இயலாது. அண்டசராசரங்களையும் படைத்த சிருஷ்டி கர்த்தாவே நம் தேவை அனைத்தையும் சந்திக்கிறவர். அச்சுரங்க தொழிலாளிகளின் தேவைகளை சந்திக்க உதவிய அத்துளைகள் போல, நம்முடைய தேவை அனைத்தையும் சந்திக்கும் தேவனோடு நம்மை இணைப்பது நம்முடைய ஜெபங்களே.

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்று ஜெபிக்கும்படி இயேசு உற்சாகப்படுத்துகிறார். அடிப்படை தேவையான ஆகாரத்திற்காக ஜெபிக்க கூறுவதின் மூலம் நம்முடைய அன்றாட வாழ்வின் அனைத்து தேவைகளையும் அவர் நமக்கு அளிக்க விரும்புவதை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, சரீரப்பிரகாரமான தேவைகள் மட்டுமின்றி சுகம், தைரியம், ஞானம் மற்றும் ஆறுதல் ஆகிய அனைத்தையும் அளிக்க விரும்புகிறார்.

ஜெபத்தின் மூலம் எக்கணமும் அவரை அணுகமுடியும். மேலும் நாம் கேட்கும் முன்னமே நம்முடைய தேவைகள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கின்றார் (வச. 8). நீங்கள் எவ்வகையான தேவையோடு இன்று போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்... கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).

அவரை யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?

1929ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை மாலை எனும் இதழில் “சிறு பிள்ளையாக வேதாகமத்திலிருந்தும், தால்முட்டிலிருந்தும் (Talmud – நியாயப் பிரமாண விளக்கவுரை) அறிவுரை பெற்றேன். நான் ஒரு யூதனாக இருந்தாலும் அந்த பிரகாசமான நசரேயனால் பரவசமடைந்தேன். சுவிசேஷத்தை படிக்கும் பொழுது, இயேசுவின் பிரசன்னத்தை உணராமல் ஒருவனாலும் இருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் ஜீவிக்கிறார். எந்தப் புராணக்கதையிலும் அப்படிபட்ட ஜீவன் இல்லை” என்று ஆல்பர்ட் கூறினார்.

இயேசுவை பின்பற்றினவர்கள், அவர் விசேஷமானவர் என்று உணர்ந்திருந்ததைக் குறித்து புதிய ஏற்பாட்டிலே கூறியுள்ளனர். தன்னைப் பின்பற்றினவர்களை நோக்கிப் பார்த்து இயேசு, “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் ஏரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் பதில் கூறினார்கள்” (மத். 16:13-14). இஸ்ரவேல் தேசத்தின் தலைசிறந்த தீர்கக்தரிசிகளோடு ஒப்பிடப்படுவது மிகப் பெரிய பாராட்டுதான். ஆனால், இயேசு பாராட்டுதல்களை தேடவில்லை. அவர் அவர்களுடைய புரிதலை ஆராய்ந்து விசுவாசத்தை தேடினார். ஆகவே அவர் இரண்டாவதாக ஒரு கேள்வி கேட்டார் “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்” (16:15).

“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (வச. 16) என்று பேதுரு உரைத்த வார்த்தைகளில் இயேசுவின் உண்மையான அடையாளம் முழுமையாக வெளிப்பட்டது. இயேசு அவரையும், நம்மை காப்பாற்றும் அவருடைய அன்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் வாஞ்சிக்கிறார். ஆகவே தான் “இயேசு யாரென்று நீ நினைக்கின்றாய்?” என்ற கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் இறுதியாகப் பதில் கூற வேண்டும்.

உங்களுடைய மதிப்பு என்ன?

கி.மு. 75ல் ஜூலியஸ் சீஸர் என்ற இளம் ரோம பிரபுவை கடற்கொள்ளையர்கள் பணத்திற்காகக் கடத்திச் சென்றதாக ஒரு கதை சொல்வார்கள். அவனை விடுவிக்க பணமாக 20 தாலந்து வெள்ளியைக் கேட்டனர். (இன்றைய மதிப்பு 6,00,000 அமெரிக்கா டாலர்களாகும்). இந்த தொகையை கேட்டபொழுது சீஸர் நகைத்து மீட்பு பணத்தை 50 தாலந்துகளாக உயர்த்தும்படிக் கூறினான். ஏனெனில் அவன் 20 தாலந்துகளுக்கு மேலாக விலையேறப்பட்டவன் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவர்களோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

சீஸர் கர்வத்துடன் தன் மதிப்பை பணத்தினால் நிர்ணயித்து கொண்டதற்கும், தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வைத்துள்ள மதிப்பிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! நம்முடைய மதிப்பை பணத்தினால் அளந்து விட முடியாது. நமது பரம பிதா நமக்காக என்ன செய்தார் என்பதே நமது மதிப்பை காட்டுகின்றது.

என்ன விலைக் கிரயம் செலுத்தி நம்மை இரட்சித்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவங்களில் இருந்து மீட்க பிதாவாகிய தேவன் விலைக்கிரயம் செலுத்தினார். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18-19).

தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால் தம்முடைய ஒரே குமாரனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்துக் குமாரனின் இரத்தத்தையே நமக்கு விலைக் கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக் கொண்டு, மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்தார். அந்த அளவிற்கு நீங்கள் அவரில் விலையேறப் பெற்றவர்கள்.

புதிய நோக்கம்

ஜேக்கப் டேவிஸ் 1800ல் வாழ்ந்த ஒரு தையல்காரர். அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அந்த நாட்களில் அமெரிக்க மேற்கு மாகாணத்தில் தங்க சுரங்க வியாபாரம் ஓங்கியிருந்தது. அதில் வேலை செய்யும் வேலையாட்களின் கால் சட்டை (பாண்ட்) சீக்கிரத்தில் கிழிந்து போய்க்கொண்டிருந்தது, அதற்கு ஓர் தீர்வை காணவேண்டும் என்று துடித்தார். அதனால் அவர் ‘லெவி ஸ்டிராஸ்’ (Levi Strauss) நடத்திவரும் கம்பெனிக்கு சென்று, அவரிடம் இருந்து கூடாரம் செய்ய பயன்படும் துணியை வாங்கினார். அந்தத் துணி எளிதில் கிழியாத கனமான துனியாக இருந்தது. அத்துணியில் வேலையாட்களுக்கு ஏற்ற கால் சட்டையை தைத்துகொடுத்தார். அன்று தான் நீல நிற ஜீன்ஸ் பிறந்தது. இன்றைக்கு லெவியைத் தவிர்த்து பல வகையான ஜீன்ஸ் துணிகளை உலக சந்தையில் பார்க்கலாம். அதை பலர் மிகவும் விரும்பி அணியும் ஆடையாகவும் மாறிவிட்டது. ஒரு மனிதன் ஓர் சாதாரண கூடார துணிக்கு புது வடிவம் கொடுத்ததினால் இது நடந்தது.

சீமோனும் அவன் நண்பர்களும் கலிலேயா கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவர்கள் தான். இயேசு வந்து, அவர்களை அழைத்து, அவர்களுக்கு ஒரு புதிய நோக்கத்தையும், தொடக்கத்தையும் கொடுத்தார். இனிமேல் அவர்கள் மீன்களை பிடிக்கப் போவதில்லை. ஏனெனில் “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” ( மாற். 1:17) என்று இயேசு சொன்னார்.

இந்தப் புதிய நோக்கம் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. இயேசுவே அவர்களுக்கு எல்லாவற்றையும் போதித்தார். அதனால் அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற போது அவர்கள் மூலமாக தேவன் மக்களின் மனங்களை தொட்டார். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் இவர்கள் உலகுக்கு எடுத்துச் சென்றனர். இன்று நாமும் அவர்களைப் போல கிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் உலகுக்கு நற்செய்தியாய் எடுத்துச் செல்கிறோம்.

நம் வாழ்வில் இந்த தெய்வீக அன்பு வெளிப்படட்டும். ஏனெனில் அது பிறருடைய வாழ்க்கையையும், நோக்கங்களையும் நித்திய வாழ்வின் தீர்மானங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.