எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

பாதுகாப்பான கரங்கள்

ஒரு கயிறு அறுபடுவது போல, டக் மெர்க்கியின் வாழ்க்கைக் கயிறு ஒன்றன்பின் ஒன்றாக அறுபட்டுக் கொண்டிருந்தது. “புற்றுநோயுடன் போராடி என் தாயார் தோற்றுப் போனார்; வெகுநாளாய் இருந்த என்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; என் வருமானம் தடைபட்டது; என் வேலை மந்தமாக சென்றது... என்னைச் சுற்றியிருந்த இந்த பிரச்சனைகளினால் என்னுடைய ஆவிக்குரிய இருள் மிகவும் ஆழமாயிருந்தது” என்று போதகரும், சிற்பியுமான டக் மெர்க்கி எழுதுகிறார். இந்த கூட்டுநிகழ்வுகளும் அவருடைய இறுக்கமான வாழ்க்கையும் இணைந்து, “மறைவிடம்” என்ற ஒரு சிற்பத்தை அவர் செதுக்க நேர்ந்தது. கிறிஸ்துவின் ஆணியடிக்கப்பட்ட கரங்கள் இரண்டும் அதற்குள் ஏதோ ஒன்றை பாதுகாப்பதுபோல மூடியிருக்கும்படி அந்த சிற்பத்தை வடித்திருந்தார். 

அந்த சிற்பம் “தனக்குள் வந்து ஒளிந்துகொள்ளும்படிக்கு கிறிஸ்து கொடுக்கும் அறைக்கூவல்” என்று டக் தன்னுடைய சிற்பத்திற்கு விளக்கமளிக்கிறார். சங்கீதம் 32ல், தாவீது தேவனையே தன்னுடைய சிறந்த புகலிடமாய் கண்டுபிடித்ததாக பாடுகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு அருளுகிறார் (வச. 1-5). குழப்பங்களின் மத்தியில் ஜெபிக்கும்படிக்கு நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 6). 7ஆம் வசனத்தில், சங்கீதக்காரன் தேவன் மீதான தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்: “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.”

பிரச்சனைகள் வரும்போது நீங்கள் யாரிடமாய் திரும்புகிறீர்கள்? நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை உடைந்து கேள்விக்குள்ளாகும் போது, இயேசுவின் மன்னிப்பின் மூலம் நித்தியப் பாதுகாப்பை அருளும் தேவனிடத்தில் நாம் மறைந்துகொள்ளலாம். 

காலத்திற்கேற்ற தீர்வு

சைமனுக்கும் ஜெஃப்ரிக்குமான பகை ஆண்டுகளாய் நீடித்தது. அந்த உறவை சரிசெய்ய சைமன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடைசெய்யப்பட்டது. ஜெஃப்ரியின் தாயாரின் மரணத்தைக் கேள்விப்பட்ட சைமன், கென்யாவிலுள்ள மேல் நாட்டிற்கு பயணம்செய்து அந்த மரண ஊர்வலத்தில் பங்கெடுத்தான். அதற்கு பின்பு அவர்கள் இருவருக்கும் இடையில் நேரிட்டதைக் குறித்து சைமன்,  “அந்த மரண ஊர்வலத்திற்கு பின்பு அனைத்து சூழ்நிலையும் எப்படி தலைகீழாய் மாறும் என்பதை நான் சற்றும் ஊகிக்கவில்லை. நாங்கள் இருவரும் மனம் திறந்து பேசினோம். நாங்கள் கட்டிப்பிடித்து, அந்த தருணத்தை அனுபவித்து, ஒன்றாய் ஜெபித்து, மீண்டும் சந்திக்கவும் திட்டமிட்டோம்” என்று கூறினான். சைமனும் ஜெஃப்ரியும் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தனர் என்றால், பல மனவேதனைகளை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். 

மத்தேயு 5:21-26ல் தீர்வுகாணப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயேசு உதவிசெய்கிறார். கோபம் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்துகிறார் (வச. 22). மேலும் உறவுரீதியாய் சரிசெய்யப்படாத பிரச்சனைகளை தேவனை ஆராதிப்பதற்கு முன்பு சரிசெய்யப்படவேண்டும் (வச. 23-24). ‘நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து” என்னும் இயேசுவின் ஞானமான போதனை, எவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒப்புரவாகிறோமோ அது நமக்கும் மற்றுவர்களுக்கும் நல்லது என்பதை வலியுறுத்துகிறது. 

உறவுகள் சவாலானது; அது நம் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, கல்விக்கூடங்களிலோ, அல்லது சகவிசுவாசிகளிடத்திலோ, நம்முடைய கிரியையை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய சமாதானக் காரணரை (ஏசாயா 9:6) பிரதிபலிக்கிறவர்களாய் நம்முடைய இருதயத்தையும் கரங்களையும் அகல விரித்து, தீர்வுகாணமுடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பிரயாசப்படுவோம்.    

துணிச்சலான விசுவாசம்

இரண்டாம் உலகப்போரில் பிரேம் பிரதாமின் (1924-1998) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அவர் காயங்களோடு பாராசூட்டின் உதவியுடன் தப்பித்தார். ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் நொண்டியே நடக்கவேண்டியதாயிருந்தது. அவர் சொல்லும்போது, “எனக்கு ஒரு கால் நொண்டி. இமயமலைக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு என்னை அழைத்தது வியப்பல்லவா?” அவர் நேபாளத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதினிமித்தம் கைதிகளை தண்டிக்கும் கொடிய “மரண நிலைவறைகளில்” அடைக்கப்பட்டு, கொடுந்துன்பத்தை அனுபவித்துள்ளார். பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு வித்தியாசமான சிறைச்சாலைகளில் பிரேம் அடைக்கப்பட்டார். அவருடைய துணிச்சலான சாட்சி, சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் என்று பலருடைய வாழ்க்கையைத் தொட்டு, அவர்கள் இயேசுவின் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லும் அளவிற்கு கனியுள்ளதாய் இருந்தது. 

இயேசுவின் மீதான தன்னுடைய விசுவாசத்தினிமித்தமும், முடவனை சொஸ்தமாக்கியதற்காகவும் (அப். 4:9), அப்போஸ்தலனாகிய பவுல் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கிறிஸ்துவை துணிச்சலாய் பிரசங்கித்தார் (வச. 8-13).

பேதுருவைப்போல இன்று நாமும் உபத்திரவத்தை சந்திக்கலாம் ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மன்னிக்கிற அதிகாரத்திற்கு ஆதாரமாக உயிர்த்தெழுந்து (வச. 4:10), இரட்சிப்பின் காரணராய் (வச. 12) இருக்கிறவர், நம்முடைய குடும்பத்தினருக்கும், உடன் வேளையாட்களுக்கும், சக மாணவர்களுக்கும்  மிகவும் அத்தியாவசியமான தேவை. இயேசு கொடுக்கும் இந்த இரட்சிப்பை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு, ஜெபத்தோடும் துணிச்சலோடும் நற்செய்தியை நாம் பிரசங்கிப்போம். 

இயேசுவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள்

“மகனே, உனக்கு கொடுப்பதற்கு என்னிடத்தில் அதிகம் இல்லை. ஆனால் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுத்துவிடாதே.” கல்லூரிக்கு போகும்போது ஜெரோமின் தகப்பனார் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஒரு விளையாட்டு வீரனாக மேடையில் நிற்கும்போது தனது தந்தையின் இந்த வார்த்தைகளை ஜெரோம் நினைவுகூர்ந்தான். இந்த வார்த்தைகள் ஜெரோமின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு ஆதாரமாய், மேடையில் தன் பேச்சை முடிக்கும்போது, தன்னுடைய மகனைப் பார்த்து, “மகனே, நம்முடைய நல்லபெயரைக் காட்டிலும் உனக்கு கொடுப்பதற்கு முக்கியமானது வேறொன்றுமில்லை” என்று சொன்னான். 

கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு நற்பெயர் என்பது மிகவும் முக்கியமானது. கொலோசெயர் 3:12-17ல் நாம் யாருடைய ஸ்தானாதிபதிகள் என்று பவுல் நினைவுபடுத்துகிறார் (வச. 17). குணாதிசயம் என்பது நாம் அணியும் ஆடை போன்றது. ஆனால் இந்த வேதவாக்கியம் அந்த ஆடையின் மேல் இயேசுவின் நாமத்தை எழுதுகிறது: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (வச. 12-14). இவைகள் நம்முடைய ஞாயிற்றுக்கிழமை வஸ்திரமல்ல. இந்த வஸ்திரத்தை எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் அணிந்து தேவனை பிரதிபலிக்கவேண்டும். இந்த சுபாவங்கள் எல்லாவற்றையும் நம்முடைய வாழ்க்கையில் நாம் பிரதிபலித்தால், அவருடைய நாமம் நமக்கு தரிப்பிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கமுடியும். 

ஜெபத்தோடும் கவனத்தோடும் அவரை நாம் பிரதிபலித்தால் நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார்.

வேதத்தைப் படித்தல்

“தேவனை அறிதல்” என்ற தன்னுடைய உன்னதமான படைப்பில், ஜே. ஐ. பேக்கர், நன்கு அறியப்பட்ட நான்கு கிறிஸ்தவ விசுவாசிகளைக் குறித்து பேசுகிறார். அவர்களை “வேதாகம நீர்நாய்கள்” என்று அழைக்கிறார். இந்த நால்வரும் பெரிய நிபுணர்கள் அல்ல என்றபோதிலும், ஒரு நீர்நாயானது ஒரு மரத்தை எப்படி தன் பற்களினால் கடித்து ஊடுருவுமோ அதேபோன்று தேவனை அறிவதற்காய் இவர்கள் வேதத்தை ஊடுருவியுள்ளனர் என்று கூறுகிறார். வேத ஆய்வின் மூலம் தேவனை அறிவது என்பது நிபுணர்களுக்கு உரியது மட்டுமன்று என்பதை பேக்கர் குறிப்பிடுகிறார். “இறையியல் கருத்துக்களை கற்றுத்தேர்ந்த இறையியல் வல்லுநரைக் காட்டிலும், பரிசுத்த ஆவியில் நிறைந்து சாதாரணமாய் வேதத்தை வாசிக்கும் ஒரு நபரோ அல்லது பிரசங்கத்தை கேட்கிற ஒரு விசுவாசியோ, இரட்சகரோடும் தேவனோடும் நெருங்கிய உறவை ஏற்படுத்த முடியும்.”

வேதத்தை வாசிக்கிற அனைவரும் தாழ்மையான இருதயத்தோடு இரட்சகரை இன்னும் அறிந்து அவரைப்போலவே மாறவேண்டும் என்னும் இலக்குடன் வாசிப்பதில்லை என்பது அவலம். இயேசுவின் நாட்களில் பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள், அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான நபரை புரிந்துகொள்ளாமல் வாசித்தனர். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39-40). 

நீங்கள் வேதத்தைப் படிப்பதற்கு தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது வேதத்தைப் படிப்பதையே விட்டுவிட்டீர்களா? வேதத்தை வாசிப்பவர்களைக் காட்டிலும் வேதத்தை ஆராய்ந்து ஊடுருவுகிறவர்கள் மேலானவர்கள். அவர்களின் கண்களையும் மனதையும் திறந்து வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இயேசுவை பார்க்கவும், நேசிக்கவும், அவர்கள் ஜெபத்தோடும் கவனத்தோடும் வேதத்தை ஊடுருவி பாய்கின்றனர். 

வெறுமையான கரங்கள்

ராபர்ட், தான் மதிய உணவு கூட்டத்திற்கு வந்தபோது, அவர் தனது பணப்பையை கொண்டுவர மறந்துவிட்டதை உணர்ந்தபோது சங்கடப்பட்டார். அவர் மதிய உணவு சாப்பிடத்தான் வேண்டுமா அல்லது ஏதாவது குடித்தால் மட்டும் போதுமா என்று யோசிக்கும் அளவிற்கு அது அவருக்குத் தொல்லையாக இருந்தது. அவருடைய நண்பன் சொன்ன நம்பக்கூடிய வார்த்தைகளால் தனது எதிர்ப்பை விட்டுவிட்டார். அவரும் அவருடைய நண்பரும் உணவை ரசித்து உண்டனர். பிறகு தன்னுடைய நண்பன் உணவுக்குரிய கட்டணத்தை மகிழ்ச்சியுடன் செலுத்தினார்.

இப்படிப்பட்ட ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையோ அல்லது உங்களை சங்கடப்படுத்தின வேறு ஏதாவது சூழ்நிலையோடு உங்களை அடையாளப்படுத்தலாம். நம்முடைய வழியில் நாம் பணம் செலுத்துவது இயல்பானது. ஆனால் நமக்கு கிருபையாய் கொடுக்கப்படுபவைகளை நாம் தாழ்மையாய் பெற்றுக்கொள்ள அநேக சந்தர்ப்பங்கள் உண்டு.

லூக்கா 15:17-24ல் இளைய மகன் தன் மனதில் இருந்ததைப் போல ஏதாவது திருப்பி செலுத்தும் எண்ணம் இருக்கலாம் - அவன் தன் மனதில் தன் தகப்பனாரிடம் என்ன சொல்லப் போகிறான் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்ததைப் போல. “இனிமேல் உம்முடைய குமாரன் என சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்.” (வச. 19). கூலிக்காரன்? அவனுடைய தகப்பனிடத்தில் அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்காது. அவருடைய பார்வையில், மீண்டுமாய் வீட்டிற்கு வந்த, அதிகமாக நேசிக்கப்பட்ட மகன் அவன். ஆதலால் தான், அவன் தன் தந்தையின் அரவணைப்பையும், அன்பான முத்தங்களையும் (வச. 20) பெற்றுக்கொண்டான். என்ன ஒரு மகத்தான நற்செய்தி சித்திரம். இந்த நிகழ்ச்சி, தன்னிடம் வெறுங்கையுடன் வரும் பிள்ளைகளை திறந்த கையுடன் வரவேற்கும் அன்புள்ள பிதாவை இயேசு தம்முடைய மரணத்தின் மூலம் வெளிப்படுத்துவதை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒரு பாடலாசிரியர் இதை “என் கையில் நான் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, உம்முடைய சிலுவையைப் பற்றிக்கொள்ளுகிறேன்” என்ற வரிகள் மூலம் வெளிப்படுத்தினார்.

நாம் புரிந்துகொள்ளாதபோது..

“அவருடைய திட்டம் எனக்கு புரியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் அவரைத் தானே நம்பியிருந்தேன். கடைசியில் இப்படி நடந்துவிட்டதே.” ஒரு நல்ல ஓட்டப்பந்தய வீரனாய் மாறவேண்டும் என்னும் கனவை தற்காலிகமாய் தொலைத்த ஒரு மகன் தன் தாயாரிடத்தில் இப்படியாய் சொல்லுகிறான். எதிர்பாராத அல்லது வேதனை தரக்கூடிய சில அனுபவங்களை சந்தித்து கேள்வியோடும் ஆச்சரியத்தோடும் பயணிக்காதவர்கள் நம்மில் யாருண்டு? குடும்ப நபர்கள் திடீரென்று நம்மிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுகிறார்கள், உடல்நலக் குறைவு ஏற்படுகிறது, எதிர்பாராத விதமாய் அலுவலகம் இடமாற்றப்படுகிறது, வாழ்க்கையையே திசைதிருப்பும் விபத்து நேரிடுகிறது. 

யோபுவின் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்கள், யோபு 1-2 அதிகாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யதார்த்தமாய் சொன்னால், பிரச்சனையே இல்லாத ஒரு வாழ்க்கை சூழல் கொண்ட ஒரு நபர் என்றால், அது யோபு தான். “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (1:1). ஆனால் நாம் விரும்புகிற பாதையில் நம்முடைய வாழக்கை பயணிப்பதில்லை. யோபுக்கும் அப்படித்தான். நமக்கும் அப்படித்தான். அவனுடைய மனைவியே “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (2:9) என்று அவனிடத்தில் சொல்லுகிறாள். யோபு அவளுக்கு பொருந்தக்கூடிய ஒரு ஞானமான பதிலை சொல்லுகிறான். அந்த பதில் நமக்கும் நேர்த்தியாய் பொருந்தும். நாம் சந்திக்கிற சிறியதோ அல்லது பெரிய பிரச்சனைகளோ “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” (வச. 10). 

நம்முடைய கடினமான வாழ்க்கைச் சூழ்நிலையிலும் தேவன் எப்படி கிரியை செய்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், அவருடைய பெலத்தினாலே, நம்முடைய நம்பிக்கையும் கனமும் குறையாமல் இருக்கக்கடவது. 

மறக்கப்படுவதில்லை

மாமா! என்னை நீங்கள் முடித் திருத்தகத்திற்கும் பல்பொருள் அங்காடிக்கும் கூட்டிச்சென்றது நினைவிருக்கிறதா? அன்று நான் காக்கி நிற பேண்ட்டும், நீலநிற சட்டையும், கருநீல நிற ஸ்வெட்டரும், காபி நிற காலணியும் அணிந்திருந்தேன். அது ஒரு வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2016. இதை நினைவுகூர்ந்தது எனது அக்கா மகன்; அவன் ஒரு மனநலம் குன்றியவன். பல ஆண்டுகள் கழிந்தாலும் சில காரியங்களை அவன் மறக்காமல் நினைவில் வைத்திருந்தான்.   

இந்த சூழ்நிலையிலும் அவனுடைய இந்த நினைவுகள், எல்லாம் அறிந்த, காலத்தையும் நித்தியத்தையும் கையில் வைத்திருக்கிற அன்பான தேவனை எனக்கு நினைவுபடுத்தியது. நடப்பது எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் தன்னுடைய ஜனத்தையும் அவர்களுக்கு வாக்கு பண்ணினதையும் மறக்கமாட்டார். நீங்கள் தேவனால் மறக்கப்பட்டீர்களா? என்று தேவனிடத்தில் கேள்வியெழுப்பிய தருணங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதுவும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக சுகித்து, வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்போது அப்படி எண்ணத்தோன்றியதா? 

இஸ்ரவேலர்களின் கடினமான சூழ்நிலைகள் அவர்களை “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” என்று சொல்லத் தூண்டியது. ஆனால் அது உண்மையில்லை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு இரங்குவதைக் காட்டிலும் தேவனுடைய இரக்கமும் கரிசணையும் அதிகமாய் இருக்கிறது (வச. 15). தேவன் “கைவிட்டார்,” “மறந்துவிட்டார்” என்று சொல்லுவதற்கு முன்பு, அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாய் என்ன செய்திருக்கிறார் என்பதை யோசித்துப்பாருங்கள். மன்னிப்பைக் கொண்டுவரும் சுவிசேஷத்தில் தேவன், “நான் உன்னை மறப்பதில்லை” என்று மிகத் தெளிவாய் சொல்லுகிறார் (வச. 15). 

பாரபட்சமும் மன்னிப்பும்

அநீதியை எதிர்க்கும்படியான பிரசங்கத்தைக் கேட்டவுடன் ஒரு சபை விசுவாசி போதகரிடம் வந்து, கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார். ஏனென்றால், தங்கள் திருச்சபைக்கு கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் போதகராக வருவதை விரும்பாததினால், தான் பாரபட்சத்துடன் செயல்பட்டதாகவும், அதினால் அந்த போதகருக்கு தான் ஓட்டுப்போடாததையும் எண்ணி மனம் வருந்தினார். “அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். இந்த பாரபட்சம் மற்றும் ஜாதி வெறி போன்ற குப்பைகள் என் பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கக்கூடாது. நான் உங்களுக்கு ஓட்டுப் போடாமல் தவறு செய்துவிட்டேன்” என்று வருந்தினார். கண்ணீருடனான அவருடைய பாவ அறிக்கை, போதகரின் கண்ணீரோடு கூடிய மன்னிப்பை வாங்கித் தந்தது. தொடர்ந்த வாரத்தில், மனந்திரும்பிய இந்த விசுவாசியின் சாட்சியைக் கேட்டு திருச்சபை மகிழ்ச்சியடைந்தது. 

இயேசுவின் சீஷரும் ஆதித்திருச்சபையின் மூத்த தலைவருமான பேதுருவும் புறஜாதி மக்களைக் குறித்த தன்னுடைய பாரபட்ச சிந்தையை மாற்றவேண்டியிருந்தது. தீட்டாய் கருதப்பட்ட புறஜாதி மக்களுடன் உட்கார்ந்து புசிப்பதும் குடிப்பதும், சமுதாய மற்றும் மார்க்க ரீதியாய் அனுமதிக்கப்படவில்லை. பேதுருவும், “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 10:28) என்று சொல்லுகிறார். அந்த நம்பிக்கையை மாற்றி, “எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்” (வச. 28) சொல்லாதபடிக்கு மனமாற்றப்பட்ட பேதுருவுக்கு தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் (வச. 9-23). 

வேதாகமத்தின் போதனைகள், ஆவியானவரின் உணர்த்துதல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேவன் தொடர்ச்சியாக நம் உள்ளத்தில் கிரியை செய்து, மற்றவர்களைக் குறித்த நம் பாரபட்ச சிந்தையை மாற்றுகிறார். “தேவன் பாரபட்சமில்லாதவர்” என்பதை நமக்கு உணர்த்துகிறார் (வச. 34).