எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

நம்பிக்கை எங்கே கிடைக்கும்

எலிசபெத் போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாகி நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டாள். அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டபோது, அவள் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாள். சிறு குறிப்புகளை எழுதி, தன் பெயர் போடாமல், தன் ஊரில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிடுவாள். கார்களின் முன்புறம் சொருகி வைப்பதோடு, பூங்காக்களில் உள்ள கம்பங்களில் ஒட்டி வைப்பாள். முன்பு அவள் நம்பிக்கை தரும் வார்த்தைகளைத் தேடுவாள். அதனால் தன்னைப்போல் தேடும் மற்றவர்களுக்காக அவற்றை எழுதி வைக்கிறாள். அவள் எழுதிய குறிப்பு ஒன்று “அன்புடன், நம்பிக்கையை அனுப்புகிறேன்” என்ற வார்த்தைகளோடு முடிந்தது.

 

நம்பிக்கை, அன்பு – இதையே இயேசு தருகிறார். அவர் ஒவ்வொரு நாளும் தம் அன்பைத் தருவதோடு, நம்பிக்கையால் நம்மை பலப்படுத்துகிறார். அவரது அன்பு துளித்துளியாக அளந்து கொடுக்கப்படாமல், அவரது இருதயத்திலிருந்து பெருக்கெடுத்து நமது இருதயங்களில் ஊற்றப்படுகிறது. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5). நமது கஷ்டங்களின்மூலம் பொறுமையையும், நற்பண்புகளையும் நாம் பெற்றுக்கொள்ள அவர் விரும்புவதோடு, நமக்கு நம்பிக்கை மிகுந்த திருப்தியான வாழ்க்கையைத் தர விரும்புகிறார். நாம் அவரைவிட்டு தூரமாயிருந்தாலும், அவர் நம்மை நேசிக்கிறார் (வச. 6-8). 

 

நீங்கள் நம்பிக்கை தரும் அடையாளங்களைத் தேடுகிறீர்களா? அவருடனான உறவில் வளர, நம்மை அழைப்பதன்மூலம், கர்த்தர் நமக்கு நம்பிக்கையையும், அன்பையும் தருகிறார். நிறைவான வாழ்க்கை வேண்டும் என்ற நம் நம்பிக்கை, நம்மை எப்போதும் கைவிடாத அவர் அன்பில் வேரூன்றி இருக்கிறது.

சிலுவையின் வழியே

என்னுடன் பணிபுரியும் டாம் தன்னுடைய மேசையின் மீது 8’’க்கு12’’ அளவு கொண்ட கண்ணாடியினாலான சிலுவையொன்றறை வைத்திருக்கின்றார். அவனுடைய நண்பன் பில்லும் டாமைப் போன்று புற்று நோயிலிருந்து மீண்டவன். அவன் இந்தச் சிலுவையை, அதன் வழியே எல்லாவற்றையும் பார்க்க உதவியாயிருக்கும் எனக் கூறி, அதை டாமுக்குக் கொடுத்தான். அந்தக் கண்ணாடியினாலான சிலுவை அவனுக்கு தேவனுடைய அன்பையும், தேவன் அவனுக்கு வைத்திருக்கும் நல்ல நோக்கங்களையும் நினைவுபடுத்துவதாகக் கூறினான்.

இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் தங்களுடைய கஷ்டமான நேரங்களில் இது ஒரு சவாலானத் திட்டமாக இருக்கின்றது. தேவனுடைய அன்பின் மீது நமது நோக்கத்தைச் செலுத்துவதைவிட நம்முடைய பிரச்சனைகளின் மீது நம் எண்ணங்களைச் செலுத்துவது யாவருக்கும் எளிதானது.

பவுல் அப்போஸ்தலனின் வாழ்வு சிலுவை வடிவிலான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவர் துன்பப்படும் நேரங்களில் தான், “துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”
(2 கொரி. 4:9) என்கின்றார். மேலும் “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது” (வச. 17-18) என்கின்றார்.

காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு என்பது நம்முடைய பிரச்சனைகளை குறைத்துக் கொண்டோம் என்பதல்ல. பவுல் பார்நெட் என்பவர் இப்பகுதியைக் குறித்து “தேவன் நமக்கு வைத்திருக்கும் உறுதியான நோக்கத்தின் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ வேண்டும் அல்லது நாம் அமைதலோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய வேதனையை நம்பிக்கை கலந்த வலியோடு வெளிப்படுத்த வேண்டும்” என விளக்குகின்றார்.

இயேசு அவருடைய வாழ்வையே நமக்காகத் தந்தார். அவருடைய அன்பு ஆழமும், தியாகமும் நிறைந்தது. நாம் நம் வாழ்க்கையை சிலுவையின் வழியாய் பார்க்கும் போது அவருடைய அன்பையும், உண்மையையும் காண முடியும். அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் வளரும்.

நேரமெடுத்தல்

சமீபத்தில் அமெரிக்கா தேசத்திற்கு குடிபெயர்ந்த ரிமா என்ற சிரியாவைச் சேர்ந்த பெண்மணி, தன்னுடைய பயிற்சியாளரிடம் தனக்குத் தெரிந்த சிறிய ஆங்கிலம் மற்றும் சைகையின்மூலம் தான் வருத்தத்திலிருப்பதற்கான காரணத்தை விளக்கினாள். அவள் தான் செய்து வைத்திருந்த மாமிசம், பால்கட்டி, மற்றும் கீரைகள் அடங்கிய ரொட்டியை, ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்து எடுத்து வந்த போது, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அருகிலுள்ள தேவாலயத்தின் ஜனங்கள் அநேகர் ரிமாவின் வீட்டிற்கு வருவதாயிருந்தது. எனினும் ஒரேயொரு மனிதன் அவள் வீட்டிற்கு வந்தார். அவரும் மிக வேகமாக உள்ளே வந்து, ஒரு பெட்டி நிறைய சாமான்களைக் கொடுத்து விட்டு அவசரமாக வெளியேறினார். அவர் வேகமாக ஒரு கடமையை முடித்தார். ஆனால் ரிமாவும், அவள் குடும்பத்தினரும் தனிமையில் சுற்றத்தாரின் அன்பிற்காகவும் அவர்கள் தங்களோடு நட்பினைப் பகிர்ந்து கொள்வார்களெனவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜனங்களுக்காக நேரத்தைச் செலவிட்டார் இயேசு. அவர் ஜனங்களோடு உணவருந்தினார். ஜனக்கூட்டத்திற்குக் கற்றுக் கொடுத்தார், போதனை செய்தார், தனி நபர்களோடு உறவாடினார். ஒரு மனிதனின் வீட்டிற்கு வருவதாகக் கூறினார். சகேயு வரி வசூலிப்பவன். அவன் ஒரு மரத்தின் மேலேறி இயேசுவைப் பார்க்க விரும்பினான். இயேசு அவனைப் பார்த்து ‘‘நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” (லூக். 19:1-9) என்று கூறினார். அன்றைக்கே சகேயுவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.

நமக்குள்ள வேலைப் பளுவின் மத்தியில் நாம் பிறருக்கு நேரம் செலவிட முடியாதவர்களாகி விடுகின்றோம். ஆனால் நாம் அதற்கென சற்று நேரம் ஒதுக்கும்போது, பிறரோடு சிறிது நேரத்தைச் செலவிடும் பாக்கியத்தைப் பெறுவோம். இதன் மூலம் தேவன் அவர்களோடு செயல்பட ஆரம்பிப்பார்.

மென்னோசை வார்த்தைகள்

ஒரு மனிதன் தன்னுடைய விமானத்தின் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது, அமைதியற்ற நிலையில் கால்களை ஆட்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய கண்கள் விமானத்தின் ஜன்னலைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தன. பின்னர் அவன் தன் கண்களை மூடி, தன்னை அமைதிப்படுத்தும்படி பெருமூச்செடுத்தான். ஆனால், இவையொன்றும் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை. விமானம் மேலேறி பறந்தபோது, அவன் மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, தன் கரத்தை அவன் புயத்தின் மீது வைத்து, அவனுடைய மன அழுத்தத்திலிருந்து அவனைத் திருப்பும்படியாக, மெதுவாக அவனோடு உரையாட ஆரம்பித்தாள். ‘‘உன்னுடைய பெயரென்ன?” ‘‘நீ எங்கேயிருந்து வருகிறாய்?” “நமக்கு எல்லாம் சரியாகிவிடுவோம்”, “நீ நன்றாக இருக்கின்றாய்” என்பன அவளுடைய மென்மையான வார்த்தைகள். அவனுடைய நடத்தையால் அவள் எரிச்சலடைந்திருக்கலாம் அல்லது அவனை அவள் உதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அவனைத் தொட்டு அவனோடு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டாள். இது ஒரு சிறிய காரியம்தான். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் இறங்கிய போது, எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி” என்று கூறினான்.

இத்தகைய இளகிய மனதுடைய செயல்களைப் பார்ப்பது அரிது. அநேகருக்கு இரக்கம் என்பது தானாக வருவதில்லை. நம்முடைய முதல் கவனம் எப்பொழுதும் நம்மைப் பற்றியேயிருக்கும். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ‘‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயுமிருங்கள்” என்கிறார். (எபே. 4:32) இக்குணம் ஒவ்வொருவரையும் சார்ந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது தாம் பெற்றுக் கொண்ட புது வாழ்வில் ஆவியானவர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார். ஆவியானவர் நம்முடைய எண்ணங்களையும் நடத்தையையும் புதிப்பிக்கும் போது நாம் இரக்க குணத்தைப் பெற்றுக் கொள்கிறோம் (வச. 23).

இரக்கத்தின் தேவன் நம் இருதயங்களில் கிரியை செய்து, நம்முடைய மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளால் பிறர் வாழ்வைத் தொடும்படி நம்மில் செயல்படுகிறார்.

அது அணுகுமுறையில் உள்ளது

ரெஜினா தன் வேலையிலிருந்து வீட்டிற்கு ஊக்கமும், ஆற்றலும் இழந்து சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்த நாள் அவருடைய நண்பரொருவரிடமிருந்து வந்த ஒரு துயரச் செய்தியோடு ஆரம்பமானது. அவள் தன் சக பணியாளர்களோடு பங்கு பெற்ற கூட்டத்திலும் அச்செய்தி அவளை வட்டமிட்டுக் கொண்டேயிருக்க, அவளுடன் பணி புரிபவர்கள் அவளுடைய கருத்துக்களோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். ரெஜினா தேவனோடு பேச ஆரம்பித்தபோது, அவள் அந்நாளின் மன அழுத்தத்தையெல்லாம் தள்ளிவிட்டு சில மலர்களோடு, காப்பகத்தில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை எதிர்பாராத விதமாக பார்க்கச் சென்றாள். தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்று மரியா அவளோடு பகிர்ந்து கொண்டபோது ரெஜினாவின் ஆவியும் உற்சாகமடைந்தது மரியா “எனக்கு என்னுடைய சொந்த படுக்கை, நாற்காலி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, செவிலியரின் உதவி எல்லாம் இருக்கிறது. தேவன் அவ்வப்போது என் அறைக்கு சில முக்கியஸ்தர்களைக் கொண்டு வருகிறார், ஏனெனில் நான் அவர்களை நேசிக்கிறேன், அவர் என்னை நேசிக்கிறார்.” என்று கூறினார்.

அணுகுமுறை, கண்ணோட்டம் என்று சொல்லும் போது, வாழ்க்கையில் 10 சதவீதம் தான் நமக்கு நடப்பவை, மீதி 90 சதவீதம் நாம் அதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதேயாகும” துன்ப காலங்களில் சிதறடிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுடைய துன்பங்களை அவர்கள் எப்படிப் பார்க்க வேண்டுமென யாக்கோபு எழுதுகிறார்,

“நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2-3).

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், கடினமான சூழல்களில் தேவனை நம்பும்படி கற்றுக் கொள்கிறோம். நாம் நம்முடைய போராட்டங்களை, தேவன் நாம் விசுவாசத்தில் வளர்வதற்கான சந்தர்ப்பங்களாக்குகின்றார் என பார்க்கக் கற்றுக் கொள்ளும்போது, யாக்கோபு கூறிய மகிழ்ச்சி நிரம்பிய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.

புழுக்கள் முதல் யுத்தம் வரை

பத்து வயதாக இருந்த கிளியோவிற்கு மீன் பிடித்தலில் அன்று முதல் அனுபவமாக இருந்தது. ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த புழு இரையை அவன் பார்த்தபொழுது, மீன் பிடித்தலை ஆரம்பிக்க அவன் தயங்கினான். இறுதியில் அவன் எனது கணவனிடம் “எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினான். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தத்தை எனது கணவன் அவனிடம் கேட்ட பொழுது “புழுக்களைக் கண்டால் எனக்கு பயமாக உள்ளது.” அவனது பயம் அவனை செயல்பட விடாமல் தடுத்துவிட்டது.

வயது முதிர்ந்தவர்களையும் பயம் செயல்பட இயலாமல் தடுத்துவிடும். கிதியோன் அவனது எதிராளிகளாகிய மீதியானியருக்குப் பயந்து ஆலைக்கு சமீபமாக கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு தரிசனமான பொழுது அவனும் பயந்திருப்பான் (நியா. 6:11). அவனது ஜனங்களை யுத்தத்தில் தலைமை தாங்கி நடத்த அவனை தேவன் தெரிந்தெடுத்துள்ளார் என்று கர்த்தருடைய தூதன் அவனிடம் கூறினான் (வச. 12-14).

அதற்கு கிதியோனின் மறுமொழி என்ன? “ஆ என் ஆண்டவரே நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன். இதோ மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன்” (வச. 15) என்று கூறினான். கர்த்தர் அவனோடு இருப்பதாக வாக்குத்தத்தம் பண்ணின பின்பும் கிதியோன் பயந்து இஸ்ரவேல் மக்களை மீட்க தேவன் அவனை பயன்படுத்துவதாக இருந்தால் ஓர் அடையாளத்தை அவனுக்கு காண்பிக்க வேண்டுமென்று கேட்டான் (வச. 36-40). தேவன் அவனது விண்ணப்பத்திற்கு செவிகொடுத்தார். இஸ்ரவேல் மக்கள் யுத்தத்தில் வெற்றி அடைந்தார்கள். நாற்பது ஆண்டுகள் கிதியோன் சமாதானமாக ஆட்சிசெய்தான்.

நம் அனைவருக்கும் பல்வேறு வகையான பயங்கள் உண்டு. புழு முதல் யுத்தம் வரைக்கும் பயம் உண்டு. எதாவது ஒரு காரியத்தை செயல்பட வேண்டுமென்று தேவன் நம்மிடத்தில் கேட்டால், நிச்சயமாக அக்காரியத்தை செய்வதற்கான பெலத்தையும் வல்லமையும் கொடுப்பாரென்று கிதியோனின் சரித்திரம் நமக்கு ஒரு நிச்சயத்தை கொடுக்கிறது.

தேவன் புதுமையானதொன்றை செய்து கொண்டிருக்கிறார்

“தேவன் உங்கள் வாழ்வில் ஏதேனும் புதியதை செய்துகொண்டிருக்கிறாரா?” என்ற கேள்வியை நான் சமீபத்தில் பங்கேற்ற ஒரு குழுவின் தலைவர் கேட்டார். கடினமான நிலைமைகளைக் கையாண்டு கொண்டிருக்கிற என் சிநேகிதி மின்டி இதற்குப் பதிலளித்தாள். வயதான பெற்றோர்களை கவனிப்பதில் பொறுமைமையும், கணவனின் உடல் நலக்குறைவில் சகிப்புத்தன்மையையும், இன்னமும் இயேசுவை பின்பற்ற தேர்ந்துகொள்ளாத பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் புரிந்துகொள்ளவும் பொறுமை தேவையாயிருக்கிறது. மேலும் அவள் நாம் சாதாரணமாக நினைப்பதற்கு சற்று மாறாக உள்ளான ஒரு கருத்தினையும் கூறினாள். “நான் அன்புகூரும்படியாக என்னுடைய திறமையையும் சந்தர்ப்பங்களையும் தேவன் விரிவாக்கித் தருவதன் மூலம் புதிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என நான் நம்புகிறேன்” என்றாள்.

அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிகேயர் சபையின் புதிய விசுவாசிகளுக்காக செய்யும் ஜெபமும் இதனோடு நன்கு ஒத்திருக்கிறது. “நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வாராக” (1 தெச. 3:12). பவுல் அவர்களுக்கு இயேசுவைக் குறித்துக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு கலவரம் ஏற்பட்டபடியால் திடிரென அவர்களை விட்டுப் பிரிய நேர்ந்தது (அப். 17:1-9). பவுல் கடிதத்தின் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகின்றார் (1 தெச. 3:7-8). மேலும் அவர்கள் மற்றெல்லா மனுஷரிடத்திலும் வைத்திருக்கிற அன்பில் தேவன் அவர்களைப் பெருகப் பண்ணவேண்டுமென ஜெபிக்கிறார்.

கடினமான சூழல்கள், நாம் அது ஏன்? அல்லது இது ஏன் எனக்கு ஏற்பட வேண்டும்? என முறையிடுபவர்களாக இருக்கின்றோம். அத்தகைய கடின சூழல்களைக் கையாள மற்றொரு வழி என்னவென்றால், அந்த சந்தர்பங்களில் நாம் பிறர் மீது அன்பு செலுத்த உதவும்படி தேவன் நம் உள்ளங்களில் அவருடைய அன்பினை இன்னும் பெருக்கும்படி கேட்பதுவே!

இனிமையான தோழமை

முதியோருக்கான ஒரு சிறிய மருத்துவமனையிலிருந்த வயது சென்ற அந்தப் பெண், யாருடனும் பேசுவதுமில்லை, தனக்குக் தேவையான எதையும் கேட்டதுமில்லை. ‘கிரீச்’ என்று ஒலி எழுப்பக்கூடிய அவளது பழமையான அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்து ஆடிக் கொண்டே தன் நேரத்தை கழிப்பாள். அவளைப் பார்க்க அதிக பார்வையாளர்களும் வர மாட்டார்கள். ஆகவே ஒரு இளம் தாதிப் பெண், அவளுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்திலெல்லாம் அந்தப் பெண்ணின் அறைக்குச் செல்வாள். அந்த வயது சென்ற பெண்ணிடம் கேள்விகள் கேட்டு அவளை பேச வைக்கவேண்டும் என்று முயற்சிக்காமல், அவளும் ஒரு அசைந்தாடும் நாற்காலியை அவள் அருகில் இழுத்துப்போட்டு, அந்தப் பெண்ணோடு இணைந்து ஆடுவாள். அநேக மாதங்களுக்குப் பின் அந்த வயதானப் பெண் “என்னோடுகூட சேர்ந்து நீ அசைந்தாடுவதற்கு நன்றி” என்று கூறினாள். அந்த இளம் தாதிப் பெண் அவளோடு கூட அமைதியாக நேரத்தைச் செலவிட்டு நட்புறவை பகிர்ந்து கொண்டதற்கு அவள் நன்றியோடிருந்தாள்.

இயேசு பரலோகத்திற்கு போகும்முன்பு அவருடைய சீஷர்களோடு என்றென்றும் இருக்கத்தக்கதாக ஒரு தேற்றரவாளனை அவர்களுக்கு அனுப்புவதாக அவர் வாக்குப்பண்ணினார். அவர் அவர்களை திக்கற்றோர்களாக விடப் போவதில்லை என்றும் அவர்களுக்குள்ளே என்றென்றும் வாசம் பண்ணத்தக்கதாக பரிசுத்த ஆவியை அனுப்பப்போவதாக வாக்குப் பண்ணினார் (யோவா. 14:17). இயேசுவை விசுவாசிக்கும் இன்றைய விசுவாசிகளுக்கும் அந்த வாக்குத்தத்தம் உண்மையாகவே உள்ளது. திரியேக தேவனாகிய அவர் நம்மில் வாசம் பண்ணுவதாக இயேசு கூறினார் (வச. 23).

நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு நெருக்கமான, உண்மையான, தோழராக கர்த்தர் இருக்கிறார். நமது போராட்டங்களில் அவர் நம்மை வழி நடத்தி நமது பாவங்களை மன்னித்து, நமது அமைதியான ஜெபங்களைக் கேட்டு நம்மால் சுமக்க இயலாத பாரங்களை அவரது தோள்களில் சுமப்பார்.

இன்று நாம் அவரது இனிய தோழமையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

ஐவிரல் ஜெபங்கள்!

நாம் தேவனோடு உரையாடுவதே ஜெபம். அது ஒரு சூத்திரம் அல்ல. ஆனாலும், சில சமயம் நமது ஜெபவேளைகளை புத்துணர்வூட்டும் பொருட்டு, ஒரு ‘முறைமையை’ கடைப் பிடிப்பது நன்று. அதாவது, தாவீதின் சங்கீதங்களைக் கொண்டும் ஜெபிக்கலாம் அல்லது வேறு வேதபகுதிகளைக் (பரமண்டல ஜெபம்) கொண்டும் ஜெபிக்கலாம். இல்லையெனில், ‘ஆராதனை, அறிக்கை, நன்றிசெலுத்துதல், விண்ணப்பித்தல்’ என்கிற வரிசை முறைமையிலும் கூட ஜெபிக்கலாம். சமீபத்தில், பிறருக்காக ஜெபிக்க உதவும் ‘ஐவிரல் ஜெபங்கள்’ என்கிற முறையைக் குறித்து அறிந்தேன்.

 ·        நீங்கள் கைகளைக் கூப்பும்பொழுது, உங்கள் பெருவிரல்தான் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, முதலாவது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக, அதாவது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக ஜெபியுங்கள் (பிலிப். 1:3–5).

·        இரண்டாவது, ஆள்காட்டி விரல். இது சுட்டிக்காட்ட பயன்படும். இப்பொழுது போதிப்பவர் களுக்காக ஜெபியுங்கள். அதாவது வேதாகம ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு போதிப்பவர்கள். (1 தெச. 5:25)

·        அடுத்த விரல் மற்ற விரல்களை விட பெரியது. அதிகாரத்தில் இருக்கிற தேசத் தலைவர்களுக்காகவும், உங்கள் வேலை ஸ்தலத்தில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்க இவ்விரல் நினைவூட்டும் (1 தீமோ. 2:1-2)

·        நான்காம் விரல், பொதுவாக மற்ற விரல்களை விட பெலவீனமானது. ஆகவே, இப்பொழுது துயரத்தில் இருப்பவர்களுக்காகவும் துன்பப்படுகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யவும். (யாக்:5:13-16)

·        கடைசியாக உங்கள் சுண்டுவிரல். தேவனுடைய மகத்துவத்தோடு நம்மை ஒப்பிட்டால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இவ்விரல் நமக்கு நினைவூட்டும். ஆகவே இப்பொழுது நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிக்கவும் (பிலி. 4:6,19)

 நீங்கள் எந்த முறைமையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஆனால், பிதாவோடு நீங்கள் உரையாடுங்கள். உங்கள் இருதயத்தில் உள்ளதை அவர் கேட்க விரும்புகிறார்.