எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

ஒரே ராஜா

ஐந்து வயதான எலியா இயேசு பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார் என்று போதகர் கூறியதை கவனித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவர் ஜெபிக்கும் போது, நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் எனக் கூறி, நன்றி செலுத்திய போது, அவன், திணறியவனாய், “ஓ, இல்லை! அவர் மரித்துவிட்டாரா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான். 

இவ்வுலகில், இயேசு கிறிஸ்து தன் வாழ்வைத் துவங்கிய நாளிலிருந்து, அநேகர் அவர் மரிக்க வேண்டுமென விரும்பினர். ஏரோது அரசனின் ஆட்சி காலத்தில், ஞானிகள்  எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” என்றார்கள். (மத்.2:2) அரசன் இதைக் கேட்ட போது, ஒரு நாள், தன்னுடைய அரசாட்சியை இயேசுவிடம் இழக்க நேரிடும் என்று பயந்தான். எனவே அவன், தன் படை வீரர்களை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப் புறங்களிலுள்ள அனைத்து இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளையும் கொன்று போட்டான். ஆனால் தேவன், அவருடைய மகனைப் பாதுகாக்க, ஒரு தூதனை அனுப்பி, அவருடைய பெற்றோரை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார். அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி, குழந்தையைக் காப்பாற்றினார்கள். (வ.13-18)

 இயேசு, தன்னுடைய ஊழியக் காலத்தை நிறைவு செய்த போது, உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார். அவரைக் கேலி செய்யும் படியாக, பிலாத்து அவருடைய சிலுவைக்கு மேலாக, “இவர் இயேசு, யூதருக்கு ராஜா” என்று எழுதி வைத்தான் (27:37). ஆனால் மூன்று நாளைக்குப் பின், அவர் வெற்றியாக, கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர், பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக உட்கார்ந்தார். (பிலி. 2:8-11)

இந்த ராஜா, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்- உன்னுடைய ,என்னுடைய, மற்றும் எலியாவின் பாவங்களுக்காக மரித்தார். நம்முடைய இருதயங்களை அவர் ஆட்சி செய்யும் படி, அவரிடம் கொடுப்போம்.

அழகிய கனி

மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம் உருவாவதற்கு காரணமாயிருந்த ரெபேக்கா லெமோஸ் ஓடெரோ என்பவர், “குழந்தைகளே, நீங்கள் ஒரு விதையைத் தோட்டத்தில் எங்கேயாகிலும், நீங்கள் விரும்பும் இடத்தில் எறியுங்கள், பின்னர், அதிலிருந்து என்ன வெளியாகிறது என்று பாருங்கள்” என்றார். இது சரியான தோட்டக் கலையல்ல, எனினும், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு ஜீவனை உருவாக்கக்கூடிய ஆற்றல் பொதிந்துள்ளது என்ற உண்மையை, அது வெளிப்படுத்தியது. 2004ஆம் ஆண்டிலிருந்து மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம், பள்ளிகளிலும், குறைந்த வருமானம் உள்ள பகுதிகளிலும் தோட்டங்களை உருவாக்கியது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தோட்ட வேலைக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. “பட்டணங்களில் பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் சுற்றுப்புறங்களிலுள்ள அழகிய இடங்களில் பயன் தரும் காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது” என்றார், ரெபேக்கா.

இயேசு கிறிஸ்து, விதை விதைப்பதைக் குறித்து ஒரு கதையைக் கூறினார். இந்த விதைகள் நூறு மடங்கு விளைச்சலைத் தந்தன (லூக்கா 8:8) இங்கு, தேவனுடைய வார்த்தைகளாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப் படுகின்றது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”  என்பதாக விளக்குகின்றார் (வச. 15).

நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்கான ஒரேவழி கிறிஸ்துவில் நிலைத்திருப்பதேயாகும் (யோவா. 15:4). கிறிஸ்து நமக்கு கற்பித்ததைப் போன்று, நாம் அவரைப் பற்றிக் கொண்டால், ஆவியானவர் நம்மில் அவருடைய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலா. 5:22-23), ஆகிய இவற்றை நம்மில் காணச்செய்வார். நம்மில் உருவாக்கிய இந்தக் கனிகளின் மூலம், மற்றவர்களின் வாழ்வைச் சந்திக்கச் செய்வார், அவர்களின் வாழ்வும் கனிதரும் வாழ்வாக மாற்றப் படும். இது ஓர் அழகிய வாழ்வை உருவாக்கும்.

தேவனுடைய விருப்பதின் படியே ஆகட்டும்

நாங்கள் நியூயார்க் செல்லும் வழியில் ஒமகசே என்ற ஜப்பானிய உணவகத்திற்குச் சென்றிருந்த போது, நாட்டே, ஷெர்லின் ஆகிய இருவரும் அதனை மிகவும் ரசித்தனர். ஒமகசே என்பதற்கு ” உன்னுடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் “என்று அர்த்தம். இவ்வகை உணவகங்களுக்கு வருபவர்களின் உணவை சமையற்காரரே தீர்மானிப்பார். இந்த வகை உணவகத்திற்கு முதல் முறையாக வந்திருந்த போதிலும், இதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருந்த போதிலும், அந்த சமையற்காரர் தேர்ந்தெடுத்து தயாரித்த உணவை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர்.

இந்த கருத்தினைப் போன்று, நாம் தேவனிடம் எடுத்துச் செல்லும் ஜெபங்களை “நான் உம்முடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று கூறுவது சிறந்ததாகும். இயேசு அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிப்பதைக் கண்ட சீடர்கள் (லூக். 5:16) இயேசுவிடம் தங்களுக்கும் ஜெபிக்க கற்றுத் தருமாறு கேட்கின்றனர். இயேசு, அவர்களின் அனுதின தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், சோதனையில் விழாதபடி காக்கவும் ஜெபிக்க கற்பிக்கின்றார். இந்த ஜெபத்தின் மற்றொரு பகுதி நம்மை முற்றிலுமாக தேவனுக்கு அர்ப்பணிக்கும் படி கூறுகிறது. “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும் படி கற்பித்தார்.

நம்முடைய தேவைகளை நாம் ஜெபத்தில் தேவனிடம் ஊற்றிவிட வேண்டும். அவர் நம்முடைய இருதயத்தின் விருப்பங்களைக் கேட்க விரும்புகின்றார், அவற்றைக் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியடைகின்றார். ஆனால் நாம் குறைவுள்ள மனிதர்கள், நமக்கு எது நல்லது என்பது தெரியாது எனவே, தாழ்மையான சிந்தையோடு, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. அவர் நம்பத்தகுந்தவர், அவர் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நமக்கு தருவார் என்ற நம்பிக்கையோடு, ஜெபத்திற்கான பதிலையும் அவரிடமே விட்டு விடுவோம்.

மறந்து விடாதே!

என்னுடைய உறவினர் ஒருவர், அவருடைய நான்கு வயது மகள் கெய்லினுடன் வந்திருந்தமையால், அந்தச் சனிக்கிழமை மாலை மிகவும் இனிமையாக இருந்தது. நாங்கள் வெளியில் சோப்புக் குமிழிகளை ஊதி மகிழ்ந்தோம், வண்ணமிடும் புத்தகத்தில் வண்ணமடித்தோம், நிலக்கடலை, வெண்ணெயோடு ரொட்டிகளைச் சாப்பிட்டு மகிழ்ந்தோம். அவர்கள் திரும்பிச் செல்லும்படி காரில் ஏறினபோது, கெய்லின் காரின் ஜன்னலைத் திறந்து இனிமையாக, “என்னை மறந்துவிடாதீர்கள், ஆனி அத்தை” என்றாள். நான் விரைந்து காரின் அருகில் சென்று, “என்னால் உன்னை மறக்கவே முடியாது, நான் சீக்கிரத்தில் உன்னை மீண்டும் சந்திப்பேனென உனக்கு வாக்களிக்கிறேன்” என்றேன்.

இயேசுவின் சீடர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் “அவர்கள் கண்களுக்கு முன்பாக” ஒரு மேகம் அவரை வானத்திற்கு எடுத்துக் கொண்டது என அப்போஸ்தலர் 1ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம் (வச. 9). தங்களுடைய எஜமானன் தங்களை மறந்து விடுவாரோ என்று அவர்கள் எண்ணியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவர் சீடர்களிடம், தன்னுடைய ஆவியை அவர்களோடிருக்கும்படி அனுப்புவதாகவும், அந்த பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பெலப்படுத்தி வரப்போகின்ற உபத்திரவக் காலத்தில் அவர்களை வழி நடத்த உதவுவார் எனவும் வாக்களித்தார் (வச. 8) மேலும், நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன் (யோவா. 14:3) என்றார். ஆனாலும் அவர்கள் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்கவேண்டுமென அதிசயித்தனர். ஒரு வேளை அவர்களும், இயேசுவே, எங்களை மறந்து விடாதீர்கள்! எனச் சொல்ல விரும்பியிருப்பார்களோ? 

இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருக்கும் நமக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கின்றார். அவர் எப்போது மீண்டும் வந்து நம்மையும், அவருடைய படைப்புகள் அனைத்தையும் மீட்டுக் கொள்வார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம், இது நிச்சயம் நடக்கும். அவர் நம்மை மறந்து விடவில்லை. “ஆகையால் நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெச. 5:11).

 

நான் செய்வேன்

அந்த நாளின், அதிக வேலைகளை முடித்த பின்னர் ஷர்லி சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்த போது, அங்கு ஒரு வயதான தம்பதியர், அங்கிருந்த மைதானத்தில் “இலவசம்” என எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்த பழைய வேலியின் ஒரு பகுதியை எடுத்துச் செல்ல தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஷர்லி தன் கணவனை அழைத்துக் கொண்டு வெளியே அவர்களுக்கு உதவும் படிச் சென்றாள். அவர்கள் நால்வரும் போராடி அந்த வேலியின் ஒரு பகுதியை கை வண்டியிலேற்றி, தெரு வழியே, காண்போர் சிரிக்கும் வகையில் உருட்டிச் சென்று தெரு முனையிலுள்ள அந்த தம்பதியினரின் வீட்டிலிறக்கி விட்டு மீண்டும் மற்றப் பகுதியையெடுக்க திரும்பினர். அப்பொழுது அந்த பெண்மணி ஷர்லியிடம் “நீ என்னுடைய சிநேகிதியாக இருப்பாயா?” எனக் கேட்டாள். “ஆம், இருப்பேன்” என பதிலளித்தாள். அந்தப் பெண் வியட்நாமைச் சேர்ந்தவளெனவும், அவளுக்கு சிறிதே ஆங்கிலம் தெரியுமெனவும், அவர்களுடைய பிள்ளைகளனைவரும் தூர இடங்களிலிருப்பதால் இவர்கள் தனிமையாக இருக்கின்றனர் என்றும் பின்னர் தெரிந்து கொண்டாள்.

அந்நியராயிருப்பது எவ்வாறிருக்கும் என்பதை இஸ்ரவேலர் அறிவார்கள், என லேவியராகமத்தில் தேவன் குறிப்பிடுகின்றார் (19:34). அந்நியரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றார்
(வச. 9-19). தேவன் அவர்களை தன்னுடைய சொந்த ஜனங்களாகப் பாவித்திருக்கின்றபடியால், அவர்கள் தங்கள் சுற்றத்தாரை ஆசீர்வதிக்க வேண்டுமெனவும், தங்களிடம் அன்பு கூறுவது போல அவர்களிடமும் அன்பு கூர வேண்டுமெனவும் விரும்புகின்றார். எல்லா ஜனத்திற்கும் ஆசீர்வாதமாக தேவன் இயேசுவைத் தந்தார். அவர் தந்தையின் வார்த்தைகளை நம் எல்லாருக்கும் மீண்டும் எடுத்துரைத்தார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்... அன்பு கூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத். 22:37-39) என்றார்.

நம்மிலே வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவியினால் நாம் தேவனையும், பிறரையும் நேசிக்க முடியும். ஏனெனில் அவரே முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். (கலாத்தியர் 5:22-23, 1யோவான் 4:19) நாமும் ஷர்லியோடு சேர்ந்து “நான் செய்வேன்” என்று கூறுவோமா?

இப்பொழுதே ஆரம்பிக்கலாம்

2017, பெப்ரவரி மாதம் என்னுடைய மூத்த சகோதரிக்கு புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. உடனே நான் என் நண்பர்களிடம், “கரோலினுடன் நான் அதிக நேரம் செலவிடவேண்டும், இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கப் போகிறேன்” என்று சொன்னேன். நான் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப் படுவதாக சிலர் சொன்னார்கள். ஆனால், பத்து மாதங்களுக்குள் அவள் இறந்துபோனாள். அவளோடு நான் பல மணி நேரம் செலவிட்டிருந்தபோதிலும், நாம் ஒருவரை அதிகமாக நேசிக்கும்போது அவருடன் எவ்வளவுதான் நேரம் செலவிட்டாலும் நம் அன்பைப் பொழிவதற்கு நேரம் போதாது என்றே நினைக்கிறேன்.

ஆதிகால சபையிலிருந்த இயேசுவின் சீடர்களிடம், “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்று சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பேதுரு (1 பேது. 4:8). அவர்கள் உபத்திரவத்திற்கு ஆளாகியிருந்தார்கள். கிறிஸ்தவ குடும்பத்தின் சகோதர சகோதரிகளுடைய அன்பு முன்பைவிட அவர்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது. தேவன் தாமே தம்முடைய அன்பை அவர்களுடைய இருதயங்களில் ஊற்றியிருந்ததால், அதே அன்பை அவர்கள் மற்றவர்கள்மேல் காட்ட விரும்பினார்கள். ஜெபம், விருந்தோம்பல், அன்பும் உண்மையுமான பேச்சு போன்றவற்றின் மூலம் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினார்கள். தேவன் கொடுத்த அன்பினாலே அவ்வாறு செய்ய விரும்பினார்கள். வசனங்கள் 9-11. தேவனுடைய தயவுள்ள நோக்கங்களுக்காக, தியாக மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் சேவைசெய்கிற வரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அவருடைய கிருபையின்மூலம் அது சாத்தியமாகியிருந்தது. எனவே, “எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (வச. 11). இதுதான் தேவனுடைய வல்லமையான திட்டம், நம் மூலமாக அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிற திட்டம்.

நமக்கு மற்றவர்கள் தேவை, அவர்களுக்கு நாம் தேவை. அன்புகாட்டுவதற்கு தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நேரத்தையும், வளங்களையும் நாம் பயன்படுத்துவோம். அதை இப்பொழுதே ஆரம்பிப்போம்.

ஓய்வாக இருக்கலாமா?

சிகிச்சைக்காக உடற்பயிற்சி நிபுணரைச் சந்தித்தார் டார்னெல். விபத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் குணமடைந்திருந்தார். எனவே, உடற்பயிற்சி நிபுணர் கொடுக்கும் பயிற்சிகளின்போது அதிகமாக வலிக்கும் என்பது சந்தேகமின்றி தெரிந்தது. பலநாட்களாக நீட்டி, மடக்காதிருந்த பகுதிகளை நிபுணர் நீட்டி, மடக்கிவிட்டு, “இப்போது ஓய்வு எடுங்கள்” என்று சொன்னார். அந்த அனுபவம் பற்றிச் சொல்லும்போது, குறைந்தபட்சம் ஐம்பது முறையாவது “சரி, இப்போது ஓய்வு எடுங்கள்” என்று நிபுணர் சொல்லியிருப்பாரென்று கூறினார். 

தன்னுடைய மொத்த வாழ்க்கைக்கும் அந்த வார்த்தைகள் பொருந்தக்கூடியவை என்று டார்னெல் கூறுகிறார். கவலைப்படுவதை விட்டுவிட்டு, தேவன் நல்லவர், உண்மையுள்ளவர் என்பதை உணரும்போது அவரால் ஓய்வு எடுக்க முடிந்ததாம்.

சிலுவை மரணம் நெருங்கியிருந்த நிலையில், தம்முடைய சீடர்கள் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது அவசியமென இயேசு உணர்ந்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு சீடர்கள் பல உபத்திரவங்களையும் துயரங்களையும் சந்திக்கவேண்டியிருக்கும் என்று அறிந்து, அவர்களோடு வாசம்பண்ணவும், தாம் போதித்ததை அவர்களுக்கு நினைவூட்டவும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாகச் சொல்லி, இயேசு அவர்களை ஊக்கப்படுத்தினார் (யோவா. 14:26). “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; ... உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக” என்றும் சொன்னார் (வச. 27).

நம் அனுதின வாழ்வில் நமக்கு இக்கட்டுகளை ஏற்படுத்துகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால்  தேவனை அதிகமாக நம்பவேண்டும். அப்போது தம்முடைய ஆவியானவர் நமக்குள் வாசஞ்செய்வதையும், அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு அருளுவதையும் அவர் நமக்கு நினைவூட்டுவார். தேவனிடமிருந்து நாம் பெலனைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த உடற்பயிற்சி நிபுணர் சொன்னதுபோல “சரி, இப்போது நீ ஓய்வு எடுக்கலாம்” என்று அவர் சொல்வதை நாம் கேட்கலாம்.

நான் பார்க்க முடிந்ததெல்லாம்

ஒரு குளிர்ந்த நாளில், உறையும் பனியில், ஓர் ஏரிக்கரையில் பனியினால் மூடப்பட்ட கலங்கரை விளக்கின் அழகினை கிறிஸ்டா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய அலைபேசியை எடுத்து இந்தக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சித்தபோது, அவளுடைய கண்ணாடி பனிப் படலத்தால் மூடப்பட்டது. அவளால் அதன் வழியே ஒன்றும் பார்க்க முடியவில்லை. எனவே அவள் தன்னுடைய கேமராவை அந்தக் கலங்கரை விளக்கிற்கு நேராகத் திருப்பி மூன்று படங்களை, வெவ்வேறு கோணங்களில் எடுத்தாள். பின்பு அவள் அந்தப் படங்களைப் பார்த்த போது தான் அவளுடைய கேமரா ''செல்பி" நிலையிலிருந்திருக்கின்றதை உணர்ந்தாள். அவள் சிரித்துக் கொண்டே, ''என்னுடைய கவனம் என்மீது, என்மீதேயிருந்திருக்கின்றது. நான் பார்க்க முடிந்ததெல்லாம் என்னையே" என்று கூறினாள். கிறிஸ்டாவின் படங்கள் என்னை அத்தகைய ஒரு தவறினைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டின. நாம் நம்மீதே கவனம் செலுத்தும் போது, தேவனுடைய திட்டத்தினைக் குறித்த பெரிய காட்சியைக் காணத் தவறிவிடுகின்றோம்.

இயேசுவின் உறவினனான யோவான் தன் மீது கவனம் செலுத்தும்படி தான் வரவில்லையென்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆரம்பத்திலிருந்தே அவன் தன்னுடைய அழைப்பு, பிறரை தேவக்குமாரனான இயேசுவிடம் திருப்புவதேயென்பதை நன்கு கண்டறிந்து கொண்டார். இயேசுவும் அவருடைய சீடர்களும் தன்னிடம் வரக்கண்ட யோவான், ''இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவா. 1:29) எனத் தெரிவிக்கின்றார். அத்தோடு, "இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்" என்றார் (வச. 31). யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து, அநேகர் இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றனர் எனத் தகவல் கொடுத்த போது, யோவான் அவர்களிடம், 'நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்... அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" (3:28-30) என்று கூறினார்.

நம்முடைய வாழ்வின் முழுகவனமும் இயேசுவின் மீதும் அவரை முழுமனதோடும் அன்பு செய்வதிலேயுமே இருக்கட்டும்.

இவர் எப்படிப்பட்ட இரட்சகர்?

கடந்த ஆண்டில் என் நண்பர்களும் நானும் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்த மூன்று பெண்மணிகளின் சுகத்திற்காக ஜெபித்தோம். தேவன் இதைச் செய்ய வல்லமையுடையவர் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே தேவன் செயல்படுமாறு அனுதினமும் ஜெபித்துவந்தோம். கடந்த நாட்களில் தேவன் செயல்பட்டதைக் கண்டிருக்கின்றோம். எனவே அவ்வாறு மீண்டும் செய்வாரென விசுவாசிக்கிறோம். ஒவ்வொருவரும் அநேக நாட்கள் போராட்டத்திற்குப்பின், உண்மையிலேயே சுகம் பெற்றதாகத் தோன்றியது. நாங்கள் மகிழ்சியடைந்தோம். ஆனால், அவர்கள் மூவரும் சில நாட்களுக்குப் பின் மரித்துப் போயினர். எங்கள் மகிழ்ச்சியும் விழுந்துபோனது. சிலர் இதனை, “நித்திய சுகம்" எனக் கூறினர். ஒரு வகையில் அப்படித்தான். ஆனாலும் அந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. தேவன் அவர்களை குணப்படுத்த வேண்டுமென விரும்பினோம். ஆனால், எந்த அற்புதமும் நடைபெறாதது, ஏனென்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சில ஜனங்கள் இயேசுவை அவர் செய்த அற்புதங்களுக்காகப் பின்பற்றினர். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பின்பற்றினர் (யோவா. 6:2,26). சிலர் அவரை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தனர் (மத். 13:55-58) வேறு சிலர் அவரை தங்களின் அரசியல் தலைவராக எதிர்பார்த்தனர் (லூக். 19:37-38) சிலர் அவரை சிறந்த போதகராகப் பார்த்தனர் (மத். 7:28-29) அவருடைய உபதேசம் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தபடியால் மற்றவர்கள் அவரைவிட்டுப் பின் வாங்கினர் (யோவா. 6:66).

நாம் எதிர்பார்க்கின்றவற்றை இயேசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவர் நாம் நினைப்பதையும் விட மேலாகச் செய்கின்றவர். அவரே நித்திய வாழ்வைத் தருபவர் (யோவா. 6:47-48). அவர் நல்லவரும் ஞானமுள்ளவருமாயிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கின்றார், மன்னிக்கின்றார், நம்மருகில் இருக்கின்றார், நமக்கு ஆறுதலைத் தருகின்றார். நாம் அவரின் மீது சாய்ந்து இளைப்பாறி, தொடர்ந்து அவரைப் பின்பற்றுவோம்.