Archives: ஆகஸ்ட் 2026

இயேசுவின் காணக்கூடிய தடயங்கள்

தனிப்பட்ட அலைபேசி பயனர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை இனம் காண அவர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் மூலக்கூறுகளை ஸ்வாப் பரிசோதனை மூலம் ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அலைப்பேசி பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தும் சோப்புகள், குழைமங்கள், சாம்புகள் மற்றும் ஒப்பனை பொருட்கள் போன்றவற்றையும் அவர்கள் உட்கொள்ளும் உணவுகள், பானங்கள் மற்றும் மருந்துகளின் வகை; மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடை வகை போன்றவற்றையும் ஆராய்ந்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலிருந்தும் அவர்களுக்கான சுயவிவரத்தை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடிந்தது.

பாபிலோனிய அதிகாரிகளும் ஏதேனும் எதிர்மறையான குணாதிசயங்கள் அல்லது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கண்டுபிடிக்கும்படி, தீர்க்கதரிசி தானியேலின் வாழ்க்கையைப் பரிசோதிக்கும்படி ஒருவகையில் “ஆராய்ந்தனர்”. ஆனால் அவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாகப் பேரரசை உண்மையாகச் சேவித்தார், “அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை (தானியேல் 6:4). உண்மையில் தீர்க்கதரிசி, தரியு ராஜாவால் தனது பல பிரபுக்களின் மேலாக “மூன்று நிர்வாகிகளில்” ஒருவராகப் பதவி உயர்வு பெற்றார் (வ. 1-2). ஒருவேளை பொறாமையின் காரணமாக, மற்ற அதிகாரிகள் தானியேலிடம் குற்றத்திற்கான தடயங்களைத் தேடியிருப்பார்கள் அதனால் அவர்கள் அவரை பதவிநீக்கம் செய்ய முடியும். இருப்பினும், அவர் தனது உத்தமத்தில் நிலைத்திருந்து, மேலும் “அவர் முன்பு செய்தது போலவே” (வ. 10) தேவனிடம் ஜெபித்து, சேவை செய்தார். இறுதியில், தீர்க்கதரிசி தனது பொறுப்பில் வெற்றி பெற்றார் (வ. 28). நாம் யார், யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும் வெளிப்படையான தடயங்களை நம் வாழ்க்கை விட்டுச் செல்கிறது. நாம் போராடிக்கொண்டிருந்தாலும், குறையுள்ளவர்களாய் இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம் வாழ்க்கையை “பரிசோதிக்கும்போது” அவர்கள் உத்தமம் மற்றும் தேவபக்தியின் தடயங்களைக் காணும்படி இயேசு நம்மை வழிநடத்துவாராக. 

 

ஒரு குழந்தையின் நம்பிக்கை

என் பேத்தி இலியானா ஏழு வயதாக இருந்தபோது, குவாத்தமாலாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தைப் பற்றிய காணொளியை அவள் பள்ளியில் பார்த்தாள். அவள் அம்மாவிடம், “அவர்களுக்கு உதவ நாம் அங்குச் செல்ல வேண்டும்” என்றாள். அவள் பெரியவளான பின் அதைப் பற்றி யோசிப்போம் என்று அவளுடைய அம்மா பதிலளித்தார்.

இலியானா ஒருபோதும் இதை மறக்கவில்லை, அவளுடைய பத்தாம் வயதில் அவளுடைய குடும்பம் அனாதை இல்லத்திற்கு உதவச் சென்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் திரும்பவும் சென்றனர், இந்த முறை இலியானாவின் பள்ளியிலிருந்து மற்ற இரண்டு குடும்பங்களையும் அழைத்துச் சென்றனர். இலியானாவின் பதினைந்தாம் வயதில், அவளும் அவளுடைய அப்பாவும் மீண்டும் குவாத்தமாலாவுக்குச் சேவை செய்யச் சென்றனர்.

சிறுபிள்ளைகளின் ஆசைகளும் கனவுகளும், பெரியவர்களின் சிந்தனையின் பாரத்தைச் சுமந்திருக்காது என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால் வேதம் அத்தகைய வேறுபாட்டைக் காட்டவில்லை. சாமுவேலைப் போலவே தேவன் சிறுபிள்ளைகளை அழைக்கிறார் (1 சாமுவேல் 3:4). சிறுபிள்ளைகளின் விசுவாசத்தை இயேசு கனப்படுத்துகிறார் (லூக்கா 18:16). மேலும் பவுல், ஜனங்கள் “இளமையைக்குறித்து” (1 தீமோத்தேயு 4:12)அசட்டைபண்ணாதபடிக்கு இளைய விசுவாசிகள் இருக்கவேண்டும் என்று கூறினார்.

எனவே, நாம் நம் பிள்ளைகளை வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளோம் (உபாகமம் 6:6-7; நீதிமொழிகள் 22:6), அவர்களின் விசுவாசம் நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி என்பதை உணர்ந்து (மத்தேயு 18:3) அவர்களுக்கு இடறல் செய்வதைக் குறித்து கிறிஸ்து எச்சரித்துள்ளார் (லூக்கா 18:15) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளிடம் நம்பிக்கையின் தீப்பொறியைக் கண்டால், பெரியவர்களாகிய நம் வேலையை அது தூண்டும்படி உதவுவதாகும். தேவன் நம்மை நடத்துவதுபோல, இயேசுவை நம்புவதற்கும் அவருக்காகச் சேவை செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை நோக்கி அவர்களை ஊக்குவிக்கலாம்.