Archives: மார்ச் 2026

அன்பின் அடுத்த படி

தன் போட்டியாளருக்கு யாராவது உதவ என்ன காரணம்? விஸ்கான்சினில் உள்ள அடோல்போ என்ற உணவக உரிமையாளருக்கு, கோவிட் விதிமுறைகளுக்கு ஏற்ப போராடும் மற்ற உள்ளூர் உணவக உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இது அமைந்தது. ஒரு தொற்றுநோய் சமயத்தில் வணிகம் செய்வதில் உள்ள சவால்களை அடோல்போ நன்கு அறிந்திருந்தார். மற்றொரு உள்ளூர் வணிகரின் பெருந்தன்மையால் ஊக்கமடைந்த அடோல்போ, தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து, இரண்டாயிரம் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள கூப்பன்களை வாங்கினார். அவற்றை தனது வாடிக்கையாளர்களுக்கு, அவரருகே உள்ள மற்ற உணவகங்களில் பயன்படுத்துவதற்காகக் கொடுத்தார். இது அன்பின் வெளிப்பாடாகும், வெறும் வார்த்தைகள் அல்ல கிரியைகள்.

மனிதகுலத்திற்காக தனது வாழ்க்கையை தானே முன்வந்து அர்ப்பணித்த இயேசுவின் வெளிப்படுத்தப்பட்ட அன்பின் மீது (1 யோவான் 3:16) கட்டும்படிக்கு, யோவான் தனது வாசகர்களை அடுத்த படியெடுத்து அன்பை செயல்படுதிட ஊக்கப்படுத்தினார். யோவானை பொறுத்தவரை, “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (வ. 16) என்பது இயேசுவால் எடுத்துக்காட்டப்பட்ட அதே வகையான அன்பை வெளிப்படுத்துவதாகும்; மேலும் இது பெரும்பாலும் அன்றாட, நடைமுறைச் செயல்களின் வடிவத்தை எடுக்கும், அதாவது பொருள் உடைமைகளைப் பகிர்ந்து கொள்வது போன்றது. வார்த்தைகளால் நேசித்தால் போதாது; அன்புக்கு நேர்மையான, அர்த்தமுள்ள செயல்கள் தேவை (வ.18).

அன்பை செயலில் காட்டுவது கடினமாக இருக்கலாம், ஏனென்றால் அதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட தியாகமும் அல்லது மற்றொரு நபருக்காக நம்மை நாமே விட்டுக்கொடுப்பதும் வேண்டும். தேவனின் ஆவியால் பலப்பட்டு, நம்மீது அவர் வைத்திருக்கும் அளவில்லா அன்பை நினைத்து, அன்பின் அடுத்த படியை நாம் எடுக்க முடியும். 

தேவன் நமக்கு உதவுகையில் நாமும் உதவுதல்

நியூசிலாந்தின் ஓலே காசோவ் சைக்கிள் ஓட்டுவதை விரும்பினார். ஒரு காலை, ஒரு முதியவர் தனது வாக்கருடன் ஒரு பூங்காவில் தனியாக இருப்பதைக் கண்டபோது, ஓலே ஒரு எளிய யோசனையால் ஈர்க்கப்பட்டதை உணர்ந்தார். சைக்கிள் சவாரியின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் முதியவா்களுக்கு ஏன் வழங்கக்கூடாது? எனவே, ஒரு நாளில் வாடகை மூன்று சக்கர சைக்கிளை ஒரு முதியோர் காப்பகத்தில் நிறுத்தி, அங்குள்ள அனைவருக்கும் சவாரி செய்தார். அதின் ஊழியரும், வயதான குடியானவரும் சைக்கிளிங் வித்தவுட் ஏஜ் அமைப்பின் முதல் பயனர் ஆனபோது அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இப்போது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, சைக்கிள் ஓட்ட இயலாதவர்களுக்கு உதவும் ஓலேயின் கனவு, சுமார் 575,000 முதியவர்களை 2.5 லட்சம் சவாரிகளால் ஆசீர்வதித்துள்ளது. எங்கே போகிறார்கள்? ஒரு நண்பரைப் பார்க்கவோ, ஐஸ்கிரீம் சாப்பிடவோ, மேலும் தென்றல் காற்றை அனுபவிக்கவுமே. இதின் பங்காளர்கள் தாங்கள் நன்றாக உறங்குவதாகவும், சாப்பிடுவதாகவும் மற்றும் தனிமையாக உணர்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.

இத்தகைய ஈவு ஏசாயா 58:10-11 இல் உள்ள தம்முடைய ஜனங்களுக்கான தேவனின் அழகான வார்த்தைகளை நடைமுறைப்படுத்துகிறது. “சிக்கலில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்” “அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்” என்று அவர் அவர்களிடம் கூறினார். “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.” என்று தேவன் வாக்களித்தார்

தேவன் அவர்களிடம் “உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்” (வ.12) என்றார். அவர் நம் மூலம் என்ன செய்ய முடியும்? அவர் நமக்கு உதவுகையில், பிறருக்கு உதவ நாமும் எப்போதும் தயாராக இருப்போம்.

மகிழ்ச்சியான நம்பிக்கை

கருணைக்கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூடியை ஒரு பெண், விலங்குகள் காப்பகத்திலிருந்து மீட்டார். அந்த நாய் அவளுக்கு துணையானது. பத்து ஆண்டுகளாக, ரூடி லிண்டாவின் படுக்கைக்கு அருகில் அமைதியாக தூங்கினது, ஆனால் அது திடீரென்று அவளுக்கு அருகில் குதித்து அவள் முகத்தை நக்க ஆரம்பித்தது. லிண்டா அதை திட்டினார், ஆனால் ஒவ்வொரு இரவும் ரூடி அதேபோல செய்தது. “விரைவில் அவர் என் மடியில் குதித்து, நான் அமரும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை நக்கியது” என்றார் லிண்டா.

ரூடியை பிராணிகள் நலமையத்திற்கு அழைத்துச் செல்ல அவள் திட்டமிட்டிருகையில்; ரூடி எத்தனை பிடிவாதமாக இருக்கிறது என்பதையும், அது தன் தாடையில் அதே இடத்தில் தன்னை எப்படி நக்குகிறது என்பதையும் லிண்டா சிந்திக்க ஆரம்பித்தாள். தயங்கியவாறே, லிண்டா மருத்துவரை அணுகுகையில், அவர் ரூடியிடம் ஒரு நுண்ணிய கட்டி இருப்பதைக் (எலும்பு புற்றுநோய்) கண்டறிந்தார். டாக்டர் லிண்டாவிடம், அவள் தாமதித்திருந்தால், அது அவளைக் கொன்றிருக்கும் என்றார். லிண்டா ரூடியின் உள்ளுணர்வை நம்பினாள், அவ்வாறு செய்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

தேவனை நம்புவது ஜீவனுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. சங்கீதக்காரன், “கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (40:4) என்கிறார். சில மொழிபெயர்ப்புகள் இதை இன்னும் மிகைப்படுத்தி, “கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்” (வ. 4) என்கிறது. சங்கீதங்களில் குறிப்பிடப்படும் “மகிழ்ச்சி”; மிகுதியாகவும், பொங்குகிற, உற்சாகமான மகிழ்ச்சியாகும்.

நாம் தேவனை நம்புகையில், ஆழமான, உண்மையான மகிழ்ச்சியே இறுதி முடிவு. இந்த நம்பிக்கை எளிதில் வராமல் இருக்கலாம், மேலும் முடிவுகள் நாம் எண்ணியது போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனை நம்பினால், நாம் நம்பியதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம். 

பரலோகத்தில் எஜமானன்

இந்தியாவின் 1948 ஆம் ஆண்டின் 'தொழிற்சாலைகள் சட்டம்' அனைத்து தொழிலாளர்களுக்கும் வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை “செவ்வையாய்” நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, “அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்” என்கிறது.

“மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே” (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் “பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று” (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், “நீதியும் செவ்வையுமாய்” (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

“இருக்கிறேன் என்பவர்”

தத்துவம் மற்றும் இலக்கியப் பேராசிரியரான ஜாக், புத்திசாலியும் கூட. தனது பதினைந்து வயதில் தன்னை நாத்திகராக அறிவித்தார், மேலும் இளமைப் பருவத்தில் தனது “நாத்திக நம்பிக்கையை” பிடிவாதமாக பற்றியிருந்தார். கிறிஸ்தவ நண்பர்கள் அவரிடம் விளக்க முயன்றனர். ஜாக் கூறியது போல், “அனைவரும், அனைத்தும் மறுபுறம் சேர்ந்திருந்தன” ஆனால் வேதாகமம் மற்ற இலக்கியங்கள் மற்றும் புராணங்களிலிருந்து வேறுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. நற்செய்திகளைப் பற்றி அவர், “ஒரு கட்டுக்கதை எப்போதாவது உண்மையாகி, மனித உருவேற்பேற்றால் அது இப்படித்தான் இருக்கும்” என்றெழுதினார்.

ஒரு வேதாகம பகுதி ஜாக்கை மிகவும் பாதித்தது; யாத்திராகமம் 3. தேவன் மோசேயை எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்த அழைத்தார். மோசே தேவனிடம், “பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்” (வ.11) என்றான். தேவன், “இருக்கிறவராக இருக்கிறேன்” (வ.14) என பதிலளித்தார். இந்த பத்தி, வார்த்தைகள் மற்றும் பெயர்கள் குறித்த சற்று கருகலாக இருப்பினும் ஆதியிலிருந்திருக்கும் தேவனின் நித்திய பிரசன்னத்தை பிரதிபலிக்கிறது. சுவாரஸ்யமாக, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” (யோவான் 8:58) என்று இயேசு சொன்னபோது அதையே எதிரொலித்தார்.

சி.எஸ். லூயிஸ் (பிரபல கிறிஸ்தவ எழுத்தாளா்) என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜாக், இந்தப் பத்தியால் ஆழமாக தொடப்பட்டார். ஒரே மெய்யான தேவன் சொல்ல வேண்டியது இதுதான்; அவர் “இருக்கிறவர்” என்று மட்டுமே. வாழ்க்கையை மாற்றும் ஒரு தருணத்தில், லூயிஸ் “தன்னை விட்டுக்கொடுத்து, தேவனே கடவுள் என்று ஒப்புக்கொண்டார்.” லூயிஸ் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் பயணத்தின் தொடக்கமாக இது இருந்தது.

ஒருவேளை நாம் லூயிஸ் போல் நம்ப இயலாமல் போராடலாம் அல்லது ஒரு மந்தமான நம்பிக்கையுடன் இருக்கலாம். தேவன் உண்மையிலேயே நம் வாழ்வில் “இருக்கிறவரா?” என்று நம்மை நாமே ஆராயலாம்.