என்னுடைய நீண்டகால நண்பனும் நானும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய சிநேகிதன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தார். அவருடைய ஊருக்கு எதிர்பாராதவிதமாய் செல்லவேண்டியிருந்ததினால் அவரை சந்திக்க நேரிட்டது. நாங்கள் இருவரும் உணவுவிடுதிக்குள் நுழையும்போது எங்கள் இருவருடைய கண்களும் கண்ணீரால் ததும்பியது. பல வருடங்களுக்கு முன்பாக அதே ஓட்டல் அறையில் நாங்கள் உட்கார்ந்து உணவு அருந்தியிருக்கிறோம். ஆனால் இப்போது மரணம் அருகாமையில் நின்று, வாழ்க்கையின் சொற்பத்தன்மையை எங்களுக்கு விளங்கச் செய்தது. சாகசங்கள், குறும்புகள், சிரிப்பு, இழப்பு, காதல் போன்ற உணர்வுகள் நிறைந்த நீண்ட நட்பிலிருந்து எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டபோது எங்கள் கண்களின் ஓரத்திலிருந்து அன்பு சிந்தியது.

இயேசுவும் கண்ணீர் சிந்தியிருக்கிறார். “ஆண்டவரே, வந்து பாரும்” (யோவான் 11:34) என்று யூதர்கள் இயேசுவிடம் சொன்னமாத்திரத்தில், தன்னுடைய நெருங்கிய சிநேகிதனான லாசருவின் கல்லறைக்கு முன்பாக இயேசு வந்து நிற்கிறார். இயேசு மனுஷீகத்தோடு மாம்சத்தை பகிர்ந்துகொண்டார் என்பதற்கு “இயேசு கண்ணீர்விட்டார்” (வச.35) என்றும் இரண்டு வார்த்தைகள் மிகுந்த ஆதாரமாய் அமைகிறது. யோவான் பதிவுசெய்யாத சில காரியங்கள் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடுமோ? ஆம். ஆகிலும் அங்கே நின்றிருந்த யூதர்கள், “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” (வச. 36) என்று சொல்லுகிறார்கள். இந்த வரிகள், நம்முடைய எல்லா பெலவீனங்களையும் நன்கு அறிந்த ஒரு சிநேகிதரை நின்று ஆராதிக்க போதுமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இயேசு மாம்சமும் இரத்தமும் கண்ணீரும் உடையவராயிருந்தார். இயேசு நம்மை நேசித்து புரிந்துகொள்ளும் இரட்சகர்.