என்னுடைய தாயார் புற்றுநோயால் இறந்த பின்பு, அவரோடு இருந்த இன்னொரு நோயாளி என்னை அணுகினார். “உன்னுடைய அம்மா மிகவும் மென்மையானவர்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். “நான் மரிப்பதற்குப் பதிலாய் அவர் மரித்துவிட்டார்” என்று வேதனைப்பட்டார்.
“என் அம்மா உங்களை அதிகம் நேசித்தார்,” “உங்களுடைய பிள்ளைகள் வளருவதைப் பார்க்க நீங்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன். அவர்களுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, தேவன் தாமே இந்த துக்கத்தினூடே சமாதானம் அருள கண்ணீரோடு வேண்டிக்கொண்டேன். அவருடைய இந்த இக்கட்டான நோயின் மத்தியிலும் அவருடைய கணவனையும் பிள்ளைகளையும் நேசிக்கும் இருதயத்தைக் கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி சொன்னேன்.
யோபு தன்னுடைய பிள்ளைகளையும் சேர்த்து தனக்குண்டான எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் தருவாயில், யோபுவின் சொல்லொண்ணா துயரத்தை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. “தரையிலே விழுந்து பணிந்து”(யோபு 1:20) தன் துக்கத்தை வெளிப்படுத்துகிறான். இருதயம் நொருங்குண்டவனாய், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்”(வச.21) என்று தன்னுடைய நன்றியுணர்வோடு கூடிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறான். அதற்குப் பின்பாக தன்னுடைய கொடிய வேதனையின் நிமித்தம் யோபு அதிகப்படியாய் புலம்பினாலும், நன்மை-தீமை மீதான தேவனுடைய அதிகாரத்தை இந்த தருணத்தில் மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்கிறான்.
நம்முடைய உணர்வுகளோடு நாம் போராடும் பல்வேறு வழிமுறைகளை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால் நம்முடைய துக்கத்தை அவரோடு நேர்மையோடும், நிறைவோடும் அனுசரிக்கத் தேவன் அழைக்கிறார். வாழ்க்கைப் போராட்டம் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும், தேவன் என்றும் மாறுவதில்லை என்று உறுதியளிக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்து தேவன் நம்மைத் தேற்றி, அவருடைய பார்வையில் சிறந்தவர்களாய் மாற்றுகிறார்.