குஜராத் மாகாணத்தின் பிரபலமான “ரோகன் ஓவியங்கள்” பார்ப்பதற்கு மிகவும் எளிமையாய் தெரியலாம். ஆனால் அந்த ஓவியத்தின் ஒரு சிறு பகுதியை வடிவமைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறதுஎன்பதை அறிந்துகொள்ளவேண்டும். நொறுக்கப்பட்ட கனிம அடிப்படையிலான வர்ணங்களை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து, “மெல்லமான ஓவியம்” என்று நாம் அழைக்கும் இந்த ஓவியத்தை தயார் செய்வதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலாக எடுக்கும். அதை உன்னிப்பாய் கவனித்தால், அதின் வேலைப்பாடுகளும் அழகும் தெரியும். சுவிசேஷமும் ஏறத்தாழ இதைப்போன்றதே. உடைக்கப்பட்ட கனிமங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தைப் போலவே, இயேசு தன் பாடுகளின் மூலம் உடைக்கப்பட தன்னை ஒப்புக்கொடுத்து, முழு உலகத்திற்குமான நம்பிக்கைக்குக் காரணரானார்.

நம்முடைய வாழ்க்கையில் உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட அனுபவங்களை தேர்ந்தெடுத்து, அதை புதிய அழகான காரியங்களாய் மாற்றுவதற்கு தேவன் விரும்புகிறார். தாவீது, தன்னுடைய சுயத்தினால் உடைக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றுவதற்கு தேவனுடைய உதவியை நாடினார். இன்னொருவனுடைய மனைவியை இச்சித்து, அவள் நிமித்தம் அவளுடைய கணவனை கொலை செய்யத் துணிந்த தன்னுடைய தவறை உணர்ந்து தாவீது பாடிய பாடலே சங்கீதம் 51. தாவீது, “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” (வச. 17) தேவனுக்கு அர்ப்பணித்து, இரக்கத்திற்காய் கெஞ்சினான். நருங்குண்டதும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட எபிரேயப் பதம், “நித்கே.” அதற்கு, “சுக்குநூறாய் நொருங்கியது” என்று பொருள்.

தாவீதின் இருதயத்தை தேவன் புதிதாக்குவதற்கு (வச. 10), அது முழுவதுமாய் நொறுக்கப்படவேண்டியிருந்தது. மன்னிக்கிறதில் தயைபெருத்த உண்மையுள்ள தேவனிடத்தில் தாவீது தன்னுடைய உடைக்கப்பட்ட இருதயத்தை ஒப்படைத்தான்.