மற்றவர்களின் கருத்துக்களை மட்டுமல்லாது, அதைச் சொன்ன நபர்களையும் தாக்குவது இன்று இயல்பாகிவிட்டது. இது வருத்தமான ஒன்றாகும். கல்வித்துறை வட்டாரங்களிலும் இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த காரணத்திற்காக, அறிஞரும் இறையியலாளருமான ரிச்சர்ட் ஹேஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு அவரே எழுதிய ஒரு படைப்பை, வலுக்கட்டாயமாக விமர்சனம் செய்து  ஒரு கட்டுரையை எழுதியபோது நான் திகைத்துப் போனேன்! “ரீடிங் வித் தி கிரைன் ஆப் தி ஸ்க்ரிப்ச்சர்” என்ற புத்தகத்தில், ஹேஸ் தனது சொந்த கடந்தகால சிந்தனையை சரி செய்ததால், மனத்தாழ்மையை வெளிப்படுத்தினார்.

நீதிமொழிகள் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சாலெமோன் ராஜா இந்த ஞானமான சொற்களின் தொகுப்பின் பல்வேறு நோக்கங்களை பட்டியலிட்டார். ஆனால் அந்த நோக்கங்களின் நடுவில், “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து..” (நீதிமொழிகள் 1:5) என்ற சவாலைச் சேர்த்துள்ளார். பல தசாப்தங்களாக கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த பின்னரும், இயேசுவை அறியும் அறிவை தெரிந்துகொள்ள தொடருகிறேன் (பிலிப்பியர் 3:12) என்று கூறிய அப்போஸ்தலனாகிய பவுலைப் போலவே, ஞானிகளைக் கேட்கவும், கற்றுக்கொள்ளவும், தொடர்ந்து வளரவும் சாலெமோன் வலியுறுத்தினார்.

கற்பிக்கக்கூடிய மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதால் யாரும் காயப்படுவதில்லை. நாம் தொடர்ந்து வளரவும், நம்பிக்கைக்குரிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் முற்படுகையில், பரிசுத்த ஆவியானவர் நம்மை சத்தியத்திற்கு நேராய் வழிநடத்த அனுமதிப்போம் (யோவான் 16:13). நல்லவரும் சிறந்தவருமான தேவனின் நன்மையின் அற்புதங்களை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.