“எங்கள் ஓய்வு நேரங்களிளெல்லாம் நாங்கள் என்ன செய்வோம்?” பொருளாதார நிபுணர் ஜான் மேனார்ட் கீன்ஸ், 1930 இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கலந்தாலோசிக்கிறார். அதில், கீன்ஸ் நூறு ஆண்டுகளுக்குள், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் மனிதர்களை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மற்றும் வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் மட்டுமே வேலை செய்யும் நிலைக்கு கொண்டு வரும் என்று முன்மொழிந்தார்.

கீன்ஸ் தனது புகழ்பெற்ற கட்டுரையை வெளியிட்டு, 90 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் தொழில்நுட்பம், அதிக ஓய்வு நேரத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, முன்பை விட நம்மை மும்முரமாய் ஆக்கியுள்ளது. நாள் முழுதும் நாம் மும்முரமாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். பயணம் மற்றும் சமைத்தல் போன்ற அன்றாடப் பணிகளுக்கு குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டாலும், நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

தாவீதின் வாழ்க்கையில் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம், வாழ்க்கையின் அவசரத்தில் எப்படி நிலையாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. தாவீது ராஜா சவுலிடமிருந்து தப்பியோடியபோது, அவர் மோவாபின் ராஜாவிடம், “தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும்” (1 சாமுவேல் 22:3) என்று கேட்கிறார். தாவீது மிகவும் மும்முரமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தான். அவர் சவுலின் சதித்திட்டங்களில் இருந்து தப்பிக்க முயன்ற அதே வேளையில், அவரது குடும்பத்திற்கு உதவவும் முயன்றான். ஆனால் அவனுடைய அலுவல்களுக்கு மத்தியிலும் தேவனுக்காகக் காத்திருக்க நேரம் எடுத்தான்.

வாழ்க்கை நம்மை துரிதப்படுத்தும்போது, தன்னுடைய சமாதானத்தோடு நம்மைக் காக்கக்கூடியவரை நாம் விசுவாசிக்கலாம் (ஏசாயா 26:3). அதைத் தாவீது, “கர்த்தருக்காகக் காத்திருங்கள்; திடமனதாயிருந்து, கர்த்தருக்குக் காத்திரு” (சங்கீதம் 27:14) என்கிறார்.