கிறிஸ், தனது உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இரத்தத்தை பரிசோதனை செய்தார். அவருடைய சிகிச்சைக்கு தேவைப்பட்ட மஜ்ஜை நன்கொடையளித்தவரிடமிருந்து அவருக்கு கிடைத்தது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில், கிறிஸின் இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ அவரது நன்கொடையாளருடையது, அவருடையது அல்ல. பலவீனமான இரத்தத்தை நன்கொடையாளரின் ஆரோக்கியமான இரத்தத்துடன் மாற்றுவதே செயல்முறையின் குறிக்கோளாக இருந்ததால், இது அர்த்தமுள்ளதாகவே தென்பட்டது. ஆனாலும், கிறிஸின் கன்னங்கள், உதடுகள் மற்றும் நாக்கு அகியவை கூட நன்கொடையாளரின் டி.என்.ஏவையே காண்பித்தது. அவருடைய வெளிப்புறத்தோற்றம், எண்ணங்கள் ஆகியவைகளில் அவர் அவராகவே இருந்தாலும், ஏதோ சில வழிகளில் அவர் வேறொருவராக மாறிவிட்டார்.

கிறிஸின் அனுபவம் இரட்சிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதற்கு ஏறத்தாழ ஒத்துள்ளது. நாம் கிறிஸ்துவை நம்பும்போது, நம்முடைய ஆவி மறுரூபமடைந்து, நாம் புது சிருஷ்டியாய் மாற்றப்படுகிறோம் (2 கொரிந்தியர் 5:17). எபேசு சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தில், அந்த உள்ளான மறுரூபத்தை பிரதிபலிக்கவும், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு… மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களை ஊக்குவிக்கிறார் (எபேசியர் 4:22,24). கிறிஸ்துவுக்காக பிரித்தெடுக்கப்பட வேண்டும்.

இயேசுவின் மறுரூபமாக்கும் வல்லமை நமக்குள் கிரியை செய்வதை பார்ப்பதற்கு, டி.என்.ஏ பரிசோதனையோ அல்லது இரத்தப் பரிசோதனையோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த மறுரூபமாக்கப்பட்ட உள்ளான மனிதன், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தோடு நாம் எவ்விதத்தில் தொடர்புகொள்ளுகிறோம் என்பதை அடிப்படையாய் வைத்து தீர்மானிக்கப்படுகிறது. நாம் “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன்” நமக்கு மன்னித்ததுபோல, நாமும் மற்றவர்களை மன்னிக்கிறோமா என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது (வச. 32).