“காற்று இளஞ்சிவப்பு மலர்கள் மீது வீசுகிறது.” கவிஞர் சாரா டீஸ்டேலின் வசந்தகால கவிதையான “மே” என்று தலைப்பிடப்பட்ட கவிதையின் துவக்கவரிகள் இது. அதில் காற்றில் அசையும் இளஞ்சிவப்பு மலர்களை படம்பிடித்திருப்பார். ஆனால் டீஸ்டேல் காதல் தோல்வியை எண்ணி புலம்பி அப்பாடலை பாடுகிறார். ஆகையால் அவருடைய கவிதை விரைவில் சோகமாக மாறுகிறது.

எங்கள் கொல்லைப்புறத்தில் இருந்த இளஞ்சிவப்பு மலர்களும் ஒரு சவாலை எதிர்கொண்டது. அவைகள் பூத்துக் குலுங்கிய காலம் முடிந்தவுடன், எங்களின் தோட்டக்காரர் தன்னுடைய கூரான கோடாரியினால் அவைகளை குட்டையாக கத்தரித்தார். நான் அழுதேன். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தரிசாகக் கிடந்த கிளைகள், மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்கத் துவங்கியது. அவைகளுக்கு அவகாசம் தேவை. ஆகையால் நான் பார்க்காத ஒன்றிற்காய் நான் காத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.

உபத்திரவத்தின் மத்தியிலும் விசுவாசத்தோடு காத்திருந்த பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தாமதமான மழைக்காக நோவா காத்திருந்தார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ காலேப் நாற்பது ஆண்டுகள் காத்திருந்தார். ஒரு குழந்தையைப் பெற ரெபேக்காள் இருபது வருடங்கள் காத்திருந்தாள். யாக்கோபு ராகேலை திருமணம் செய்ய ஏழு ஆண்டுகள் காத்திருந்தார். சிமியோன் குழந்தை இயேசுவைப் பார்க்க காத்திருந்தார். அவர்களின் பொறுமைக்கு தக்க பலன் கிடைத்தது.
இதற்கு நேர்மாறாக, மனிதர்களைப் பார்ப்பவர்கள் “பாழான நிலங்களில் உள்ள புதர்களைப் போல இருப்பார்கள்” (எரேமியா 17:6). கவிஞர் டீஸ்டேல் தனது கவிதையை அத்தகைய இருளில் தான் முடித்தார். “நான் ஒரு குளிரின் நடுக்கத்தோடு போகிறேன்,” என்று அவர் தனது கவிதையை நிறைவுசெய்தார். ஆனால், “கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று எரேமியா மகிழ்ச்சியடைகிறார். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்ட… மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8). என் நம்பிக்கையானது, வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் நம்மோடு நடந்து வரும் தேவனில் நாட்டப்பட்டுள்ளது.