நானும் எனது மனைவியும் ஒரு சாதாரண இயற்கை நடைபயணம் மேற்கொள்ள துவங்கினோம். எங்கள் ஊரில் இருந்த நதியோரமாய் நாங்கள் போன அந்த பயணம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாய் மாறியது. சிதறிய தண்ணீரில் எங்களுக்கு பழக்கப்பட்ட சில நண்பர்களான 5 அல்லது 6 ஆமைகள் சூரிய ஒளியில் மின்னுவதைப் பார்த்தோம். பல மாதங்களாய் நாங்கள் பார்க்கத் தவறின இந்த ஆச்சரியமான உயிரினங்களைப் பார்த்து நாங்கள் புன்னகைத்தோம். அவைகள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனுடைய இந்த அற்புதமான படைப்பில் நாங்கள் ஒரு கணம் மகிழ்ச்சியை கொண்டாடினோம். 

தேவன் யோபுவையும் ஒரு இயற்கை நடை பயணம் கூட்டிச்செல்லுகிறார் (யோபு 38ஐ காண்க). இக்கட்டில் இருக்கும் இந்த மனிதனுக்கு அவனுடைய நிலைமையைக் குறித்து, சிருஷ்டிகரிடத்திலிருந்து பதில் தேவைப்படுகிறது (வச. 1). தேவனோடு நேரிட்ட இந்த நடைபயணம் இந்த மனிதனுக்குத் தேவையான உற்சாகத்தை அளித்தது. 

இந்த உலகத்தின் நேர்த்தியான வடிவமைப்பை யோபுவுக்கு விவரிக்கும்போது யோபுவின் ஆச்சரியத்தை சற்று கற்பனை செய்யுங்கள். இந்த உலகத்தைப்பற்றி அதை உண்டாக்கியவரிடமிருந்து நேரடியாய் யோபு கேட்கிறான்: “அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே” (வச. 6-7). சமுத்திரத்தின் வரையறையைக் குறித்த பூகோளவியல் பாடத்தை தேவன் யோபுவுக்கு கற்றுக்கொடுக்கிறார் (வச. 11). 

மேலும் தேவன் யோபுவுக்கு, ஒளி, பனி, மழை என்று தன்னுடைய சிருஷ்டிப்புகளை ஏன் சிருஷ்டித்தார் என்று அறிவிக்கிறார் (வச. 19-28). ஆகாயத்தில் மிதப்பவரிடமிருந்து விண்மீண்களைக் குறித்து யோபு கேட்டறிகிறான் (வச. 31-32).

கடைசியாக, “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்” (42:2) என்று யோபு ஒப்புக்கொள்கிறான். இந்த இயற்கையை நாம் அனுபவிக்கும்போது, நம்முடைய ஞானமுள்ள அற்புதமான சிருஷ்டிகரை நினைத்து பூரிக்கலாம்.