உலகக்கோப்பை கால்பந்தின் 2017ஆம் ஆண்டின் தகுதிச் சுற்றில், அமெரிக்காவுடன் டிரினிடாட் மற்றும் டொபாகோ மோதியது. பெயர் அறியப்படாத இந்த சிறிய தீவு நாடுகள், அமெரிக்காவை அபாரமாக வீழ்த்தி, உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது. தகுதி வரிசை பட்டியலில் 56 தேசங்களைக் கடந்து முன்னிலைப் பெற்றது. 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2018ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் பெயர் இடம்பெற முடியாத அளவிற்கு அதை பின்னுக்குத் தள்ளியது.

டிரினிடாட் மற்றும் டொபாகோவின் இந்த வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அமெரிக்காவோடு ஒப்பிடும்போது, இந்த சிறிய கரீபியன் தீவு நாடுகள் ஒன்றுமில்லை. ஆனால் எவ்வளவு பெரிய தேசமானாலும் வாஞ்சையோடு விளையாடும் குழுவை தோற்கடிப்பது சாத்தியமில்லை.

மீதியானுக்கு விரோதமாக கிதியோனின் யுத்தமும் இதைப்போன்றதே. ஒரு பெரிய இராணுவத்திடம் ஒரு சிறு கூட்டம் மோதியது. இஸ்ரவேலில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கையை வைத்தோ, பொருளாதாரத்தை வைத்தோ, அல்லது திறமையான தலைவர்களை வைத்தோ யுத்தத்தில் வெற்றியடைந்தால் மகிமை தேவனுக்கு போகாது என்பதினால், அவர்களின் இராணுவத்தை முந்நூறாகக் குறைக்கிறார் (நியாய. 7:1-8).

நம்மால் பார்க்க, அளவிட முடிந்த காரியங்களில் மட்டுமே நம்பிக்கை வைக்க தூண்டப்படுகிறோம். ஆனால் அது விசுவாச பாதையல்ல. கடினமான சூழ்நிலை நமக்கு அனுமதிக்கப்பட்டாலும் தேவனைச் சார்ந்து “கர்த்தரிலும் அவரின் சத்துவத்தின் வல்லமையிலும்” பலப்படும்போது (எபேசியர் 6:10), நம்மால் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளையும் நாம் துணிச்சலோடும் நம்பிக்கையோடும் மேற்கொள்ளமுடியும். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் நமக்குள் பெரிய காரியங்களைச் செய்யும்.