சில சமயங்களில் குழந்தைகளின் வார்த்தைகள் தேவனின் சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு நம்மைத் தூண்டக்கூடும். என் மகள் இளமையாக இருந்தபோது ஒரு நாள் மாலையில், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு உன்னத இரகசியத்தைப் பற்றி அவளிடம் சொன்னேன் – தேவன் தம்முடைய குமாரன் மற்றும் ஆவியின் மூலமாக அவருடைய பிள்ளைகளுள் வாசம்செய்கிறார். நான் அவளை படுக்கையில் கட்டிக்கொண்டபோது, இயேசு அவளுடனும் அவளுக்குள்ளும் இருப்பதாக சொன்னேன். “அவர் என் வயிற்றில் இருக்கிறாரா?” என்று அவள் கேட்டாள். “உண்மையில், நீ அவரை விழுங்கவில்லை,” என்று நான் பதிலளித்தேன். “ஆனால் அவர் உன்னுடன் இருக்கிறார்.” 

இயேசுவை “அவள் வயிற்றில்” வைத்திருப்பதாக என் மகள் நேரடியாக அர்த்தம் கொண்டபோது என்னை நிதானித்தேன். இயேசுவை என் இரட்சகராக வரும்படி கேட்டபோது, அவர் வந்து எனக்குள் எப்படி வாசம்பண்ணினார் என்பதைக் கருத்தில் கொண்டேன்.

பரிசுத்த ஆவியானவர் எபேசுவில் உள்ள விசுவாசிகளை பெலப்படுத்துவார் என்று பிரார்த்தனை செய்தபோது அப்போஸ்தலன் பவுல் இந்த இரகசியத்தை குறிப்பிட்டார், இதனால் கிறிஸ்து “விசுவாசத்தினாலே (அவர்களுடைய இருதயங்களில்) வாசம்பண்ணுவார்” (எபேசியர் 3:17). இயேசு உள்ளே வாசம்பண்ணுவதால், அவர் அவர்களை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அன்பினால் தூண்டப்பட்டு, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் முதிர்ச்சியடைவார்கள், அன்பின் உண்மையை பேசும்போது மற்றவர்களை மனத்தாழ்மையுடனும் மென்மையுடனும் நேசிப்பார்கள் (4:2,25).

இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குள் வாசம்பண்ணுவது என்றால், அவருடைய அன்பு அவரை வரவேற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் விட்டு விலகாது. அவருடைய அன்பு அறிவுக்கு எட்டாதது (3:19) நம்மை அவரிடம் வேரூன்ற செய்து, அவர் நம்மை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் இதைச் சிறப்பாக எடுத்துரைக்கும்: “ஆம், இயேசு என்னை நேசிக்கிறார்!”