சமீபத்தில் எனது நான்கு சக்கர வாகனம் பழுதாகி விட்டது.  வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒரு மைல் தூரத்தில் இருந்தது. நடந்து செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். ஒன்றை கவனித்தேன். அனைவரும் என்னை விட மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இது ஒன்றும் பெரிய ஏவுகணை அறிவியல் இல்லை நடந்து செல்பவர்களை விட ஊர்திகளில் செல்பவர்கள் வேகமாக செல்வார்கள். அப்பொழுது தான் ஒன்றை நான் உணர்ந்தேன்: நாம் எப்போதும் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். மற்றொன்றையும் உணர்ந்தேன்: தேவனையும் என்னுடைய கால அட்டவணைக்கு ஏற்ப வேகமாக நகர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது அவருடைய மெதுவான வேகம் அவர் நண்பர்களை சில நேரங்களில் விரக்தி அடைய செய்தது. நாம் யோவான் 11ல் வாசிப்பது போன்று மார்த்தாள் மரியாள் தங்கள் சகோதரனாகிய லாசருவை குணப்படுத்த வல்லவராகிய  இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவரோ லாசரு மரித்து 4 நாட்களுக்கு பிறகு வந்தார் (வச. 17). மார்த்தாள் இயேசுவைப் பார்த்து “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால்  என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” என்று கூறினாள். அதாவது இயேசு வேகமாக செயல்படவில்லை என்று அர்த்தம். ஆனால் இயேசுவோ லாசருவை உயிரோடு எழுப்பும்படி பெரிய திட்டத்தை வைத்திருந்தார் (வச. 38-44).

உங்களால் மார்த்தாவின் விரக்தியை உணர முடிகிறதா? என்னால் முடிகிறது. சில சமயங்களில் நம் ஜெபங்களுக்கு சீக்கிரமாக பதிலளிக்கும்படி இயேசுவை எதிர்பார்க்கிறவர்களாக நாம் இருக்கிறோம்.  சிலவேளைகளில் அவர் தாமதிப்பது போல் காணப்படலாம். ஆனால் அவருடைய சர்வவல்ல திட்டம் நம்  திட்டத்திற்கு எதிர்மாறானது.  அவருடைய திட்டத்தில் உள்ள வேலைகளை அவர் சரியாக செய்து முடிக்க வல்லவர். இதிலிருந்து அவருடைய மகிமையும் நன்மையும் நம் திட்டங்களுக்கு அப்பாற்பட்டவை என்று அறியலாம்.