என்னுடைய கணவனின் சகோதரன் 2000 கிமீ தொலைவிற்கு அப்பால் வாழ்கின்றார், எனினும், அவருடைய நகைச்சுவையான பேச்சும், அன்பான உள்ளமும் அவரை, எங்களுடைய அன்பார்ந்த குடும்ப நபராக்கியது. தங்களுடைய தாயாருக்குப் பிடித்தமானவர் என்று அவருடைய உடன்பிறப்புக்கள் அவரைக்குறித்து நல்லெண்ணத்தோடு கேலி செய்வதுண்டு என்பது எனக்கு நினைவில் இருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களெல்லாரும் சேர்ந்து, அவருக்கு “நான் அம்மாவிற்குப் பிடித்தமான பிள்ளை” என்று வாசகம் கொண்ட டி சர்ட்டைப் பரிசளித்தனர்.  நம்முடைய உடன்பிறந்தோர் செய்யும் இத்தகைய காரியங்களைக் குறித்து நாம்மெல்லாரும் மகிழ்ச்சியடைந்தாலும், ஒருவரை மட்டும் தனிச் சிறப்போடு கவனிப்பது என்பது கேலிக்குரிய காரியமல்ல.

 மற்றவர்களைக் காட்டிலும் யோசேப்பை, தான் அதிகமாக நேசிக்கின்றதைக் காண்பிக்கும் படி, யாக்கோபு தன்னுடைய மகன் யோசேப்புக்கு பலவர்ணமான அங்கியைக் கொடுத்தான், என்பதாக ஆதியாகமம் 37 ஆம் அதிகாரத்தில் காண்கின்றோம் (வ.3). எந்த ஒரு விளக்கமும் தரப்படாமலே, அந்த அங்கி, “யோசேப்பு என்னுடைய நேசக் குமாரன்” என்பதை மறைவாக அல்ல, வெளிப்படையாகவேத் தெரிவிக்கின்றது.

ஒரு குடும்பத்தில், ஒருவரை மிக அதிகமாக நேசிப்பது என்பது அக்குடும்பத்தைப் பிரிக்கும். யாக்கோபின் தாயார் ரெபேக்காள்,  ஏசாவை விட யாக்கோபை அதிகமாக நேசித்தாள், அது அந்த சகோதரர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியது (25:28). இது, யாக்கோபையும் தொற்றிக் கொண்டது. அவன் தன்னுடைய மனைவி ராகேலை (யோசேப்பின் தாயாரை), லேயாளைக் காட்டிலும் அதிகமாக நேசித்தான். அது பிரிவினையையும் தலைவலியையும் கொண்டுவந்தது (29:30-31). இந்த தவறான நடைமுறையால், யோசேப்பின் சகோதரர்கள் அவனை வெறுத்தனர், அவனை கொல்லவும் முயற்சித்தனர் (37:18).

நம்முடைய உறவுகளில், நாமும் இத்தகைய நடைமுறையைக் கைக் கொள்வோமாகில், அது சிக்கலை ஏற்படுத்தும். நாம் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் எண்ணத்தைக் கடைபிடிப்போம், நம்முடைய பரமத் தந்தை நம் எல்லோரையும் நேசிப்பதைப் போன்று, நாமும் அனைனரையும் சமமாக நேசிப்போம் (யோவா.13:34).