Archives: 16/05/2020

எனக்கு ஒரு கதை சொல்

முன்னொரு காலத்தில் என்ற வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தவையாக உலகெங்கிலும் திகழ்கின்றது. இந்த வார்த்தைகளின் வலிமையில் இருந்த வேறுபாடுகள் என்னுடைய இளமைப் பருவ நினைவில் இருக்கின்றது. ஒரு நாள் என்னுடைய தாயார் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பெரிய, கடின அட்டை கொண்ட, படங்களோடு கூடிய வேதாகம கதை புத்தகத்தைக் கொண்டு வந்தார்- நல்மேய்ப்பன் வேதாகம கதை புத்தகம் அது. ஒவ்வொரு நாள் இரவும் தூங்குவதற்கு முன்பு, நானும் என்னுடைய சகோதரனும் எதிர்பார்ப்போடு அமர்ந்திருப்போம். எங்கள் தாயார் முன்னொரு காலத்தில், தேவன் நேசித்த மக்களைப் பற்றிய ஆர்வமுள்ள கதைகளை வாசித்து, கூறுவார். இந்தக் கதைகள் ஒரு லென்ஸ் போல செயல் பட்டு, இவ்வுலகின் காரியங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என காட்டுகின்றன.

மறுக்க முடியாத, மிகப் பெரிய கதை சொல்லுபவர் யாரெனில், நசரேயனாகிய இயேசு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கதை கேட்கும் ஓர் ஆர்வம் இருப்பதை அவர் அறிவார். எனவே அவர் சுவிசேஷத்தைக் கூற தொடர்ந்து அ     ந்த ஊடகத்தையே பயன்படுத்தினார். முன்னொரு காலத்தில், ஒரு மனிதன் “நிலத்தில் விதைகளை விதைத்தான்” (மாற்.4:26), முன்னொரு காலத்தில் “ஒரு கடுகு விதை” இருந்தது (வச. 31), இன்னும் பல, பல. இயேசு அனுதினமும் மக்களோடு உவமைகளின் வாயிலாகவே உரையாடினார் என்பதை மாற்கு சுவிசேஷம் தெளிவாகக் கூறுகின்றது (வச. 34). இவ்வுலகத்தை தெளிவாகக் காணவும், அவர்களை நேசிக்கின்ற தேவனை நன்கு புரிந்து கொள்ளவும் இது உதவியாக இருந்தது.

தேவனுடைய இரக்கத்தையும், கிருபையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது இதனை நினைவில் கொள்வது புத்திசாலித்தனம். கதைகளைக் கேட்க யாரும் மறுப்பதில்லை.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை  பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.

 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5). 

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார். 

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.