சாமுவேலும் அவனுடைய குடும்பத்தினரும், “விரிந்த கரங்கள், திறந்த வீடு” என்ற தத்துவத்தைக் கைக் கொண்டனர். அவர்களின் வீடு அனைவரையும் வரவேற்கிறது, “சிறப்பாக, வருத்தத்தில் இருப்போருக்கு” என்று அவர் கூறுகின்றார். லைபீரியாவில் ஒன்பது உடன்பிறந்தோரோடு, அப்படிப்பட்ட ஒரு வீட்டில் அவன் வளர்க்கப் பட்டான். அவனுடைய பெற்றோர் எப்பொழுதும் அவர்கள் வீட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்பார்கள். அவன், “நாங்கள் ஒரு சமுதாயமாக வளர்ந்தோம், நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம், ஒவ்வொருவரும் மற்றவரின் பொறுப்பை ஏற்றோம், என்னுடைய தந்தை ஒருவரை ஒருவர் நேசிக்கவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுத்தார்” என்று கூறினான்.

தாவீது ராஜா தேவையில் இருந்த போது, இத்தகைய அன்பின் பாதுகாப்பை தேவனிடம் பெற்றார்.
2 சாமுவேல் 22 (சங்.18) ல் தாவீதின் துதி பாடல் எழுதப்பட்டுள்ளது. தேவன் அவனுடைய வாழ்நாள் முழுவதும் அடைக்கலமாக இருக்கின்றார். அவன், “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று” (2 சாமு. 22:7) என்கின்றான். தேவன் அவனை அவனுடைய எதிரிகளிடமிருந்து விடுவித்தார், சவுல் அரசனிடமிருந்து பல முறை பாதுகாத்தார். கர்த்தர் அவருக்கு கன்மலையும், கோட்டையும்,உயர்ந்த அடைக்கலமும், புகலிடமும், ரட்சகருமாயிருக்கிறார்,  என்று பாடுகின்றார் (வச. 2-3).

தாவீதின் துயரங்களைப் பார்க்கும் போது நம்முடைய துயரங்கள் சிறியது தான். தேவன் நம்மையும் அவரிடம் ஓடி வரும்படி அழைக்கின்றார், நாம் தேடுகின்ற பாதுகாப்பான இடத்தை அவர் தருகின்றார், அவருடைய கரங்கள் எப்பொழுதும் விரிந்தே இருக்கின்றன, எனவே நாமும் “அவருடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவோம்” (வ.50).