ஒரு நாள், ஒரு தாயும் அவளுடைய இளம் மகளும் ஆலயத்தில் அமர்ந்திருந்தனர். ஆராதனையின் போது, அங்கு வந்திருந்தவர்களுக்கு, வெளிப்படையாக தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் படி வாய்ப்பு கொடுக்கப் பட்டது. அவ்வாறு செய்ய, ஒவ்வொரு முறையும் யாரேனும் முன்னோக்கிச் செல்லும் போது, அந்த சிறுமி கரங்களைத் தட்ட ஆரம்பித்து விடுவாள். ஆராதனை முடிந்ததும், அவளுடைய தாய், “நான் மிகவும் வருந்துகிறேன், ஒப்புரவாகுதலின் மூலம் நாம் தேவனுக்கு நண்பர்களாகின்றோம் என நான் என்னுடைய மகளிடம் சொல்லியிருந்தேன், அதனாலேயே அவள் அனைவரையும் உற்சாகப் படுத்தினாள்” என்று சபையின் தலைவர்களிடம் தெரிவித்தாள்.

அந்தச் சிறுமியின் மனதில், சுவிசேஷத்தைக் குறித்து ஒரு எளிய கருத்தை, அவளுடைய தாயார் கொடுத்திருந்தது நல்லது தான். முன்பு தேவனுக்கு சத்துருக்களாக இருந்த நாம், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம், தேவனோடு கூட ஒப்புரவானோம் (ரோம. 5:9-10). இப்பொழுது நாம் தேவனுக்கு நண்பர்களாக இருக்கின்றோம். முன்பு இந்த நட்புறவை முறிப்பதற்கு நாம் தான் காரணமாயிருந்தோம் (வ.8), எனவே, ஒப்புரவாகுதலை முழுமையாக்க, நாம் தான் மனந்திரும்ப வேண்டும். அந்த சிறுமியின் செயல் மிகவும் பொருத்தமானது, ஒரேயொரு பாவி மனந்திரும்பினாலே பரலோகம் முழுவதும் ஆர்ப்பரிக்கின்றது (லூக். 15:10) .அந்தச் சிறுமியும் தான் அறியாமலேயே பரலோகத்தின் ஆர்ப்பரிப்பை கரகோஷத்தினால் பிரதிபலித்தாள்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய ஒப்புரவாகுதலின் வேலையை, “ஒருவன் தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை (யோவா. 15:10) என்பதாகத் தெரிவிக்கின்றார். அவர் நம்மீது கொண்டுள்ள நட்பின் காரணமாக, நிறைவேற்றிய தியாகச் செயலின் விளைவாக, நாம் இப்போது தேவனோடு நண்பர்களாக இருக்கின்றோம், அவர், “இனி நான் உங்களை ஊழியக்காரன் என்று சொல்லுகிறதில்லை,… நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்” (15:15) என்றார்.

முன்பு தேவனுக்குப் பகைவராக இருந்த நாம் இப்போது அவருக்கு நண்பர்களாக இருக்கிறோம். இந்த எண்ணம் நம்மை வியக்கச் செய்கின்றது, இது கைத் தட்டுவதற்கு உகந்தது.