ஓர் இளம்பெண்ணான நான், நல்ல வேலையில் அமர்வேன், திருமணம் முடித்துக் கொள்வேன் என கற்பனை செய்திருந்தேன், ஆனால் என்னுடைய முப்பதாவது வயது வரை அது நடைபெறவில்லை. என்னுடைய எதிர்காலம் வெறுமையாக என் கண் முன்னே காட்சியளித்தது. வாழ்வில் என்ன செய்வதெனத்தெரியாமல், நான் போராடிக் கொண்டிருந்தேன். கடைசியாக, பிறருக்குப் பணி செய்வதன் மூலம், தேவனுக்குப் பணிசெய்யும் படி, அவர் வழிகாட்டியதை உணர்ந்தேன், வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னில் வேர் விட்டிருந்த யாவற்றையும், நண்பர்களையும், குடும்பத்தையும் தள்ளிவிட்டு, எனக்குள்ளே உண்மை ஊடுருவ ஆரம்பித்தது. தேவனுடைய அழைப்பிற்கு செவிகொடுக்கும்படி, எல்லாவற்றையும் நான் விட வேண்டியதாகிவிட்டது.

கலிலேயா கடற்கரையோரமாக இயேசு நடந்து சென்று கொண்டிருந்த போது, பேதுருவும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவும் தங்கள் வாழ்வினை நடத்தும்படி மீன்களைப் பிடிக்க கடலில் வலைகளை வீசிக் கொண்டிருப்பதைக் கண்டார். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மத். 4:19) என்று அழைக்கிறார். இயேசு மேலும் இரண்டு மீனவர்கள் யாக்கோபு மற்றும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் பார்த்து, இத்தகைய ஓர் அழைப்பை அவர்களுக்கும் கொடுத்தார் (வச. 21).

இந்த சீஷர்களும் இயேசுவிடம் வந்த போது, சிலவற்றை விட்டு வந்தனர். பேதுருவும் அந்திரேயாவும் “வலைகளை விட்டு” (வச. 20) விட்டனர், யாக்கோபும் யோவானும் “படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்” (வச. 22). “அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்” என்பதாக லூக்கா எழுதுகின்றார் (லூக். 5:11).

இயேசு நம்மை அழைக்கும் போது, சிலவற்றை விட்டு வரும்படியாக நம்மையும் அழைக்கின்றார். வலைகள், படவு, தந்தை, நண்பர்கள், வீடு என்று பலவற்றை விட்டு விட்டு, நாம் அவரோடு உறவாடும்படி அழைப்பைப் பெறுகின்றோம், அவரோடு கூட பணி செய்யும்படியாக அழைக்கப்படுகின்றோம்.