ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று, என்னுடைய பாட்டியம்மா எனக்கு ஒரு முத்து மாலையைக் கொடுத்தார்கள். அந்த அழகிய முத்துக்கள் என் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நாள், அந்த மாலையின் கம்பி அறுந்து, அதின் முத்துக்களெல்லாம் மரத்தினாலான தரையில் சிந்தி, குதித்து, நாலாபக்கமும் சிதறின. நான் அந்த தரையில் தவழ்ந்து, ஒவ்வொரு சிறிய முத்தையும் பொறுக்கினேன். ஒவ்வொன்றும் தனித் தனியே சிறியதாக இருந்தாலும், அவையனைத்தையும் சேர்த்து கோர்த்திருந்த போது எத்தனை அழகாய் இருந்தது!

சில வேளைகளில் தேவன் கேட்கும் காரியங்களுக்கு, நான் ஆம் என்று கூறுவதும், அந்த தனி முத்தைப் போன்று முக்கியமற்றதாகக் காணப்படலாம். இயேசு கிறிஸ்துவின் தாயாராகிய மரியாளின் அற்புதமான கீழ்ப்படிதலைப் பார்க்கும் போது, நான் என்னை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். மேசியாவை தன்னுடைய கருவில் சுமக்க வேண்டுமென தேவன் அழைத்த போது மரியாள், தன்னை உடனே அர்ப்பணிக்கின்றாள். “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது”  என்றாள். (லூக். 1:38). அந்நேரத்தில் அவளிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவள் புரிந்து கொண்டிருந்தாளா? மேலும் தன்னுடைய மகனை, பின்னர் சிலுவையில் அறைவதற்கும், ஒப்புக்கொடுக்கப்போவதை அறிந்திருந்தாளா ?

லூக்கா 2:19 ல் காண்கின்றோம், தேவதூதர்களும், மேய்ப்பர்களும் இயேசுவைப் பணிந்து கொண்ட பின்பு,” மரியாளோ, அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள்.” அவள் நடந்த காரியங்களையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் “சேகரித்து” வைத்தாள், அத்தனையும் “ஒன்றாக இணைத்து”ப் பார்த்தாள். இதே வார்த்தைகளை லூக்கா 2:51 ல் மீண்டும் பார்க்கின்றோம். அவள் தன் வாழ்க்கையில் அநேகம் முறை, ஆம், ஆம்…  என்றே பதிலளிக்கின்றாள்.

நம்முடைய தந்தை நமக்கு கொடுக்கின்ற ஒவ்வொரு அழைப்பிற்கும், நாமும் மரியாளைப்போன்று, கீழ்ப்படிதலோடு, ஆம் என்று சொல்வதை நம்முடைய நோக்கமாகக் கொள்வோம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் கூறுகின்ற ஆம் அத்தனையும் பொக்கிஷமாகச்  சேர்த்து வைக்கப்படும்.