எங்களுடைய ஆலயத்தில் அநேக மக்கள், தங்களுடைய தகப்பனாருடன் சரியான உறவில் இல்லாத படியால், ஓர் அன்பான தந்தையாக நின்று, அவர்களை ஆசிர்வதிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். தங்களுடைய பிள்ளைகளிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்த்தல், பிள்ளைகளை அன்போடு சந்திப்பதில்லை, அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் தூரத்தில் வைத்துவிடல் போன்ற பல காரணங்களுக்காக மன்னிப்பை கேட்பதன் மூலம் ஆசிர்வதித்தல், மேலும் பிள்ளைகளைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைதல், அவர்களை ரசித்தல், அவர்கள்மேல் மிகவும் அன்பு செலுத்துவது, போன்ற பல காரணங்கள் மூலம் அவர்களை ஆசிர்வதித்தேன். நான் இவ்வாறு ஆசிர்வாதங்களைப் பகிர்ந்து கொண்ட போது, என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. நானும் என் தந்தையிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைப் பெற வேண்டியுள்ளது, என்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தேன்.

நம்முடைய உலகத் தந்தையைக் குறித்து, நாம் வைத்திருக்கும் உருக்குலைந்த வடிவத்தை மாற்றி, மறுபடியும் புதிப்பித்து தருகின்றவர் நம்முடைய தந்தையாம் தேவன் என்று வேதாகமம் கூறுகின்றது. நம்முடைய பரம தந்தை, நம்மை “தம்முடைய பிள்ளைகளாக” ஏற்றுக் கொண்டதினால், அவர் நம்மேல் பாராட்டின “மிகப் பெரிய அன்பு” விளங்குகின்றது (1 யோவா. 3:1) நாம் தேவனுடைய மகன் அல்லது மகள் என்பதே, இந்த நிலையற்ற, பயம் நிறைந்த உலகில், நாம் வாழுவதற்கு தேவன் தந்துள்ள அடிப்படை ஆதாரம். “நாம் தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப் படுகின்றோம், ஆனால்,” இனி எவ்விதமாயிருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை’’ என்று யோவான் கூறுகின்றார் (வச. 2). நம்முடைய பரமத் தந்தை நம்மை நேசித்து, நம்முடைய தேவைகளையெல்லாம் சந்தித்து வருகின்றார், அதை அவர் நிறுத்துவதேயில்லை என்ற நம்பிக்கையே, ஒவ்வொருநாளும் வரும் சவால்களைச் சந்திக்க பெலன் தருகின்றது. அவர் கூறியவற்றில் நாம் நிலைத்திருக்கும் போது, நாமும் அவரைப் போலாவோமென்று யோவான் எழுதுகின்றார் (வச. 2).

நம்முடைய எதிர்பார்ப்புகள், காயங்கள், தோல்விகளின் மத்தியில், நம்முடைய நல்ல தந்தை, குறைவற்ற அன்பையும் நம் மீது பொழிகின்றார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை வலியுறுத்துகின்றார், ஏனெனில், அவர் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கின்றார்.