நான் பேராசிரியராகப் பணியாற்றுவதால், என்னுடைய மாணவர்கள், சிபாரிசு கடிதம் பெறுவதற்கு அடிக்கடி என்னிடம் வருவர். தலைமைத்துவ நிலைகளுக்கு, வெளி நாட்டில் கல்வி பயில, பட்டப் படிப்பிற்குச் செல்ல அல்லது வேலைக்குச் செல்ல என பல்வேறு காரணங்களுக்காக வருவதுண்டு. ஒவ்வொரு கடிதத்திலும், நான் எனது மாணவர்களின் குணத்தையும், அவர்களுடைய கல்வித் தகுதியையும் பாராட்டி எழுத எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

பழங்காலத்தில், கிறிஸ்தவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்யும் போது, தங்களுடைய ஆலயத்திலிருந்து  ஒரு பாராட்டு கடிதத்தைப் பெற்றுச் செல்வர். இத்தகைய கடிதம், அந்த சகோதரனோ அல்லது சகோதரியோ நல்ல வரவேற்பை பெறுவதற்கு உறுதியளிக்கும்.

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையில் பேசுவதற்குச் சென்ற போது, அவனுக்கு இத்தகைய ஒரு பாராட்டு கடிதம் தேவையில்லாதிருந்தது, ஏனெனில், அவர்கள் அவனை அறிந்திருந்தனர். பவுல் சுவிசேஷத்தை உண்மையான மனதோடு பிரசங்கித்ததாகவும், தன்னுடைய ஆதாயத்திற்காக அல்ல என்றும் அந்த சபைக்கு எழுதப்பட்ட இரண்டாம் கடிதத்தில் எழுதுகின்றார் (2 கொரி. 2:17). தன்னைக் குறித்து இப்படி எழுதும் போது, அவர் தனக்குத்தானே பாராட்டுக் கடிதம் எழுதுவதாக வாசகர்கள் எண்ணக்கூடும்.

ஆனால், அவருக்கு ஒரு பாராட்டு கடிதமும் தேவையில்லை, ஏனெனில் கொரிந்து  சபை மக்களே, அவருடைய பாராட்டு கடிதம் என்கின்றார். கிறிஸ்து அவர்களுடைய வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றமே, அனைவராலும் பார்க்கக்கூடிய, அவருடைய கடிதம் என்கின்றார். “அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் எழுதப்பட்டிருக்கிறது.” (3:3) பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கு அவர்களுடைய வாழ்க்கை தானே சாட்சி என்கின்றார். அவர்களுடைய வாழ்க்கை “சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்படும்” நிருபம் என்கின்றார்.(3:2) இயேசுவை பின்பற்றும் நமக்கும் இது உண்மை. நம்முடைய வாழ்வு, சுவிசேஷத்தின் நன்மையை எடுத்துக் கூறும் உண்மை கதையாய் இருக்க வேண்டும்.