Archives: செப்டம்பர் 2019

எல்லா நாமங்களுக்கும் மேலான நாமம்.

அன்டோனியோ ஸ்ட்ராடிவேரி (1644-1737) இசையுலகில் ஒரு சரித்திரம் படைத்தவர். அவருடைய வயலின்களும், செல்லோக்களும், வயோலாக்களும் பொக்கிஷங்களாகக் கருதப் பட்டன. அவற்றின் நுணுக்கமான அமைப்பும், தெளிவான இசையும் அவருக்குப் பல புனை பெயர்களைக் கொடுத்தன. அவற்றுள் ஒன்று – மேசியா சலேபு ஸ்ட்ராடிவேரியஸ். வயலின் மேதையான ஜோசப் ஜோக்கிம் (1831-1907) இப்பாடலை வாசித்த போது  அவர், “ஸ்ட்ராடின் ஒலியின் தனித்துவம் நிறைந்த “மெசையா” என்ற பாடலின் இனிமையும், சிறப்பும் மீண்டும் மீண்டும் என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது” என்றார்.

இத்தகைய புகழ் பெற்ற ஸ்ட்ராடிவேரியஸின் பெயர் கூட மற்றொரு பெரியவரின் செயலுக்கு அருகில் வைக்கத் தகுந்ததல்ல. மோசேயிலிருந்து இயேசு வரை தேவாதி தேவன் தன்னை எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாக  வெளிப் படுத்துகின்றார். அவருடைய ஞானத்தையும், கரத்தின் கிரியைகளையும் நாம் கண்டுணர்ந்து அவரைக் கனப் படுத்தி இசையோடு அவரைப் போற்றும் படி விரும்புகின்றார் (யாத். 6:1; 15:1-2)

துயரத்திலிருந்து கூப்பிடும் ஜனங்களின் கூக்குரலுக்கு பதில் கொடுத்து அவர்களை விடுவிக்கும்படி தனது வல்லமையான செயல்களைக் காண்பிக்கின்றார். இது ஓர் ஆரம்பம் மட்டுமே. சிலுவையில் அடிக்கப்பட்டு பெலவீனமான அவருடைய கரங்களினால், முடிவில்லாத நித்திய மகிமையை நிலை நாட்டுவார் என யார் தான் முன்னறிந்திருக்க முடியும்? நம்மீதுள்ள  மிகப்பெரிய அன்பினால், நம்முடைய பாவங்களால் ஏற்பட்ட அவமானத்தையும், தள்ளப் படுதலையும் சகித்து, மரித்து உயிர்த்த ஒரு நாமத்தின் அதிசயத்தையும், மகத்துவத்தையும் குறித்து நாம் போற்றி இசையோடு பாடுவோம் என்று யாரேனும் நினைத்திருப்பார்களா?

திராட்சை செடியில்

கடுமையான குளிர் காலத்தில், எம்மா தன்னுடைய குடும்பத்தின் நபர் ஒருவருக்கு, அவருடைய நீண்ட நாள் சுகவீனத்தில் உதவினாள். கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள அவளுடைய வீட்டினருகிலுள்ள செர்ரி மரங்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவளுக்கு ஓர் ஊக்கம் கிடைக்கும். அந்த இளஞ்சிவப்பு நிற செர்ரி மலர்களினூடே ஒரு வெள்ளையான மலர் கொத்து வெளிப்பட்டது. ஒரு புத்திசலியான தோட்டக்காரர் அந்த செர்ரி மரக் கிளையில் வெண்மை மலர் கொப்பு ஒன்றை ஒட்ட வைத்தார். அந்த அசாதாரணமான மரத்தை எம்மா கடந்து செல்லும் போதெல்லாம், திராட்சைக் கொடிகளைப் பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை அவள் நினைவு கூர்ந்தாள். இயேசுவின் சீடர்களாகிய நாம் அவரில் கிளைகளாக ஒட்டப் பட்டுள்ளோம். அவரில் நிலைத்திருந்து அவர் தரும் ஆகாரத்தையும், பெலனையும் பெற்றுக் கொண்டோமேயானால் நாமும் மிகுந்த கனிகளைத் தர முடியும் (யோவா. 15:6).

எம்மா தன் குடும்ப நபர் ஒருவருக்கு ஆதரவாக இருந்தது போல, அவள் இயேசுவில் நிலைத்திருந்து தன்னுடைய ஆகாரத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.

இளஞ்சிவப்பு ,மலர்களினிடையே இருந்த வெண் மலர்கள், இந்த உண்மையை உறுதிப் படுத்தின. அவளும் இயேசுவில் நிலைத்திருந்தால் அவளுக்குத் தேவையான பெலனை அவர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

திராட்சைக் கொடியானது செடியில் நிலைத்திருக்க வேண்டியது எத்தனை அவசியமோ அப்படியே இயேசுவின் விசுவாசிகளான நாமும் அவரோடு நெருங்கி ஜீவிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய விசுவாசம் உறுதியாயிருந்து பலன் தரும்.

தன்னை திராட்சைச் செடி என்று கூறும் இயேசு, இஸ்ரவேலர் அதன் கொடிகள் என்றும், அவர்கள் தம்மோடு இணைக்கப்பட்டவர்கள் என்றும் உணர்த்துகிறார். அவரில் நிலைத்திருக்கும் போது, அவருடைய போஷாக்கையும் பெலனையும் பெற்று, மிகுந்த கனிகளைக் கொடுப்பர் (யோவா. 15:5).

சிறியதாக உணர்தல்

அநேக திரைப் பட விமர்சகர்கள், டேவிட் லீன் தயாரித்த லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற திரைப் படத்தை, எல்லாப் படங்களுக்கும் மேலானதாகக் கருதுகின்றனர். அதில் வருகின்ற எல்லையில்லாத அரேபிய பாலைவனத்தின் காட்சிகள் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலை முறைகளைக் கவர்ந்துள்ளது. திரைப்படத் துறையில் சிறந்த விருது பெற்ற தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், “நான் முதன் முறையாக லாரன்ஸ் படத்தைப் பார்த்த போது,  கவரப் பட்டேன், அது என்னை மிகவும் சிறியவனாக எண்ணச் செய்தது. இன்னமும் என்னை குறுகியவனாக எண்ணச் செய்கின்றது. அதுவே அப்படத்தின் பெருமையின் அளவுகோல்” என்றார்.

நான் சமுத்திரத்தைப் பார்க்கும் போதும், துருவப் பகுதியை மூடியிருக்கும் பனியின் மேலே பறக்கும் போதும், இரவு வானத்தில் லட்சக் கணக்கான விண் மீன்களைப் பார்க்கும் போதும், இந்தப் படைப்புகளின் மத்தியில் நான் மிகச் சிறியவனாகத் தோன்றுகின்றேன்.  படைக்கப் பட்ட உலகம் இத்தனை பரந்து, விரிந்து காணப் படுமாயின், அதனை தன் வார்த்தையாலே படைத்தவர் எத்தனை பெரியவர்?

தேவனுடைய பெரிய தன்மையையும், நாம் ஒன்றுமில்லை என்ற உணர்வையும் தாவீது வெளிப் படுத்துகின்றார்.  “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷ குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” (சங். 8:4) என்கிறார். ஆனால் தேவன், “ ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” என்கின்றார் (மத். 6:26).

நான் என்னைக் குறித்து சிறியதாகவும், ஒன்றுமில்லாததாகவும் உணரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் கண்களில் நான் விலையேறப் பெற்றவன். நான் ஒவ்வொரு முறை சிலுவையைப் பார்க்கும் போதும் என்னுடைய மதிப்பு அங்கே விளங்குகின்றது.  தேவன் என்னை மீட்டு, நான் அவரோடு இருக்கும் படி மனப் பூர்வமாய் செலுத்திய கிரயம், நான் எத்தனை விலயேறப் பெற்றவன் என்பதற்குச் சான்றாகவுள்ளது.

திரும்பி ஓடு

அலி ஓர் அழகிய, புத்திசாலியான, திறமைகள் வாய்ந்த வாலிபப் பெண். அன்பான பெற்றோரைக் கொண்டவள். அவளுடைய உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் அவளுக்குள் ஏதோவொன்று, ஹெராயின் என்ற போதைப் பொருளை எடுத்துக் கொள்ளுமாறு தூண்டிக் கொண்டேயிருந்தது. அவளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை அவளுடைய பெற்றோரும் கவனித்தனர். அவளை ஒரு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த போதை வஸ்து அவளுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை, அவள் ஒத்துக் கொண்டாள். அங்கு அவள் சிகிச்சையை முடித்த பின்னர், அவளுடைய சிநேகிதிகளுக்கு போதைப் பொருளைக் குறித்து என்ன செய்தியைக் கொடுக்கப் போகின்றாளெனக் கேட்டபோது, அவள், “உடனே திரும்பி ஓடு, என்பதே” என்றாள். வெறுமனே “இல்லை” எனக் கூறுவது போதாது, திரும்பி ஓடிவிட வேண்டுமென்றாள்.

ஆனால் அலி மீண்டும் தன் பழைய போதைப் பழக்கத்திற்குத் திரும்பினாள். அதிகப் படியான போதைப் பொருட்களை எடுத்ததால், தனது இருபத்திரண்டாம் வயதில் மரித்துப் போனாள். மனமுடைந்த அவளுடைய பெற்றோர், இத்தகைய முடிவுக்குள்ளாக மற்றவர்களும் போய் விடாதபடி முயற்சி எடுத்து, ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு வந்திருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த செய்தி, “அலிக்காக ஓடுங்கள்”, போதை வஸ்துக்கள் போன்ற அபாயங்களிலிருந்து வெகு தூரம் விலகி ஓடுங்கள் என்று தெரிவித்தனர்.

ஆவிக்குரிய மகனாகிய தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலனாகிய பவுல் தீமையை விட்டு விலகி ஓடும்படி கூறுகின்றார்  (2 தீமோ.த்தேயு 2::22). அப்போஸ்தலனாகிய பேதுருவும் இதனையே, “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” (1 பேது. 5:8-9) என்று கூறுகின்றார்.

நம்மில் ஒருவருமே சோதனைகளுக்கு விலக்கப் பட்டவர்களல்ல. ஆனால் அதனை மேற் கொள்ளும் சிறந்த வழி – அப்படிப் பட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து விடுதலேயாகும். ஒரு வேளை அதனை எப்பொழுதும் தவிர்க்கக் கூடாததாகயிருப்பின் தேவன் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையோடு வேதத்தில் கூறப் பட்டுள்ளபடி ஜெபத்தின் மூலம் பெலன் பெற்றுக் கொள்வோம். “நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்தால், எப்பொழுது திரும்பி அவரிடம் ஓடி வர வேண்டுமெனத் தெரிந்து கொள்வோம்.”