சி.எஸ். லூயிஸ் என்பவர் தான் எழுதிய “எதிர் பாராத சந்தோஷம்” (Surprised by Joy) என்ற புத்தகத்தில் தனது 33வது வயதில் எப்படி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார். “எதிர்ப்பைத் தெரிவித்தும், போராடியும், வெறுப்பைக் காண்பித்தும், ஏதாவது ஒரு வழியில் தப்பித்துக் கொள்ள வகை தேடியும்” முடியாமல் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாக தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். லூயிஸின் தனிப்பட்ட எதிர்ப்புகள், குறைபாடுகள் மற்றும் தடைகளின் மத்தியிலும், தேவன் அவரை ஒரு தைரியமான விசுவாச வீரனாக மாற்றினார். கிறிஸ்துவின் உண்மை, அன்பு ஆகியவற்றை லூயிஸ் தன்னுடைய வல்லமையான கதைகளாலும், கட்டுரைகளாலும் வெளிக் காட்டினார். அவர் மரித்த பின்னரும் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக அவை வாசிக்கப்பட்டும், பிறரோடு பகிர்ந்து கொள்ளப்பட்டும் வருகின்றன. அவருடைய வாழ்வு அவருடைய நம்பிக்கையை வெளிப் படுத்தியது. “ஒரு மனிதன் மற்றொரு இலக்கினை நிர்ணயிக்க அல்லது ஒரு புதிய கனவினைக் காண வயது ஒரு வரம்பல்ல” என்பதை அவருடைய வாழ்வு காட்டியது.

நாம். நமக்குத் திட்டங்களை ஏற்படுத்தி, கனவுகளைக் காணும் போது, தேவன் நம்முடைய திட்டங்களைத் தூய்மைப் படுத்தி, நாம் தேவனுக்காகச் செய்யும் காரியங்களை முழு அர்ப்பணத்தோடு செய்யும்படி நம்மை பெலப் படுத்துகின்றார் (நீதி. 16:1-3). சாதாரணப் பணியிலிருந்து மிகப் பெரிய சாதனை வரை அனைத்திலும் நம்மைப் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு மகிமையுண்டாகும்படி நம்மால் வாழ முடியும். ஏனெனில், நம்முடைய நடைகளை உறுதிப் படுத்துகின்றவர் கர்த்தர் (வச. 4,9). நம்முடைய ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு வார்த்தையையும் தேவனே கவனித்துக் கொள்வதால் (வச. 7) அவை தேவனை கனப்படுத்துவதாக இருக்கின்றன.

நம்முடைய தடைகளும், குறுக்கீடுகளும், ஓரிடத்தில் நிலைப்பட்டு விடும் தன்மையும், குறுகிய கனவுகளும் தேவனுடைய செயல்பாட்டிற்குத் தடைகளாகாது. நாம் அவருக்காக வாழ தேர்ந்து கொள்ளும் போது, நம்மை முழுமையாக அர்ப்பணித்து அவரையே சார்ந்து இருப்போமாகில், அவர் நமக்கென்று  வைத்திருக்கும் திட்டங்களைச் செயல் படுத்துவார். நாம் எதைச் செய்தாலும் அவரோடும் அவருக்காகவும் அவர் மூலமாகவுமே செய்ய முடியும்.