இந்தியாவில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தாமஸ். அமெரிக்க தம்பதியர் அவரைத் தத்தெடுத்தார்கள். ஒரு சமயம் அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, தன்னுடைய நகரத்திலிருந்த சிறுவர்கள் அதிகமான தேவையில் இருப்பதைக் கண்டார். அவர்களுக்கு உதவவேண்டியது தன்னுடைய கடமை என்று புரிந்தது. அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்று, படிப்பை முடித்து, நிறைய பணம் சேர்த்துவிட்டு, மறுபடியும் இந்தியாவுக்குத் திரும்பிவந்து உதவிசெய்யவேண்டுமென நினைத்தார். அதற்கான திட்டங்களைப் போடத் துவங்கினார்.

பிறகு, யாக்கோபு 2:14-18ஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம், “அம்மா, இப்போது எனக்குப் பசிக்கிறது!” என்று அழுவது அவருடைய காதில் தொனித்தது. “ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” என்று அப்போஸ்தலர் அதில் கேட்டிருப்பார். தானும்கூட மிகவும் பசியோடு, ஏதாவது கிடைக்குமா என்று குப்பைத் தொட்டிகளைத் தேடி அலைந்த காலம் அவருடைய நினைவுக்கு வந்தது. உதவிசெய்வதற்கு இன்னும் பல வருடங்களைக் கடத்துவதற்கு அவர் விரும்பவில்லை. “இப்போது ஆரம்பிக்கப் போகிறேன்!” என்று தீர்மானித்தார்.

திக்கற்ற பிள்ளைகளுக்காக அவர் ஆரம்பித்த இல்லத்தில் இன்று 50 பிள்ளைகள் சிறந்த கவனிப்புடன் வயிறார சாப்பிடுகிறார்கள், இயேசுவைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள், கல்வி பயில்கிறார்கள். இயேசு சொல்லியிருக்கிறார், அதைச் செய்வதற்கு காலந்தாழ்த்தக்கூடாது என்று ஒருவர் செய்த தீர்மானம்தான் அதற்கெல்லாம் காரணம்.

யாக்கோபு சொல்கிற செய்தி நம் எல்லாருக்குமே பொருந்தும். இயேசு கிறிஸ்துவிலான விசுவாசத்தால் மிகப் பெரிய பல அனுகூலங்களைப் பெற்றிருக்கிறோம். அதாவது, அவரோடு உறவுகொள்ள முடிகிறது, பரிபூரணமான வாழ்க்கையைப் பெறமுடிகிறது, எதிர்காலத்திற்கான நம்பிக்கையைப் பெறமுடிகிறது. ஆனால், உதவி தேவைப்படுவோரைத் தேடிச்சென்று, அவர்களுக்கு உதவாவிட்டால், இவற்றால் ஏதாவது நன்மை இருக்கிறதா? “இப்போது எனக்குப் பசிக்கிறது” என்று மக்கள் அழுவது உங்கள் காதில் விழுகிறதா?