காமிக் புத்தக ஹீரோக்கள் எப்போதுமே பிரபலம்தான். 2017ல் மட்டும் ஆறு சூப்பர்ஹீரோ படங்கள், 4 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு பாக்ஸ்  ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளன. ஆக்சன் ஹீரோ படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெறுவதற்கான காரணம் என்ன?

அப்படிப்பட்ட கதைகள் எல்லாமே தேவனுடைய மாபெரிய சரித்திரம் ஒத்திருப்பதே அதற்கு ஒரு காரணமாகும். ஒரு ஹீரோ இருப்பார், ஒரு வில்லனும் இருப்பார், மக்களை அவரிடமிருந்து காப்பாற்றவேண்டும், எனவே பரபரப்பான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்தச் சம்பவத்தில், முக்கிய வில்லன், நம் ஆத்துமாக்களின் சத்துருவாகிய சாத்தான். ஏராளமான “குட்டி” வில்லன்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, தானியேல் புத்தகத்திலுள்ள நேபுகாத்நேச்சார் அப்படிப்பட்டவர்தான். அன்றைய உலகின் பெரும்பகுதியை ஆட்சிசெய்தவர், அவர் ஒரு மாபெரும் சிலையை நிறுவி, அதைத் தொழுதுகொள்ளாத அனைவரையும் கொன்றுபோடத் தீர்மானித்தார். தானி 3:1-6. தைரியமிக்க மூன்று யூத அதிகாரிகள் அதற்கு மறுத்தார்கள். வசனங்கள் 12-18. எரிகிற அக்கினி சூளையிலிருந்து அற்புதமாக தேவன் அவர்களை விடுவித்தார். வசனங்கள் 24-27.

ஆனால் இங்கு எதிர்பாரா ஒரு திருப்பம்; இந்த வில்லனுடைய மனது மாற ஆரம்பிக்கிறது. பிரமிப்பூட்டும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னார். வசனம் 28.

அந்த தேவனுக்கு விரோதமாகப் பேசுகிற எவனும் கொல்லப்படுவான் என்றும் மிரட்டுகிறார். வசனம் 29. உண்மையில், அவருடைய உதவி தேவனுக்கு தேவையில்லை என்பதை உணரவில்லை. தேவனைப்பற்றி நேபுகாத்நேச்சார் இன்னும் அதிகமாக அறிந்துகொண்டார் என்பதை 4ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அது வேறு கதை.

நேபுகாத்நேச்சார் ஒரு வில்லன் மட்டுமல்ல, ஆவிக்குரிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஒருவரும் கூட. தேவனுடைய மீட்பின் சம்பவத்தில், நம்முடைய ஹீரோவான இயேசு, யாரையெல்லாம் காப்பாற்றமுடியுமோ அவர்களை எல்லாம் தேடிச்செல்கிறார். நம் மத்தியில் இருக்கிற வில்லன்களைக் கூட தேடிச் செல்கிறார்.