மோரிஸ் சென்டாக் எழுதிய காட்டுத்தனமான பொருட்கள் இருக்கும் இடத்தில் என்று பொருள்படக்கூடிய (Where the Wild Things are) குழந்தைகள் கதை புத்தகத்தில் வருவதைப்போல் “காட்டுத்தனமான பொருள்” ஒன்றை என் பக்கத்து வீட்டுக்காரர் டிம் தன் காரில் வைத்திருக்கிறார்.

ஒரு நாள் சாலையில் என் பின்னால் தன் காரில் வந்துகொண்டிருந்த டிம் திடீரென்று காரை வளைத்து ஓட்டினார். காரை விட்டு இறங்கியபோது “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கேட்டேன்.

அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை, என் பிரசங்கக் குறிப்புகளை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன். எனவே அதை எடுப்பதற்காக வீட்டிற்கு காரில் ‘பறந்து’ சென்றேன். வழியில் டிம்மின் கார் எதிர்திசையில் என்னைக் கடந்து சென்றது. பின்னர் நாங்கள் சந்தித்தபோது, என் வேகத்தைப் பற்றி குறிப்பிடும் விதமாக “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கிண்டல் செய்தார். நாங்கள் சிரித்தாலும், நான் வேக வரம்பை கவனிக்கவில்லை என்பதை அவர் சொன்னது எனக்கு என் தவறை உணர்த்தியது.

தேவனுடனான உறவில் நாம் வாழ்வதைப்பற்றி விவரிக்கும் வேதாகமம், “உங்கள் அவயவங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” என்று நம் ஒவ்வொரு அம்சத்தையும் ஒப்புக்கொடுக்க ஊக்குவிக்கிறது (ரோம. 6:13). அன்போடு என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதால், டிம் என்னிடம் கூறியதை, வேகமாக கார் ஓட்டும் பழக்கத்தை ஒப்புக்கொடுக்க தேவன் எனக்கு நினைவுபடுத்தியதாக எடுத்துக்கொண்டேன்.

“ஓட்டுவது யார்?” என்ற கேள்வி வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும். கவலை, பயம், சுய சித்தம் போன்ற பழைய “காட்டுத்தனமான பண்புகள்” நம்மை இயக்குகின்றனவா? அல்லது நாம் வளர உதவும் பரிசுத்த ஆவியின் அன்புக்கும், கிருபைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்கிறோமா?

தேவனிடம் ஒப்புக்கொடுப்பது நமக்கு நல்லது. தேவனின் ஞானம் நம்மை “இனிதான வழிகளிலும், சமாதானமான பாதைகளிலும்” அழைத்துச் செல்வதாக வேதாகமம் கூறுகிறது (நீதி. 3:17). அவர் வழிநடத்தும் பாதையில் செல்வதே நல்லது.