சண்டையிடும் மாகாணங்கள் காலம் (கி மு 475-246) என்று அறியப்பட்ட காலக்கட்டத்தில் கு யுவான் என்ற விவேகமான, நாட்டுப்பற்றுள்ள சீன அரசு அதிகாரி வாழ்ந்தார் என்ற மரபுக்கதை ஒன்று உண்டு. நாட்டை அழிக்கக்கூடிய ஒரு ஆபத்து நெருங்கி வருவதாக அவர் அரசருக்கு அநேக முறை எடுத்துகூற முயன்றும், அரசர் அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் கு யுவான் நாடு கடத்தப்பட்டார். தான் எந்த எதிரி குறித்து எச்சரித்தாரோ அந்த எதிரியால் தன் அன்புக்குரிய நாடு அழிந்தது என்று அறிந்தபோது, தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சில விஷயங்களில் கு யுவானின் வாழ்க்கை எரேமியாவின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அவரது எச்சரிக்கையை ஏளனம் செய்த அரசர்களை அவரும் சேவித்தார். அவர் நாடும் சூறையாடப்பட்டது. ஆனால் கு யுவான் நம்பிக்கை இழந்துபோனார், எரேமியாவோ உண்மையான நம்பிக்கை கொண்டார். ஏன் இந்த வித்தியாசம்?

உண்மையான நம்பிக்கை அளிக்கும் ஆண்டவரை எரேமியா அறிந்திருந்தார். “உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று தேவன் அந்த தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். கி மு 586ல் எருசலேம் அழிக்கப்பட்டாலும், அது பின்னர் மீண்டும் கட்டப்பட்டது (நெகேமியா 6:15 பார்க்க).

நம்பிக்கையை இழக்கவைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரலாம். அது மோசமான தகவலைத் தரும் மருத்துவ ஆய்வு அறிக்கையாகவோ, பறிபோன வேலையாகவோ, சிதைந்துபோன குடும்பமாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை நம்மை கீழே தள்ளும்போதும், நாம் நிமிர்ந்து பார்க்கமுடியும் – ஏனென்றால் கர்த்தர் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! நம்முடைய நாட்கள் அவர் கைகளில் இருக்கிறது. நம்மை அவர் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.