எங்களுடைய திருமண புகைப்படங்களை நான் எடுத்து பார்க்கும்போது, என் விரல்கள் என் கணவரும் நானும் மணம்முடிந்தவுடன் முதலாவது எடுத்த படத்தை தொட்டது. உண்மையில் அன்றைக்கு நான் என்னை முழுவதுமாய் அவருக்கு ஒப்படைத்தேன். அவரோடு எங்கு வேண்டுமானாலும் செல்வேன்.

நாற்பது ஆண்டுகள் கழித்தும், நன்மையோ தீமையோ, எப்படி இருந்தாலும் சரி, அன்பும் பொறுப்புணர்வும் ஒருங்கே பிணைக்கப்பட்ட உறுதியான நூலினால் என் வாழ்க்கை இறுக்கமாகப் பின்னப்பட்டிருந்தது, ஒவ்வொரு வருடமும், நான் அவரோடுகூட எங்கும் செல்லுவேன் என்கின்ற என் பிரதிஷ்டையையும் புதுப்பித்தேன்.

எரேமியா 2:2-ல், வழிதப்பிய இஸ்ரவேல் என்னும் பிரியமானவளுக்காய் தேவன் ஏங்குகிறார், “நீ என்னை பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” அங்கே ‘பக்தி’ என்று சொல்லப்படும் எபிரேய வார்த்தை உன்னத ராஜவிசுவாசம் மற்றும் ஒப்படைப்பைக் காண்பிக்கிறது. ஆதியில் இஸ்ரவேல் தேவனிடம் இந்த மாசற்ற விசுவாசத்தை வெளிப்படுத்தினாள். ஆனாலும், நாளாக நாளாக அவள் பின்மாற்றம் அடைந்தாள்.

ஒப்படைப்பின் ஆரம்ப நிலையில் இப்படிப்பட்ட ஊக்கமும், உற்சாகமும் நம்மை பிடித்தாலும், பின்னர் ஒரு சாங்கோபாங்கமான மனநிலை அன்பின் கூர்முனையை மந்தமாக்குவதால், நமக்குள் காணப்படும் வைராக்கியம் குறைந்து விசுவாச துரோகத்திற்கு நேராக நம்மை நடத்துகிறது. நம்முடைய திருமணங்களிலே அப்படிப்பட்ட குறைவுகளுக்கு எதிராக போராடுவதன் முக்கியத்தை நாம் அறிந்திருக்கிறோம். தேவனோடு உள்ள அன்பின் உறவில் நம்முடைய ஆவல் எப்படிபட்டது? இந்த விசுவாசத்திற்குள் நாம் வந்தபோது நமக்கிருந்த பக்தி நீடிக்கிறதா?

கர்த்தர் உண்மையாய் தம்முடைய மக்கள் தம்மிடம் திரும்ப அனுமதிக்கிறார் (3:14-15). இன்றும் நாம் நம்முடைய பொருத்தனைகளைப் புதுப்பிக்கலாம்-எங்கிருந்தாலும் சரி!