எனது உயர் நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டில் ஒரு சனிக்கிழமை அதிகாலை நேரம், அருகிலுள்ள பௌலிங் கிளப்பில் எனது வேலைக்குச் செல்ல ஆவலாக இருந்தேன். முந்தின நாள் மாலையில் அங்கு வெகு நேரம் இருந்து தளமிடப்பட்ட தரையில் சகதியைத் துடைத்து துப்புரவு செய்துகொண்டிருந்தேன். ஏனெனில், அதற்கான பணியாள் உடல் நலக்குறைவால் வரவில்லை, இதனை நான் முதலாளியிடம் சொல்ல முயற்சிக்கவில்லை. அது முதலாளிக்கு வியப்பூட்டுவதாக இருக்கட்டும்,  இதில் என்ன தவறு நடந்துவிடப் போகிறது? என எண்ணினேன்.

ஆனால், அது அநேக விளைவுகளைத் தந்தது.

நான் வாசலில் கால் மிதித்தபோது சில அங்குலங்கள் உயரத்திற்கு தண்ணீர் நிற்பதையும் அதன் மேல் பௌலிங் கட்டைகள், காகித உருளைகள், மதிப்பெண் குறியீட்டு தாள் பெட்டிகள் மிதந்து வருவதையும் கண்டேன். அப்பொழுது தான் நான் என்ன செய்துவிட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். தரையைச் சுத்தப்படுத்திய போது பெரிய தண்ணிர் வால்வு ஒன்றினை இரவு முழுவதும் திறந்து விட்டிருந்திருக்கிறேன். நம்ப முடியவில்லை! எனது முதலாளி என்னைக் கட்டி அணைத்து புன்முறுவலோடு வரவேற்று “இது உன் முயற்சிக்காக” என்றார்.

சவுல் கிறிஸ்தவர்களைத் தண்டிப்பதிலும் துன்பப்படுத்துவதிலும் மும்மூரமாயிருந்தான் (அப். 9:1-2). ஆனால், தமஸ்குவுக்கு செல்லும் வழியில் இயேசுவை முகமுகமாய் சந்தித்தபோது (வச. 3-4), விரைவில் அப்போஸ்தலனாக மாற இருக்கும் பவுலின் பாவமான செய்கைகளை நேரடியாக இயேசு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பார்வை இழந்த சவுல்/பவுலுக்கு அனனியா என்ற ஒரு கிறிஸ்தவன் தேவைப்பட்டது. தைரியம் மற்றும் கிருபை நிறைந்த அனனியாவின் செயலினால் பார்வையை மீண்டும் பெற்றார் (வச. 17).

பவுலும் நானும் எதிர்பாராத கிருபையைப் பெற்றோம்.

அநேகர் குழம்பிய நிலையிலுள்ளதை நன்கு அறிவார்கள். அவர்களுக்கு நீண்ட விரிவுரைகளைக் காட்டிலும் இரட்சிப்பிற்கான நம்பிக்கை தேவை. கடின முகமும், குத்தும் வார்த்தைகளும் அவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தடுத்து விடும். அனனியா அல்லது என்னுடைய முதலாளி போன்ற இயேசுவைப் பின்பற்றுபவர்களின் கிருபை நிறைந்த முகம் நாம் எதிர்பாராது சந்திக்கும் நபர்களின் வாழ்வின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்