நானும் என் கணவனும், எங்களது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கு முன்பு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பிற்கு எங்களை ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்த பின்பு, நாங்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் எங்களை ஒப்புக் கொடுத்தோம். நாங்கள் சிறந்த ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்டதோடு, பரிசுத்த ஆவியானவர், எங்களைத் தனித்தனியாகவும், கணவன், மனைவியாகவும் சந்தித்து எங்களை மாற்றியமைக்க ஜெபித்தோம். எங்களது பரமபிதா தொடர்ந்து ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் தொடர்புகொள்ள உதவி செய்கிறார். தேவாதிதேவனை எப்படி நேசிப்பது எப்படி நம்புவது என்று கற்றுத்தருவதோடு என்ன நேரிட்டாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கற்றுத் தருகிறார்.

ஆயினும், நாங்கள் எங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், எங்களது சோதனைகளில், தேவன் செய்த அனைத்துக் காரியங்களையும். அவ்வப்பொழுது மறந்து விடுகிறேன். சில சமயங்களில் என் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள நான் அறியாத ஏதோ ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது. அதனால், தேவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளை சார்ந்திருக்காமல், தேவையற்ற கவலைகளை அடைகிறேன்.

உபாகமம் 1ம் அதிகாரத்தில், தேவனை எக்காலத்திலும் உறுதிபட நம்பலாம் என்று மோசே உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அவர்களது சுதந்திரமான தேசத்தை பெற்று மகிழ்ச்சியடைய முன்னேறிச் செல்லும்படி மோசே அவர்களை ஊக்கப்படுத்தினான் (வச. 21) ஆனால், தேவனுடைய ஜனங்கள் அவர்களது எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் முன்பு, அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் (வச. 22-33).

கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு பயமும், கவலையும் அடைவதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது. நாம் சந்திக்க இருக்கும் அல்லது சந்திக்காத கஷ்டங்களைக் குறித்து கவலைப்படுவது, நம்மை விசுவாசத்தை சார்ந்திருப்பதிலிருந்து நம்மை விலக்கி, நமக்கும் தேவனுக்கும், பிறருக்கும் உள்ள உறவை பாதிக்கும். ஆனால், தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராக இருந்த உறுதிப்பாட்டை நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்வார். நேற்றும், இன்றும் நாளையும் தேவனுடைய உண்மையான தன்மையின் மேல் நாம் தைரியத்துடனும்  நம்பிக்கையுடனும் சார்ந்திருக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.