உலக புகழ்பெற்ற வயலின் மேதை ஜோசுவா பெல், செயின்ட் மார்டின் உயர்கல்வி கூடத்தின் 44 உறுப்பினர்களைக் கொண்ட இசைக் குழுவினை நடத்தும் போது, அவர் எல்லா நடத்துனர்களும் பயன்படுத்தும் ஒரு சிறிய கோலை பயன்படுத்தாமல், அவர் தன்னுடைய உயர்தர வயலினை மற்றவர்களோடு சேர்ந்து இசைப்பதன் மூலம் நடத்தினார். பெல் ஒரு முறை கொலொரடா ஷேயோவிற்கு பேட்டியளித்தபோது “நான் என் இசைக்கருவியை வாசிக்கும் போது என்னால், நான் நினைக்கின்ற எல்லாவித வழிநடத்தலையும், குறியீடுகளையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்க முடிகிறது. என்னுடைய வயலினில் உள்ள ஒரு சிறிய இறக்கம் அல்லது என் கண்புருவத்தின் ஏற்றம் அல்லது நான் என் இசைமீட்டியை (bow) இழுக்கின்ற விதத்திலிருந்து அந்த முழு இசைக் குழுவினரும் நான் எத்தகைய ஒலியை எதிர்பார்க்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வார்கள் எனக் கூறினார்.

இந்த இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஜோசுவா பெல்லை உற்று கவனிப்பது போல வேதாகமும் நம்முடைய கண்களை இயேசு கிறிஸ்துவின் மீது வைக்குமாறு நமக்கு அறிவுறுத்துகிறது. எபிரெயர் 11ல் விசுவாச வீரர்களைப் பட்டியலிட்டப்பின் அதன் ஆக்கியோன் சொல்லுகிறார். “ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).

“இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என இயேசு வாக்களித்துள்ளார். அவர் என்றென்றும் நம்முடனே இருக்கிறபடியால், நம் வாழ்க்கையென்னும் இசையை அவர் மீட்டும் போது நம்முடைய கண்களை அவர் மீது நிறுத்தக் கூடிய மிக வியப்பூட்டும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம்.