கெல்லியின் கர்ப்பத்தில் பல சிக்கல்கள். மருத்துவர்கள் மிகவும் பயந்தனர். பிரசவ காலம் நீண்டபோது அவளை அவசரமாக சிசெரியன் பிரசவ முறைக்கு உட்படுத்தினார். எனினும் அந்தக் கஷ்டமான நடை முறையில்கூட தனது மகனைக் கையில் ஏந்திய கெல்லி விரைவில் தனது வேதனையை மறந்துவிட்டாள்.

இவ்வுண்மையை வேதாகமம் ஆமோதிக்கிறது: “ஸ்திரீயானவளுக்கு பிரசவகாலம் வந்திருக்கும் போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்” (யோவா. 16:21). மிக சீக்கிரத்தில் தாம் பிரிந்து செல்கையில் அவரது சீஷர்கள் துக்கமடைந்தாலும் அவரைத் திரும்பக் காணும்போது அவர்களது துக்கம் சந்தோஷமாகமாறும் என்பதை வலியுறுத்தவே இயேசுவானவர் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார் (வச. 20-22).

இயேசுவானவர் தமது மரணம் மற்றும் அதனையடுத்த உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டுப்பேசினார். அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின், சீஷர்கள் மகிழும்படி, இயேசுவானவர் 40 நாட்கள் அவர்கள் மத்தியில் சஞ்சரித்து, அவர்களுக்குப் போதனை செய்தார். பின்னர் பரமேறி மறுபடியும் அவர்களைப் பிரிந்தார் (அப். 1:3) எனினும் துக்கத்தில் மூழ்கியவர்களாய் அவர் அவர்களை விட்டுச் செல்லவில்லை. பரிசுத்த ஆவினானவர் சந்தோஷத்தால் அவர்களை நிரப்பினார் (யோவா. 16:7-15 அப். 13:52).

நாம் இதுவரை இயேசுவானவரை முகமுகமாய் தரிசிக்கவில்லை என்றாலும், ஒரு நாள் அவரைக் காண்போம் என்னும் உறுதிப்பாடு விசுவாசிகளாகிய நமக்கு உண்டு. அந்நாளில், இப்பூமியில் நாம் எதிர்கொள்ளும் அனைத்துத் துயரங்களும் மறக்கப்பட்டுப்போம் என்றபோதிலும் அதுவரை நம்மை சந்தோஷமற்றவர்களாக விடவில்வை. அவர் தமது ஆவியானவரை நமக்குத் தந்தருளியிருக்கிறார் (ரோம. 15:13; 1 பேது. 1:8-9).