இக்குவாசு நீர்வீழ்ச்சி பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே உள்ள எல்லையில் உள்ளது. அது 2.7 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும்; இக்குவாசு ஆற்றில் 275 நீர்வீழ்ச்சிகள் கூடிய வியக்கத்தக்க அழகிய நீர் வீழ்ச்சியாகும். பிரேசில் பக்கம் விழும் நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள சுவற்றில், “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலிமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமை உள்ளவர்” (சங். 93:4) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வசனத்திற்கு கீழாக “நமது அனைத்து துன்பங்களையும் விட தேவன் மேலானவர்” என்ற வார்த்தைகள் காணப்பட்டன.

இராஜாக்கள் அரசாண்ட அந்தக் காலத்தில் தேவனே எல்லோரையும் ஆழக்கூடிய முதன்மையான உயர்சிறப்புடைய இராஜாவென்று சங்கீதம் 93யை எழுதியவர் அறிந்திருந்தார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். உமது சிங்காசனம் பூர்வ முதல் உறுதியானது; நீர் அனாதியாய் இருக்கிறீர்” (வச. 1,2) என்று எழுதினார். வெள்ளங்களோ, அலைகளோ எவ்வளவு உயரமாக எழும்பினாலும், தேவன் அவற்றைவிட பெரியவராக இருக்கிறார்.

நீர் வீழ்ச்சியின் பேரோசை உண்மையில் மிகக் கம்பீரமான ஓசையாக இருக்கும். ஆனால் அளவிற்கு மீறிய வேகத்தில் நீர் வீழ்ச்சியை நோக்கி வரும் நீரோட்டத்தில் இருப்பது மிக ஆபத்தானது. ஒருவேளை இன்று உங்களுடைய நிலைமை அதைப்போலவே ஆபத்தில் இருக்கலாம். சரீரப் பிரகாரமான பிரச்சனைகள், அல்லது பொருளாதாரரீதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் அல்லது உறவுகளில் ஏற்பட்ட முறிவுகள் போன்றவை மிகவும் பெரிதாக அச்சமூட்டுபவைகளாக இருப்பதினால், நீங்கள் நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே விழும் அனுபவத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு கிறிஸ்தவராக பாதுகாப்பு அருளக்கூடிய ஒருவர் உண்டு. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்.” ஒருவர் உண்டு, அவரே நமது கர்த்தராவார் (எபே. 3:20). ஏனெனில் அவர் நமது அனைத்துத் துன்பங்களைவிட மேலானவர்.