50 வருடங்களுக்கும் மேலாக எனது நண்பரும் வழிகாட்டியுமாகவிருந்த பாப் போஸ்டர் (Bob Foster) என் மீதுள்ள நம்பிக்கையை தளர்த்தவேயில்லை. என் வாழ்வின் இருண்ட காலக்கட்டத்தில், அவரது மாறாத நட்பும், ஊக்குவித்தலும்தான் என்னை பலப்படுத்தியது. 

அதிகமான தேவையுடன் இருக்கும் சிலரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்யவேண்டும் என்ற திடமான எண்ணத்துடன் நாம் உதவிக் கரத்தை நீட்டுவோம். ஆனால் உடனடியாக எந்த மாற்றத்தையும் நாம் காணாதபோது, நமது தீர்க்கமான எண்ணம் சற்றே தளர்வடைய ஆரம்பிக்கும், பின்னர் அந்த எண்ணத்தை கைவிட்டுவிடுவோம். உடனடியான மாற்றத்தை எதிர்பார்த்த நமக்கு அது ஓர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  செயல்முறை என்பது அப்போதுதான் விளங்க ஆரம்பிக்கும். 

வாழ்வின் தடுமாற்றங்களையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கும்போது பொறுமையுடன் உடன் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்று அபோஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலா. 6:2) என்று பவுல் கூறும்பொழுது விதை விதைத்து, வேலைசெய்து, அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயியுடன் நமது வாழ்வை ஒப்பிடுகிறார். 

எவ்வளவு நாள்தான் நாம் இவ்வாறு ஜெபித்து நேசக்கரத்தை நீடிக்கொண்டிருப்பது? “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம் (கலா: 6:9). எத்தனை தரம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம் (கலா. 6:10). 

பிறருக்காக ஜெபித்து, அவர்களிடம் உண்மையுள்ளவர்களாயிருந்து, நம்பிக்கையை விட்டு விடாமலிருக்க அவர் மீது நம்பிக்கை வைக்குமாறு தேவன் நம்மை இன்றைக்கு உற்சாகப் படுத்துகிறார்.