ஓர் அதிகாலை நேரத்தில், லண்டன் மாநகரின் நெரிசலான பயணிகள் ரயிலில் பயணித்த ஒருவர், தன் வழியில் குறுக்கிட்ட ஒரு சக பயணியை நெருக்கித் தள்ளி அவமதித்து பேசினார். பொதுவாக தீர்க்கப்படாமலேயே போய்விடுகிற ஒரு துரதிஷ்டவசமான புத்திக்கெட்ட ஒரு தருணம் அது. ஆனால் அன்றைய தினம்  எதிர்பாராதது நடந்தது. ஒரு வணிக மேலாளர் தன்னுடைய ஊடக நண்பர்களுக்கு விரைவுச்செய்தி ஒன்றை அனுப்பினார். “இன்று ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு யார் வந்தார் என்று தெரியுமா?” பின்பு அச்செய்திக்குரிய விளக்கம் இணையதளத்தில் வந்த பொழுது, உலகமெங்கிலுமுள்ள மக்கள் அதை படித்துவிட்டு முகம் சுளித்து புன்னகைத்தனர். நீங்கள் ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு சென்றபொழுது, அன்று காலை நீங்கள் அவமதித்து தள்ளிய அதே நபர் உங்களை தேர்வு செய்பவராக இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதுதான் அன்று நடந்தது. அதைத்தான் அந்த வணிக மேலாளரும் பகிர்ந்து கொண்டார்.

சவுலும்கூட தான் எதிர்பார்க்காத ஒரு நபரை வழியிலே எதிர்கொண்டான். கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களுக்கு எதிராக சீற்றம் கொண்டு அவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த சவுல் (அப். 9:1-2), பிரயாணம் செய்து கொண்டிருந்த பொழுது, வழியிலே கண்களைக் கூச செய்கிற மிகப் பிரகாசமான ஒளி பிரகாசித்து அவன் பயணத்தை தடைசெய்தது. அப்பொழுது, “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?”(வச. 4 ) என்கிற சத்தம் கேட்டது. உடனே சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டதற்கு, “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே,” என்று கர்த்தர் பதிலுரைத்தார் (26:15).

பசியாயிருப்பவர்களையும், தாகமாயிருப்பவர்களையும், அந்நியர்களையும், சிறையிலிருப்பவர்களையும் நாம் நடத்தும் விதம் தேனோடு உள்ள நம்முடைய உறவை பிரதிபலிக்கும் என்று சில வருடங்களுக்கு முன்புதான் இயேசு கூறியிருந்தார் (மத். 25:35-36). நம்மை யாரேனும் அவமதிக்கும் பொழுது அல்லது நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது அல்லது நம்மை யாரேனும் காயப்படுத்தும் பொழுது, நம்மை நேசிக்கிற கர்த்தர் அவை எல்லாவற்றையும் தனக்கு செய்ததாகவே கருதுவார் என ஒருவரும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை!