இங்கிலாந்து தேசத்தின் லண்டன் மாநகரிலுள்ள தேசிய புகைப்படக்கூடத்தில் பல நூற்றாண்டுகளுக்குரிய உருவப்படங்கள் உள்ளன. வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 166 உருவப்படங்களும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் (William Shakespeare) 94 உருவப்படங்களும், ஜார்ஜ் வாஷிங்டனின் (George Washington) 20 உருவப்படங்களும் உண்டு. இந்தப் பழைய உருவப் படங்களைப் பார்க்கும்பொழுது, ‘உண்மையாகவே இவர்களெல்லோரும் இப்படித்தான் இருந்தார்களா?’ என எண்ணத் தோன்றும்.

உதாரணத்திற்கு, ஸ்காட்லாந்து (Scotland) தேசபக்தர் வில்லியம் வாலஸின் (William Wallace கி. பி. 1270-1305) 8 உருவப்படங்கள் இங்கு உள்ளன. ஆனால் அவற்றின் நேர்த்தியை ஒப்பிட்டுப் பார்க்க அவரது வேறு புகைப்படங்கள் நம்மிடம் இல்லை. அப்படியிருக்க, அவ்வோவியர்கள் வாலஸ்சை துல்லியமாக வரைந்துள்ளார்களா இல்லையா என நமக்கு எப்படித் தெரியும்?

இயேசுவின் சாயலைப் பிரதிபலிக்கும் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது என்று கூறலாம். நம்மை அறியாமலேயே இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம் இயேசுவை குறித்து ஒரு கருத்துப்பதிவை அல்லது இயேசுவை பற்றிய ஒரு உருவகத்தை பிறரிடம் ஏற்படுத்திவிடுகிறோம். இதை வர்ணங்களினால் அல்ல மாறாக நம்முடைய அணுகுமுறை, செய்கைகள் மற்றும் உறவுகளின் மூலமே தீட்டுகிறோம்.

ஆனால், இயேசுவின் இருதயத்தை அவ்வண்ணமே பிரதிபலிக்கும் ஓவியத்தைத் தீட்டுகிறோமா? இதுதான் அப்போஸ்தலனாகிய பவுலின் அக்கறையுள்ள கேள்வியும் கூட. “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என அவர் எழுதியுள்ளார் (பிலி. 2:5). இயேசுவை மிகத் துல்லியமாக பிரதிபலிக்க விரும்பிய பவுல், அவரை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அனைவரும் இயேசுவின் தாழ்மையையும், தன்னலமற்ற தியாகத்தையும், இரக்கத்தையும் பிரதிபலிக்கும்படி அன்பாய் நம்மை தூண்டுகிறார்.

“ஒருவேளை தங்கள் வாழ்வில் சிலர் காணும் இயேசு நாமாக மாத்திரமே இருக்கக்கூடும்,” என ஒரு கூற்றுண்டு. “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வச. 3) என்கிற வசனத்தின்படி நடப்போமானால் இயேசுவின் இருதயத்தையும், மனதையும் இவ்வுலகிற்கு அவ்வண்ணமே பிரதிபலிப்போம்.