லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற போதகரான சார்லஸ் ஸ்பர்ஜன், போதகர்களை ஊழியத்திற்கு பயிற்றுவிப்பதற்காக போதகர்களுக்கான கல்லூரி ஒன்றை 1856ல் ஸ்தாபித்தார். 1923ம் ஆண்டு அது ஸ்பர்ஜன் கல்லூரி என்று மறுபெயர் சூட்டப்பட்டது. இன்று அந்தக் கல்லூரியின் அடையாள சின்னத்தில் சிலுவையைப் பற்றிப்பிடித்துள்ள ஒரு கரமும், “நான் பிடித்துள்ளேன், நான் பிடிக்கப்பட்டுள்ளேன்” என்ற அர்த்தம் கொள்ளும் லத்தீன் மொழி வார்த்தைகளும் உள்ளன. ஸ்பர்ஜன் அவரது சுய சரிதையில், “உறுதியான கரத்துடன் நாங்கள் சிலுவையைப் பற்றியுள்ளோம். ஏனென்றால் சிலுவை அதனுடைய ஈர்க்கும் சக்தியினால் எங்களை இறுகப்பற்றியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் சத்தியத்தைப் பற்றிக்கொள்ளவும், சத்தியத்தால் பற்றிக்கொள்ளப்படவும், விசேஷமாக சிலுவையில் மரித்த கிறிஸ்துவின் சத்தியத்தைப் பற்றிக்கொள்ள ஆவலாக இருக்கிறோம். இதுவே எங்களது கல்லூரியின் குறிக்கோள் வாசகம்” என்று எழுதியுள்ளார்.

பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் பவுல் இந்த சத்தியம் தான் அவரது விசுவாசத்திற்கு உறுதியான அடித்தளம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். “நான் அடைந்தாயிற்று… கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்” (பிலி. 3:12). இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மை, அவர் அவருடைய கிருபையினாலும், வல்லமையினாலும் தாங்குவதினால் சிலுவையின் செய்தியை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளுகிறோம். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20).

நம்முடைய கர்த்தர் ஒவ்வொரு நாளும் நம்மை அவரது அன்பின் பிடிப்பில் வைத்திருக்கிறார். அவருடைய இந்த அன்பின் செய்தியை நாம் பிறரோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.