மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு சொற்பொழிவில், ஒரு அரசியல்வாதியும், மதிப்பிற்குரிய தலைவருமானவர், அவரது தேசத்தின் மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பலர் நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அறிவித்ததின் மூலம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார். லஞ்ச ஊழலுக்கு உட்பட்ட ஒழுக்கக் கேடான, பகட்டான வாழ்க்கை முறை, வெறுப்பூட்டுகிற வார்த்தைகள் மற்றும் பல கேடுபாடுகளுடன் அவர்கள் வாழ்கிறார்களென்று பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் கடிந்துகொண்டு, அவர்கள் சீரான வாழ்க்கை வாழ வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார். எதிர்பார்த்ததுபோல அவருடைய கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு-கண்டனம் தெரிவித்தார்கள்.

நாம் பொதுவாழ்க்கையில் உள்ள அதிகாரியாகவோ, தலைவராகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறோம்” (1 பேது. 2:9). இப்படியாக, நாம் கர்த்தரை மகிமைப்படுத்ததக்கதான வாழ்க்கை வாழவேண்டுமென்று கர்த்தர் நம்மை அழைக்கிறார்.

இயேசுவின் சீஷனாகிய பேதுரு இப்படியான வாழ்க்கை வாழ்வதற்காக நாம் செயல்படுத்த வேண்டிய சில ஆலோசனைகளைப்பற்றி கூறியுள்ளார். “நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலக” வேண்டுமென்று நமக்கு ஆலோசனை கூறுகிறார் (1 பேது. 2:11). அவர் மதிப்பிற்குரிய என்ற வார்த்தையை பயன்படுத்தாவிட்டாலும், கிறிஸ்துவுக்கு ஏற்ற நடத்தை உடையவர்களாக இருக்க வேண்டுமென்று நம்மை அழைத்துள்ளார்.

பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தில் எழுதியுள்ளதுபோல “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” (பிலி. 4:8). உண்மையில் இவைகள் தான் கர்த்தரை மகிமைப்படுத்தக்கூடிய நடத்தையின் குணாதிசயங்களாகும்.