டேவிட் நாசர் தீயின் வழியாக குதித்தல் (Jumping Through Fires) என்ற அவரது புத்தகத்தில், அவரது ஆன்மீக பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இயேசுவோடு கூட அவரது உறவைத் துவங்கும் முன்பாக ஒரு கிறிஸ்தவ பதின் வயதுடைய குழுவினர் அவரோடு சிநேகிதர் ஆனார்கள். பொதுவாக அந்த சிநேகிதர்கள் தாராள மனதுடனும், நல் நடத்தையுடனும் எதைக்குறித்தும் தீர்ப்புச் சொல்லாமல் இருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் அவனது பெண் தோழியிடம் பொய் கூறினதை டேவிட் பார்த்தான். பொய் கூறின அவனது தோழன் பின்பு மனதில் குத்தப்பட்டவனாக அந்தப் பெண்ணிடம் அவனது தவறை அறிக்கையிட்டு அவளிடம் மன்னிப்பு கேட்டான். இதைக்குறித்து, அந்த நிகழ்ச்சி டேவிட்டை அவனது கிறிஸ்தவ நண்பர்களோடு மேலும் நெருக்கமாக இணைத்தது என்று கூறினான். அவனைப் போலவே அவர்களுக்கும் கிருபை தேவைப்பட்டது என்பதை டேவிட் அறிந்தான்.

நாம் அறிந்துள்ள மக்களோடு கூட நாம் பழகும்பொழுது, நாம் குறைவே இல்லாதவர்கள் போல நடிக்கத் தேவை இல்லை. நமது தவறுகள், போராட்டங்கள் பற்றி நாம் உண்மையான உள்ளத்தோடு இருப்பது நல்லது. 1 தீமோத்தேயு 1:15ல் பவுல் அப்போஸ்தலன் மற்ற எல்லாரையும் விட அவர் ஒரு பிரதான பாவி என்று திறந்த மனதோடு தன்னைப் பற்றிக் கூறியுள்ளார். ரோமர் 7ல் பாவத்தோடு கூடிய அவரது போராட்டத்தை தெளிவாக விளக்கியுள்ளார். “நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை” (ரோம. 7:18). துரதிர்ஷ்ட வசமாக அதற்கு எதிர் மறையானதும் உண்மைதான். “நான் விரும்பாத தீமையையே செய்கிறேன்” (வச.19).

நமது போராட்டங்களை மறைக்காமல் திறந்த மனதோடுகூட ஒத்துக்கொள்வது, நம்மை மற்ற மனிதர்களோடு சம நிலையில் வைக்கிறது. உண்மையில் அதுதான் நமது நிலை. ஆயினும் நமது பாவங்கள் இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் நித்தியத்தில் நம்மை பின்தொடராது. இது “கிறிஸ்தவர்கள் குற்றமற்றவர்கள் அல்ல, ஆனால் மன்னிக்கப்பட்டவர்கள்” என்ற முதுமொழிக்கு ஏற்ப உள்ளது.