ஜார்ஜியாவில் உள்ள சாவன்னா பகுதியில் வரலாற்றுப் புகழ்மிக்க நதியிம் நடைபாதைப் பகுதியின் தளங்களில் வெவ்வேறு விதமான கூழாங்கற்களால் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அட்லாண்டிக் கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்களை நிலைப்படுத்த பெரிய சரளைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள். ஜார்ஜியாவில் சரக்குகளை ஏற்றியபின் இந்த சரளைக்கற்கள் தேவையில்லாததால், அவற்றை கப்பற்கட்டும் தளத்திற்கு அருகேயுள்ள வீதிகளில் தளம் அமைக்க அவை பயன்படுத்தப்பட்டன. அந்தக் கற்கள் தங்கள் முக்கியமான பணியாக ஆபத்தான நீர்களின் மத்தியில் கப்பல்கள் நிலையாக நிற்பதற்கான சீரிய பணியை செய்து முடித்தன.

இன்று நாம் வாழும் நாட்களில் கொந்தளிக்கும் பெருங்கடல்களின் மத்தியில் அலைமோதுவது போன்ற உணர்வுகள் நமக்கு ஏற்படலாம். பண்டைய காலத்தில் கப்பல்கள் பயணம் செய்வதற்கு ஸ்திரத்தன்மை தேவைப்பட்டது போல் நமக்குப் புயல்வீசும் வாழ்வைக் கடந்து செல்ல நமக்கும் உறுதியான பக்கபலம் தேவைப்படுகிறது. தாவீதும் இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலைகளை, நம்பிக்கையற்ற நிலையில் கடந்து வந்தபின் மிகவும் உறுதியாக தேவனுடைய பண்புகளை மகிமைப்படுத்தினவனாய் “பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார்” என்று பிரஸ்தாபிக்கிறான் (சங். 40:2). தாவீதின் வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்ததும், தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி, குடும்பப் பூசல்கள் நிறைந்த அனுபவங்களாக இருந்தன. ஆனாலும் தேவன் அவனுக்கு ஓர் நிலையான வாழ்க்கையைத் தந்தார். அதனால்தான் “தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்” என்று தாவீது பாடினான் (சங். 40:3).

இக்கட்டான சமயங்களில் நாமும் உறுதியான வாழ்வைத் தரக்கூடியவராகிய வல்லமையுள்ள தேவனை மாத்திரம் பார்க்கக்கடவோம். அவர் நம்மீது கொண்டுள்ள உண்மையான கரிசனை நம்மையும் உற்சாகப்படுத்தி “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தம் செய்த உம்முடைய அதிசயங்களும், உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது” என்று சொல்லுவோம் (வச.5).