ரிச்சர்டு, கெவின் என்ற சிநேகிதனோடு சேர்ந்து மலை ஏறிக்கொண்டிருந்த பொழுது, அவனுக்கு ஒரு உந்துதல் தேவைப்பட்டது. மலை ஏறுபவர்கள் பத்திரமாக ஏறுவதற்கு கயிற்றைப் பிடித்திருக்கும் பணியை செய்பவனாக கெவின் இருந்தான். மிகவும் களைப்படைந்த நிலையில் மலை ஏறுவதை கைவிடக்கூடிய நிலைக்கு ரிச்சர்ட் தள்ளப்பட்டான். ஆகவே கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த கெவினிடம், தன்னை கீழே இறக்கி விடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். மலை ஏற்றத்தை நிறுத்தி விடக்கூடாத உயரத்திற்கு ரிச்சர்டு ஏறிவிட்டான். ஆகவே, கீழே இறங்குவதை விட்டு விட்டு மேலே ஏறவேண்டும் என்று கெவின் ரிச்சர்டை ஊக்கப்படுத்தினான். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ரிச்சர்டு மேலே ஏற முயற்சி எடுக்க தீர்மானித்தான். ஆச்சரியப்படத்தக்கதாக அவன் மறுபடியும் பாறைகளைப் பற்றிப் பிடித்து ஏற முடிந்தது. ரிச்சர்டு அவன் சிநேகிதனின் ஊக்கப்படுத்துதளினால் மலை ஏற்றத்தை நிறைவு செய்தான்.

ஆதித்திருச்சபையில் இயேசுவைப் பின்பற்றின விசுவாசிகள் கர்த்தரைப் பின்பற்றவும், பிறர்மேல் இரக்கத்தைக் காண்பிக்கவும், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டார்கள். ஒழுக்கச் சீர்கேடு நிறைந்திருந்த சமுதாயத்தில் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒருவரையொருவர் மிக ஆழமான அன்போடு கூட வேண்டிக்கொண்டார்கள் (ரோம. 12:1, 1 தெச. 4:1). தேவன் சொன்னபடி விசுவாசிகள் அனுதினமும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டார்கள் (அப். 13:15). சரீரமான சபைக்காக வேண்டுதல் செய்யும்படி ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டு (ரோம. 15:30), அந்த சரீரமாகிய சபையில் மக்கள் ஒருவரோடொருவர் இணைந்திருக்க உதவும்படியாகவும் (எபி. 10:25) மேலும், அதிகம் அதிகமாய் அன்பு செலுத்தும்படியாகவும் வேண்டிக்கொண்டார்கள் (1 தெச. 4:10).

இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதலின் மூலம் அவர் நம் ஒவ்வொருவரையும் இணைத்துள்ளார். ஆகவே, சக விசுவாசிகள் இயேசுவை நம்புவதிலும், கீழ்ப்படிதலிலும் தொடர்ந்து முன்னேறி அவர்களது விசுவாச வாழ்க்கையை வெற்றிகரமாக முடிக்க, தேவனுடைய பலத்தினால் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு நமக்கு பொறுப்பும், வாய்ப்பும் உண்டு.